வருமான வரி தாக்கல் செய்ய ஒவ்வொரு வருடமும் ஜூலை 31ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்படும் நிலையில், கொரோனா தொற்றுக் காரணமாக வருமான வரி தாக்கல் செய்வதற்காகக் கடைசித் தேதியை வருமான வரித் துறை தொடர்ந்து ஒத்திவைத்த நிலையில் இறுதியாகத் தற்போது டிசம்பர் 31, 2020ஐ கடைசி நாளாக அறிவித்துள்ளது.
இதனால் ஏப்ரல் 1, 2019 முதல் மார்ச் 31, 2020 வரையிலான காலகட்டத்தில் பெற்ற வருமானத்திற்கு வரி செலுத்தாதவர்கள் டிசம்பர் 31, 2020க்குள் செலுத்த வேண்டும்.
டிசம்பர் 31, 2020 கடைசி
தற்போது வருமான வரித் துறை வெளியிட்டுள்ள புதிய கால நீட்டிப்பு அறிவிப்பின் படி தனிநபர், Body of Individuals (BOI), ஹிந்து கூட்டுக் குடும்பம், Association of Persons (AOP) ஆகிய பிரிவுகளின் கீழ் வருபவர்களுக்கு வருமான வரி செலுத்துவதற்கான உரியத் தேதி (Due date) டிசம்பர் 31, 2020.
இதேபோல் வர்த்தக அமைப்புகள் தங்களின் வர்த்தகம் மூலம் கிடைத்த வருமானத்திற்கு வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய கடைசி உரியத் தேதி (Due date) ஜனவரி 1, 2021.
உரிய தேதி, கடைசித் தேதி
பொதுவாக வருமான வரி தாக்கல் செய்வதற்கு வருமான வரித் துறை 2 தேதிகளைக் கொடுக்கும் ஒன்று உரிய தேதி மற்றொன்று கடைசித் தேதி. ஆனால் மக்கள் உரியத் தேதியை தான் கடைசி நாளாகப் புரிந்துகொள்கின்றனர். அது முற்றிலும் தவறு வருமான வரியை அறிவிக்கப்பட்ட கடைசி நாள் வரையில் தாக்கல் செய்யலாம்.
மார்ச் 31 2021
இந்த வகையில் 2019-20ஆம் நிதியாண்டுக்கும், 2020-21 கணக்கீடு ஆண்டுக்கும் வருமான வரி தாக்கல் செய்ய உரிய தேதி 31, டிசம்பர் 2020. உரிய தேதியில் வருமான வரி தாக்கல் செய்ய முடியாதவர்கள் கடைசி நாளான மார்ச் 31, 2021 வரையில் செலுத்தலாம்.
சலுகை இழப்பு
31, டிசம்பர் 2020 செலுத்தத் தவறினால் நீங்கள் வர்த்தகத்திலோ அல்லது வீட்டுக் கடனில் ஏற்பட்ட நஷ்ட அளவீட்டை அடுத்த ஆண்டுகளுக்குக் கொண்டு செல்லும் பெரிய உரிமையை இழந்திடுவீர். எனவே 31, டிசம்பர் 2020க்குள் வருமான வரி செலுத்துவது ஆகச் சிறந்தது.
இதேபோல் கூடுதல் வரி செலுத்தியவர்களுக்கு உரியத் தேதிக்குள்ள செலுத்தவில்லை எனில் கூடுதல் வரிக்கான வட்டியைப் பெற முடியாது.
அபராதம்
இவை அனைத்திற்கும் மேலாக 31, டிசம்பர் 2020க்குப் பின் தாக்கல் செய்யப்படும் வருமான வரி அறிக்கைக்கு அபராதம் உண்டு.பொதுவாகத் தாமதமாகத் தாக்கல் செய்யப்படும் வருமான வரி அறிக்கைக்கு 5000 ரூபாய் அபராதத்தை வருமான வரித் துறை விதிக்கிறது.
10000 ரூபாய் அபராதம்
ஆனால் இந்த முறை 31, டிசம்பர் 2020க்குப் பின் தாக்கல் செய்யப்படும் வருமான வரி அறிக்கையில் 5 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் இருந்தால் 10000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும், இதேபோல் 5 லட்ச ரூபாய்க்கும் குறைவாக வருமானம் இருந்தால் 1000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
50 சதவீத வரி
நீங்கள் மார்ச் 31, 2021ஆம் தேதியும் வருமான வரி செலுத்தவில்லை எனில் அபராதமாக உங்கள் வருமானத்திற்கு 50 சதவீதம் வரையிலான வரி விதிக்கப்படும்.