இந்திய ரீடைல் கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் மசோதா மூலம் இந்தியாவில் மீண்டும் கிரிப்டோகரன்சிக்குத் தடை விதிக்கப்படுமா என்ற கேள்வியும் பயமும் இருந்த நிலையில், இன்று ராஜியசபா கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் சில முக்கியமான விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.
புதிய மசோதா
கிரிப்டோகரன்சியின் ஆபத்துகளையும், அது தவறான கைகளுக்குச் செல்வது குறித்துக் கண்காணிப்புச் செய்து வருகிறோம். இந்நிலையில் புதிய மசோதாவை உருவாக்கி, நாடாளுமன்றத்தில் விரைவில் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்க உள்ளோம் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜியசபா கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
மாறுபட்ட கோணத்தில் மறு ஆய்வு
இந்தியாவில் கிரிப்டோகரன்சியை ஒழுங்கு முறைப்படுத்த புதிய மசோதா-வை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளோம். ஏற்கனவே உருவாக்கப்பட்ட மசோதாவில் மாறுபட்ட கோணத்தில் மறு ஆய்வு செய்ய வேண்டிய நிலை இருக்கும் காரணத்தால் தற்போது புதிய மசோதா-வை உருவாக்க முடிவு செய்துள்ளோம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜியசபா கூட்டத்தில் தெரிவித்தார்.
சுஷில் மோடி கேள்வி
பீகார் மாநிலத்தின் நிதியமைச்சக சுஷில் மோடி புதிய கிரிப்டோ மசோதா வரும் வரையில் தவறான தகவலைக் கொண்ட கிரிப்டோகரன்சி சார்ந்த விளம்பரங்கள் தடை செய்யப்படுமா..? எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கிரிப்டோ விளம்பரங்களுக்கான வழிமுறைகள் மற்றும் விதிமுறைகள் உள்ளது, தடை செய்யும் முன் விதிமுறைகளைச் சரிபார்த்து முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
NFT ப்ரேம்வொர்க்
இதேபோல் மத்திய அரசு NFT (non-fungible token)-க்கு தனி ப்ரேம்வொர்க் கொண்டு வர உள்ளதா எனக் கேள்வி எழுந்தது. அதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இப்போதைய சூழ்நிலையில் NFT-க்கு தனி ப்ரேம்வொர்க் இருக்குமா என்பதைச் சொல்ல முடியாது, ஆனால் இதுகுறித்து ஆலோசனை செய்துள்ளோம் எனச் சுஷில் மோடி கேள்விக்கு பதில் அளித்தார்.
கிரிப்டோ வருமான வரி
கிரிப்டோகரன்சி முதலீட்டின் மீது எத்தனை பேர் வருமான வரி செலுத்துகிறார்கள்..? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னிடம் பதில் இல்லை என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
கிரிப்டோகரன்சி மசோதா
தற்போதைய நிலையில் ஏற்கனவே குளிர்காலக் கூட்டத்தொடருக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட மசோதா-வை மறு ஆய்வு செய்து, புதிய மாற்றங்கள் உடன் புதிய கிரிப்டோ மசோதாவை மத்திய நிதியமைச்சகம் சமர்ப்பிக்க உள்ளது. இதேவேளையில் முதலீட்டாளர்கள் கிரிப்டோ முதலீட்டில் கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.