ஒரு டிமேட் கணக்கு தொடங்கும் போதோ அல்லது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்யும்போதோ கேன்சல் காசோலை தரவேண்டும் என்று நிதி ஆலோசகர்கள் கூறுவதுண்டு.
அவ்வாறு கொடுக்கும் போது என்னென்ன வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதை ஒருவர் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.
அந்த வகையில் கேன்சல் காசோலையை கொடுக்கும்போது கையெழுத்து போட வேண்டுமா? எப்படி கேன்சல் செய்ய வேண்டும் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
கையெழுத்து தேவையா?
நீங்கள் ஒருவரிடம் கேன்சல் செய்யப்பட்ட காசோலையை கொடுக்கும் போது அதில் கேன்சல் என்று மட்டுமே எழுத வேண்டும். நீங்கள் கையெழுத்திட வேண்டிய அவசியமில்லை. மேலும் காசோலையில் குறுக்கு குறி வைக்க வேண்டும். இந்த வகை காசோலை உங்கள் கணக்கை மட்டுமே சரிபார்க்கும். ரத்து செய்யப்பட்ட காசோலைகளில் நீலம் மற்றும் கருப்பு மை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு ஏதேனும் நிறத்தின் மை பயன்படுத்தப்பட்டால், உங்கள் காசோலை செல்லாததாகிவிடும்.
காசோலையை ரத்து செய்வது எப்போது அவசியம்
நிதி தொடர்பான வேலைகளை செய்யும்போது கேன்சல் காசோலை கேட்கப்படுவது வழக்கமான ஒன்று தான். உதாரணமாக தனிநபர் கடன், கார் கடன், வீட்டுக் கடன் வாங்கும் போதெல்லாம் கேன்சல் காசோலை கேட்கப்படுவதுண்டு. உங்கள் வங்கி கணக்கை சரிபார்க்கவே இந்த கேன்சல் காசோலை கேட்கப்படுகிறது.
தவறு நடக்க வாய்ப்பு
கேன்சல் காசோலை கேட்கப்பட்டால், அந்த காசோலையை அவர் என்ன செய்ய போகிறார் என்பதை தெரிந்து கொண்டு கொடுக்க வேண்டும். தேவையில்லாத நபருக்கு கேன்சல் செய்யப்பட்ட காசோலையை வழங்கக்கூடாது. ரத்து செய்யப்பட்ட காசோலையில் உங்கள் கணக்கு தொடர்பான முக்கியமான தகவல்கள் இருப்பதால் அதனை தவறாக பயன்படுத்தி உங்கள் கணக்கிலிருந்து பணத்தை மோசடியாக எடுக்க வாய்ப்பு உள்ளது.
கேன்சல் காசோலை எதற்கு பயன்படும்?
கேன்சல் செய்யப்பட்ட காசோலை டீமேட் கணக்கு தொடங்க, வங்கியில் KYC செய்ய, காப்பீடு வாங்க, EMI செலுத்த, மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய, EPF பணத்தை எடுக்க மற்றும் வங்கியில் கடன் வாங்குவதற்கு கண்டிப்பாக தேவைப்படும்.
காசோலையை எப்படி கேன்சல் செய்வது?
முதலில் நீங்கள் ரத்து செய்ய விரும்பும் உங்கள் காசோலை புத்தகத்தில் இருந்து புதிய காசோலையை எடுக்கவும். அதன்பின் காசோலையின் குறுக்கே இரண்டு இணையான குறுக்கு கோடுகளை வரையவும். இரண்டு இணையான கோடுகளுக்கு இடையே 'ரத்துசெய்யப்பட்டது' என்று எழுத வேண்டும். கேன்சல் செய்த காசோலையில் எங்கும் கையொப்பமிட வேண்டாம். காசோலை எண், MICR குறியீடு, கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர், IFSC குறியீடு, கிளை முகவரி மற்றும் பல முக்கியமான விவரங்களுக்கு மட்டுமே இந்த கேன்சல் காசோலை என்பதால் கையெழுத்திட வேண்டிய அவசியமில்லை.