பறவை மோதி விமானம் கீழே விழுமா? பறவை மோதி விமானம் கிழே விழுந்ததால் பயணிகள் இறந்தனரா? என்ற செய்தி மிக ஆச்சரியத்தினையும் வேதனையையும் கொடுக்கலாம். ஆனால் வருடந்தோறும் பறவைகளால் விமான விபத்துகள் ஏற்பட்டு கொண்டு தான் இருக்கின்றன.
கடந்த ஆண்டில் மட்டும் 50 முறை விமானங்களில் பறவைகள் சிக்கிக் கொண்டதாகவும், விமான நிலையங்களின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சமீப காலமாகப் பறவைகள் மோதி, சில விமான விபத்துகள் ஏற்பட்டுள்ள செய்திகளை கேள்விபட்டிருக்கலாம். இதற்கு என்ன காரணம் பறவை மோதி விமானம் கீழே விழுமா? பறவை தாக்குதல் (Bird Strike) என்றால் என்ன? இதனால் எந்த மாதிரியான பிரச்சனைகள் வருகின்றன. இந்த பிரச்சனையை எப்படி தவிர்ப்பது? வாருங்கள் பார்க்கலாம்.
பறவை தாக்குதல் என்றால் என்ன?
பொதுவாக ஒரு விமானம் பறக்கும்போது பறவைகள் தாக்கும் நிகழ்வானது பறவை தாக்குதல் (Bird Strike) என்று அழைக்கப்படுகிறது.
பறவைகளும், விமானங்களும் மோதிக் கொள்வதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் விமானங்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவது முக்கிய காரணம். தவிர பழைய விமானங்களில் பிஸ்டன் என்ஜின்கள் பொருத்தப்பட்டிருந்தன. இவற்றை இயக்கும் போது அதிக இரைச்சல் உருவாகும். இதனால் வரவிருக்கும் ஆபத்தை உணர்ந்து பறவைகள் விலகிச் செல்ல வாய்ப்பு இருந்தது.
பிஸ்டன் இன்ஜின்
அதோடு விமானத்தின் மீது பறவை மோதினாலும், விமானத்தின் பிஸ்டன் என்ஜின் அருகே பொருத்தப்பட்டுள்ள புரொபெல்லர்கள் சுற்றிக்கொண்டே இருப்பதால், பறவையின் ஒரு பகுதியை அவை வெட்டிவிடும். அல்லது பறவையை அந்த இடத்திலிருந்து தள்ளிவிடும். இதனால் விமானத்துக்கு எந்த வித பிரச்சனையும் ஏற்படாமல் இருந்தது.
ஜெட் இன்ஜின்கள்
ஆனால் ஜெட் இன்ஜின்கள் அறிமுகமான பிறகு அதற்கு வாய்ப்பில்லாமல் போனது. இவற்றின் வேகமும் அதிகம். அதேசமயம் ஜெட் விமானங்கள் எழுப்பும் சத்தமும் குறைவாக உள்ளது. இது தவிர ஜெட் என்ஜின்கள் காற்றை உள்ளிழுத்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. ஆக காற்றோடு பறவையையும் உள்ளே உறிஞ்சி கொள்கின்றன. இதனால் என்ஜினில் பிரச்சனை ஏற்பட வழிவகுக்கிறது.
என்ன பிரச்சனை?
இந்த பறவை தாக்குதல் என்பது சிறிய பிரச்சனையாக இருந்தாலும், இதனால் இன்ஜினில் பிரச்சனை ஏற்பட்டு ஒட்டொமொத்த விமானமும் பிரச்சனைக்குள்ளாகிறது. விபத்து ஏற்படும் நிலை உருவாகிறது. இது பெரும்பாலும் லேண்டிங் ஆகும் போதே அல்லது பறக்கும்போதோ உருவாகிறது. இது தினசரி நடக்கும் ஒரு நிகழ்வாகத் தான் உள்ளது. எனினும் சில நேரங்களில் இது பெரும் விபத்தாகவும் மாறுகிறது.
என்னென்ன நடவடிக்கைகள்?
உலகெங்கிலும் உள்ள விமான நிலையங்கள் விமானங்களுக்கு அருகில் வருவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக விமான நிலையத்தினை சுற்றியுள்ள தண்ணீர் நிறைந்த பகுதிகள், புதர்கள், மரங்கள் என பலவற்றை குறைக்க முயற்சி செய்கின்றன. பறவைகளுக்கு உணவு வழங்குவதன் மூலம் ஓடுதளங்களில் இருந்து விலக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
விமான துறை சந்திக்கும் சவால்கள்
சமீபத்திய காலமாக விமான துறையானது பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. கொரோனா தாக்கம், அதனை தொடர்ந்து நாடு தழுவிய லாக்டவுடன், ரஷ்யா உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் அதிகரித்து வரும் எரிபொருள் விலை என பல காரணிகளுக்கு மத்தியில், பறவை தாக்குதல் என்பதும் விமான துறைக்கு பெரும் சவாலான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.