ஜூலை 1ஆம் தேதி முதல் இந்தியாவில் பல்வேறு முக்கியமான நிதி சம்பந்தப்பட்ட மாற்றங்கள் நடைமுறைக்கு வர இருக்கின்றன. சிலிண்டர் விலை தொடங்கி ரயில் டிக்கெட், பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணம் என இந்த மாற்றங்கள் அனைத்து சாமானிய குடும்பங்களின் பட்ஜெட்டையே பதம் பார்க்க போகின்றன என்பதால் இவற்றை தெரிந்து வைத்து கொள்வது நல்லது.
சிலிண்டர் விலை: ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் இண்டேன் , பாரத் கேஸ், ஹெச்பி ஆகிய நிறுவனங்கள் சிலிண்டர் விலைகளை மாற்றி அறிவிப்பு வெளியிடும். ஈரான் போர் காரணமாக மார்ச் மாதம் முதல் இந்தியாவில் வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் கடைகள், ஓட்டல்களில் பயன்படுத்தப்பட கூடிய வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலைகள் உயர்த்தப்பட்டன. தற்போது ஈரான் போர் முடிவுக்கு வந்திருக்கக்கூடிய சூழலில் அதனை அடிப்படையாகக் கொண்டு சிலிண்டர் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. இது ஜூலை ஒன்றாம் தேதி அன்று காலை தெரிந்துவிடும். விலை குறைந்தால் நம்முடைய பட்ஜெட்டிற்கு நல்லது , விலை கூடினாலும் மாறாமல் இருந்தாலும் நமக்கு ஏமாற்றம் தான்.

வருமான வரி கணக்கு தாக்கல்: 2025-26 நிதியாண்டுக்கான (மதிப்பீட்டு ஆண்டு 2026-27) வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் தேதி கடைசி தேதியாகும். எனவே இந்த ஜூலை மாதம் வேலைக்கு செல்லும் அனைவருக்குமே ஐடிஆர் எனப்படும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான ஒரு மாதம். ஜூலை 31க்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய தவறினால் அபராதம் விதிக்கப்படலாம்.
ஆதார் கார்டு: ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட உங்கள் மின்னஞ்சல் முகவரியை அப்டேட் செய்வதற்கான கட்டணத்தை UIDAI ரத்து செய்துள்ளது. ஜூலை 1, 2026 முதல் டிசம்பர் 31, 2026 வரை ஆதார் மொபைல் ஆப் மூலம் இதை இலவசமாகச் செய்துகொள்ளலாம். முன்பு இதற்கு ரூ. 75 கட்டணம் வசூலிக்கப்பட்டது.

ரயில்கள்: இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளம் மேம்படுத்தப்பட்டு ஜூலை 15ஆம் தேதி முதல் நவீன வசதி கொண்ட புதிய இணையதளம் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. அதே போல ரயில்களில் அபாயகரமான பொருட்களைக் கொண்டு செல்வதற்கான அபராதம் ரூ. 250இல் இருந்து ரூ. 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முறையான உரிமம் இன்றி பொருட்கள் விற்பனை செய்தல் அல்லது பெண்களுக்கான பெட்டிகளில் அனுமதியின்றி பயணம் செய்தல் போன்ற விதிமீறல்களுக்குக் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் கட்டணம்: பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வதற்கான கட்டணம் ஜூலை 1 முதல் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண மற்றும் தட்கல் விண்ணப்பங்களுக்கான சேவை கட்டணங்கள் ரூ.1000 பாய், 2000 என உயர்த்தப்படுகின்றன. எனவே நாளைக்குள் பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வதால் ரூ.1000 முதல் ரூ.2000 வரை பணம் மிச்சப்படுத்த முடியும்.
ஆர்பிஐ - நிதி மோசடி தடுப்பு விதிகள்: நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் நிதி தயாரிப்புகளை தவறான முறையில் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதைத் தடுக்க ரிசர்வ் வங்கி (RBI) புதிய விதிமுறைகளை அமல்படுத்துகிறது. இதனால், தவறாக வழிகாட்டப்பட்ட வாடிக்கையாளர்கள் ஜூலை 1 முதல் இழப்பீடு அல்லது பணத்தைத் திரும்பப் பெறும் உரிமையை பெறுவார்கள்.


Click it and Unblock the Notifications

