பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி காலத்தில் பல ஆயிரம் தொழில் முனைவோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக மேற்கு வங்க நிதியமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
பிரதமர் மோடியின் ஆட்சிகாலத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து, 2020 வரையிலான காலத்தில், 35,000 தொழில் முனைவோர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
மேற்கு வங்க மாநில நிதியமைச்சர் அமித் மித்ரா, தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மோடி தலைமையிலான அரசினை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவை விட்டு வெளியேற்றம்
இது குறித்த ட்விட்டர் பதிவில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில், 35,000 ஹை நெட்வொர்த் கொண்ட இந்திய தொழில் முனைவோர்கள், 2014 - 2020ம் காலகட்டத்தில், இந்தியாவினை விட்டு வெளியேறிவிட்டனர். இவர்களில் வெளி நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வந்து வர்த்தகம் செய்ய வந்த வர்த்தகர்களும் அடங்குவர்.
நிதியமைச்சர் சாடல்
உலகிலேயே ஒரு இடத்தில் இருந்து மக்கள் இப்படி வெளியேறுவதில், இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. ஏன்? இது அச்ச நிலையா? இது குறித்து பிரதமர் மோடி அரசு நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையான பதிவினை பதிவிட்டுள்ளார் மித்ரா.
மார்கன் ஸ்டான்லி அறிக்கை
மார்கன் ஸ்டான்லி அறிக்கையின் படி, கடந்த 2014 முதல் 2018ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், 23,000 ஹை நெட்வொர்த் கொண்ட தொழில் முனைவோர்கள் நாட்டைவிட்டு வெளியேறியதாக குறிப்பிட்டுள்ளது. இதே போல ஆசிய ஆப்பிரிக்கா வங்கி அறிக்கையின் படி, 2019ல் 7,000 பேர் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர். இதே GWMன் அறிக்கையின் படி, 5000 தொழில் முனைவோர் 2020ல் இந்தியாவை விட்டு வெளியேறியதாகவும் கூறியுள்ளனர்.
ஏன் கண்டிக்கவில்லை
பியூஸ் கோயலின் இந்திய வணிகத்திற்கு எதிரான 19 நிமிட பேச்சினை நினைவு கூறுங்கள். இந்திய தொழிற்துறையின் வர்த்தக நடைமுறைகள் நாட்டின் நலனுக்கு எதிரானது. இது தேசவிரோதம். மனதில் ஏற்பட்ட அச்சத்தினால், தொழில் முனைவோர் நாட்டில் இருந்து வெளியேறத் தூண்டுகின்றது என்று கூறியிருந்தார். இவ்வாறு கூறியதற்காக பிரதமர் மோடி கோயலை ஏன் கண்டிக்கவில்லை என மித்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.