இந்தியாவில் இன்று மிக வேகமாக பரவி வரும் ஸ்டார்ட்அப் கலாச்சாரம், நாட்டில் வேலை வாய்ப்புகளை பெருக்குவதோடு, நாட்டின் பொருளாதாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அப்படிப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கடந்த ஆண்டில் கொரோனா காலத்தில் பெரும் பின்னடைவை சந்தித்தன.
எனினும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் என்றால், புதுமையான விஷயங்கள், வேலை வாய்ப்புகள் என பலவற்றையும் கொண்டுள்ளதால், இவை நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இதனால் வரவிருக்கும் பட்ஜெட்டில் இந்த துறைக்கு எந்தமாதிரியான ஊக்குவிப்புகள் இருக்கப் போகின்றன. இவை கொரோனாவால் பின்னடைவை சந்தித்துள்ள நிறுவனங்களுக்கு எப்படி உதவப்போகின்றது என்றெல்லாம் எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனாவால் பாதிப்பு
2020ம் ஆண்டில் கொரோனாவால் பலவித சோதனைகளை எதிர்கொண்ட நிலையில், இந்த ஆண்டு புதுமையாக்கம் மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டும் என இந்திய ஸ்டார்ட் அப் துறை எதிர்பார்க்கிறது. அதோடு கொரோனா இந்தியாவை மட்டும் அல்ல, உலகின் பெரும்பாலான நாடுகளையும் பாடாய்படுத்தி வருகின்றது.
முதலீடுகள் குறைவு
இதனால் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் செய்யப்படும் அன்னிய முதலீடுகளும் குறைந்துள்ளது. அதிலும் கொரோனா காரணமாக பின் தங்கியுள்ள நிலையில், அவற்றை மீட்க புதிய மூலதன முதலீடுகள் தேவைப்படுகின்றன. ஆனால் மற்ற நாடுகளிலும் கொரோனா பாதிப்பின் காரணமாக முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய முடியாமல் உள்ளன.
பல பிரச்சனைகள்
எனினும் பல விதமான மோசமான சவால்களையும் தாக்குபிடித்துக் கொண்டு, பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. அப்படி பல பிரச்சனைகளில் ஒன்று தான் வரி பிரச்சனை. இரண்டாவது அன்னிய முதலீடுகள் வரத்து. இது பல விதமான கடுமையான விதிகளுக்கு மத்தியில் கிடைப்பது கடினமாக உள்ளது. இந்தியாவில் இன்றளவில் சுமார் 55,000 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உள்ளன. இதில் சுமார் 3200 ஸ்டார்ட்அப்கள் 63 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகளை கடந்த ஐந்து ஆண்டுகளில் நிறுவியுள்ளன.
90% தோல்வி
ஆனால் இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இந்தியாவில் ஆரம்பிக்கப்படும் 90% ஸ்டார்ட்அப்கள், தங்களது தொழில் வெற்றி பெறுவதற்கு முன்பே தோற்று போகின்றன. இந்த மோசமான நிலைக்கு காரணங்கள் என பல இருந்தாலும், அதில் முக்கியமான ஒன்று உள்கட்டமைப்பு என்பது சரியாக இல்லாதது தான். இது பணப்புழக்க சிக்கல்கள் மற்றும் முதலீட்டாளர்களின் பற்றாக்குறை, வரி மேலாண்மை பிரச்சனை உள்ளிட்டவற்றிற்கு தான் வழிவகுக்கும்.
ஸ்டார்டப்கள் எதிர்பார்ப்பு
ஆக ஸ்டார்ட்அப்கள் வரவிருக்கும் பட்ஜெட்டில் தங்களது பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கத்தினை எதிர்பார்க்கின்றன. இந்திய அரசு சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் தொழில் தொடங்க எளிதான வழிகளை கையாளுகின்றன. இதன் எதிரொலியாகத் தான் சர்வதேச பட்டியலிலும் முன்னேறி வருகின்றது. கடந்த ஆண்டில் 190 நாடுகளில் 14 இடங்கள் முன்னேறி இந்தியா 63வது இடத்தினை பிடித்தது.
