ஜனவரி மாதத்தில் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களின் மந்தமான விற்பனை காரணமாக மாதத்தின் முதலான இன்று, அதுவும் பட்ஜெட் நாளில் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சரிவுடன் உள்ளது.
குறிப்பாக 2022-23 பட்ஜெட் அறிக்கையில் மத்திய அரசு எலக்ட்ரிக் வாகன விற்பனைக்குச் சாதகமாக அறிவிப்பு வெளியிட்டும் மும்பை பங்குச்சந்தையில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சரிவை எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில் மத்திய அரசு ஆட்டோமொபைல் துறைக்குச் சாதகமாக அறிவித்த புதிய பேட்டரி ஸ்வாப்பிங் கொள்கை மூலம் மக்களுக்கு என்ன லாபம்..? எந்த நிறுவனத்திற்கு அதிக லாபம்..? என்பதை இப்போது முழுமையாகப் பார்ப்போம்.
எலக்ட்ரிக் வாகனங்கள்
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை ஒவ்வொரு மாதமும் உயர்ந்து வந்தாலும், கணிக்கப்பட்ட வளர்ச்சியை வர்த்தகத்திலும், உற்பத்தியிலும் அடைய முடியவில்லை. இதற்கு மிகப்பெரிய தடையாக இருப்பது எலக்ட்ரிக் வாகனங்களின் ரேன்ஞ்ச் பிரச்சனை தான்.
பேட்டரி ஸ்வாப்பிங் கொள்கை
இந்தப் பிரச்சனையைத் தீர்க்க மத்திய அரசு எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை ஊக்குவிக்கவும், இதேவேளையில் ரேன்ஞ்ச் பிரச்சனையைத் தீர்க்கவும், குறிப்பாகப் பெரு நகரங்களில் எல்க்டிரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கப் புதிதாகப் பேட்டரி ஸ்வாப்பிங் கொள்கையை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
இரு சக்கர வாகனங்கள்
பேட்டரி ஸ்வாப்பிங் கொள்கை என்பது, இரு சக்கர வாகனங்களுக்கானது. இந்தப் புதிய கொள்கை மூலம் பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷன் எப்படி இருக்க வேண்டும் என்பதில் துவங்கி இரு சக்கர வாகனங்களில் இருக்கும் பேட்டரி வடிவம் வரையில் பல முக்கியமான காரணிகள் இடம்பெற உள்ளது.
பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷன்
ஒரு வாகனத்தில் பேட்டரி தீர்ந்துவிட்டால் பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷன் மூலம் சார்ஜ் செய்ய்பட்ட பேட்டரியை பெற முடியும். இதன் மூலம் காத்திருப்பும் நேரம் பெரிய அளவில் குறையும், அதாவது வாகனத்திற்குப் பெட்ரோல் போடும் நேரத்திற்கு இணையாகப் புதிய பேட்டரியை பெற முடியும்.
ஸ்டாண்டர்ட் பேட்டரி வடிவம்
ஆனால் இதில் ஒரு சிக்கல் உண்டு. இந்தியாவில் தற்போது பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்கிறது. இதனால் ஒவ்வொரு நிறுவனத்தின் பேட்டரி மாடலும் மாறுபடும். இந்தப் பிரச்சனையைச் சமாளிக்கப் பேட்டரி ஸ்வாப்பிங் கொள்கையில் இந்திய ஆட்டோமொபைல் துறைக்கான ஸ்டாண்டர்ட் பேட்டரி வடிவம் அறிமுகம் செய்யப்படலாம்.
50 சதவீத EV பைக்
எலக்ட்ரிக் கார்களுக்கு எப்படிச் சார்ஜிங் ஸ்டேஷன் இருக்கிறதோ, அதேபோலத் தான் எலக்ட்ரிக் வாகனங்களுக்குப் பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷன். மத்திய அரசின் இப்புதிய பேட்டரி ஸ்வாப்பிங் கொள்கை மூலம் அடுத்த 5 வருடத்தில் 50 சதவீத வாகனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வாய்ப்பு உள்ளது.
ஜியோ-BP
இந்தியாவில் பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷன் அமைக்கவும், அதன் பயன்பாட்டை அதிகரிக்கவும், முகேஷ் அம்பானி பிரிட்டன் BP நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய ஜியோ-BP அதிகப் பலன் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஜியோ-BP பல நிறுவனங்களுடன் பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷனை அமைக்கவும், பேட்டரி ஸ்வாப்பிங்-ன் பயன்பாட்டை அதிகரிக்கவும் பல நிறுவனங்களுடன் கூட்டணி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா எலக்ட்ரிக் வாகனச் சந்தை
இந்தியா எலக்ட்ரிக் வாகன சந்தை 2030ஆம் ஆண்டுக்குள் 150 பில்லியன் டாலர் சந்தையாக உருவெடுக்கும் எனக் கணிக்கப்படுகிறது. மேலும் மொத்த வாகனங்களில் எலக்ட்ரிக் வாகனங்கள் 30 சதவீதம் வரையில் சந்தை ஆதிக்கத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் மத்திய அரசின் பேட்டரி ஸ்வாப்பிங் கொள்கை உந்து சக்தியாக விளங்கும்.