அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சியில் டிக்டாக் பல்வேறு வர்த்தக பாதிப்புகளை எதிர்கொண்ட நிலையில், பைடன் அரசு டிக்டாக் நிறுவனம் மீதான தடை குறித்து அதிரடியாக நடவடிக்கை எடுக்காமல் நிதானமாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.
இதற்கிடையில் அமெரிக்காவில் டிக்டாக் தளத்தில் தொடர்ந்து பல லட்ச வாடிக்கையாளர்கள் புதிதாக இணைந்து வரும் நிலையில், அமெரிக்க வாடிக்கையாளர்களின் தரவுகளை கையாள டிக்டாக் மாஸ்டர் பிளான் போட்டுள்ளது.
இந்நிலையில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு டிக்டாக் மீதான தடையை நீக்க பைடன் அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், எவ்விதமான தளர்வுகளையும் பைடன் அரசு காட்டவில்லை. இது டிக்டாக் நிறுவனத்திற்கும் பெரும் தடையாக மாறிவிட்டது.
இதேவேளையில் டிக்டாக் செயலி Committee on Foreign Investment in the US (CFIUS) அமைப்பிடம் ஒரு ஒப்பந்தம் செய்ய உள்ளதாகவும், இந்த ஒப்பந்தம் மூலம் டிக்டாக்-ன் அமெரிக்கத் தரவுகளை ஒரு 3ஆம் தரப்பு நிறுவனம் நிர்வாகம் செய்யும். இந்த நிர்வாக மாடலுக்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்தால் டிக்டாக் நிறுவனத்தை ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்யத் தேவையில்லை எனப் புதிதாகத் திட்டம் தீட்டப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் முழுமையாக ரத்து செய்யப்படவில்லை என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். டாக் மீது டிரம்ப் அரசு அடுத்தடுத்து விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் உத்தரவுகளைத் தற்போது பைடன் அரசு ஆய்வு செய்வதாகத் தெரிகிறது.
மேலும் இந்தியாவில் சீன செயலிகளுக்கு எதிராக எடுத்த இந்திய அரசு நடவடிக்கைகளின் படி டிக்டாக், ஹீலோ, ஷேர்இட் ஆகிய முன்னணி செயலிகள் மீது நிரந்தர தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.