விதிகள் எளிமையாக இருக்க வேண்டும்
இது ஒரு புறம் வரவேற்கதக்க விஷயம் என்றாலும், நமக்கு முன்பு 62 பேர் உள்ளனர் என்பது நினைவுகூறத்தக்கது. ஆக தொழிலை தொடங்கி சீராகவும், தடையற்றதாகவும் மாற்றுவதற்கு இன்னும் இங்கு பல மாற்றங்கள் செய்யப்பட
வேண்டும். ஸ்டார்ட்அப்கள் தொடங்கப்படுவதற்கு எளிதான நடைமுறைகளை கொண்டுவர வேண்டும். குறிப்பாக தொழில் நுட்பங்கள் வளர்ந்து வரும் நிலையில், அதனை முன்னேற்றவும், உட்புகுத்தவும் வழிவகுக்க வேண்டும்.
நிதி புழக்கத்தினை ஊக்குவிக்க வேண்டும்
எல்லாவற்றிற்கும் மேலாக பெரும்பாலான நிறுவனங்கள் தோல்வியை சந்திப்பது என்பது போதிய நிதியின்மையால் தான். ஆக இந்த நிறுவனங்களுக்கு எளிதாக கடன் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இதற்கு வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் ஊக்கத்தொகையினை அளிக்கலாம். ஆக இதன் மூலம் ஸ்டார்ட்அப்களுக்கு கடன் அளிக்கலாம்.
முதலீட்டு விதிகளில் மாற்றம் கொண்டு வரலாம்
இது தவிர வரி விலக்குகள் அளிக்கலாம். வரியினை குறைக்கலாம். தனி நபர் வரி விகிதங்களை குறைக்கலாம். இதன் மூலம் தேவையினை ஊக்குவிக்கலாம். ஏனெனில் மக்கள் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்போது, செலவினங்களும் அதிகரிக்கும். இதனால் ஸ்தம்பித்துபோயுள்ள பொருளாதாரம் மீண்டு வரும். முதலீட்டாளர்களுகு தளர்வுகளை அளிக்கலாம். குறிப்பாக அன்னிய நேரடி முதலீட்டு விதிகளில் தளர்வுகளை கொண்டு வரலாம். இப்படி பல மாற்றங்களைக் கொண்டு வரலாம்.
முக்கிய பிரச்சனைகள்
குறிப்பாக ஸ்டார்ட்அப்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் வரி விதிப்பு, வர்த்தகம் செய்வது எளிதாவது, நிதி வரத்து ஆகியவை இந்தத் துறையின் பிரச்சனைகளாக இருக்கின்றன. ஆக வர்த்தகம் செய்வதை எளிதாக்கி, நிறுவனங்களில் முதலீடுகளை ஈர்க்கும் சாதகமான விதிமுறைகள் கொண்டு வந்தாலே, இந்த துறையில் பிரச்சனைகள் குறையும். ஆக பட்ஜெட்டில் அரசு இதில் எல்லாம் கவனம் செலுத்த வேண்டும்.
வரி குறைக்கப்பட வேண்டும்
நாட்டில் மூலதன ஆதாய வரி மற்றும் டிவிடெண்ட் வரி அதிகம் இருப்பதால், முதலீட்டாளர்கள் வரி குறைவாக மற்ற நாடுகளை நாடி செல்கின்றனர். குறிப்பாக இந்திய நிறுவனங்கள் மற்ற நாடுகளுக்கு மாற்றப்படுவதை தவிர்க்கும் வகையில் வரி குறைவாக இருக்க வேண்டும் மற்றும் மூலதன ஆதாய வரி மற்றும் டிவிடெண்ட் வரி போன்ற இரட்டை வரி விதிப்பு குறைக்கப்பட வேண்டும் என்பதே நிபுணர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.