பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் அதிகப்படியான கச்சா எண்ணெய் விலையைக் குறைக்க உலக நாடுகள் OPEC நாடுகளிடம் கோரிக்கை வைத்த நிலையில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க மறுப்புத் தெரிவித்தது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்வைச் சமாளிக்க அமெரிக்கா, இந்தியா உட்பட உலகில் பல நாடுகள் முக்கிய முடிவை எடுத்துள்ளது.
ஆம், தற்காலிகமாகக் கச்சா எண்ணெய் விலையைக் குறைக்க உலக நாடுகள் அவசர காலத்திற்காகச் சேமித்து வைத்திருக்கும் கச்சா எண்ணெய்-ஐ பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இதனால் சந்தையில் கச்சா எண்ணெய் வரத்து அதிகமாகி விலை குறையத் துவங்கியுள்ளது.
அமெரிக்கா-வை தொடர்ந்து இந்தியாவும் இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கச்சா எண்ணெய் உற்பத்தி
OPEC+ நாடுகளிடம் கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கப் பல நாடுகள் கோரிக்கை வைத்தும் தனது முடிவை மாற்றாமல் தொடர்ந்து அதே அளவில் உற்பத்தியைச் செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்தது. இந்த அறிவிப்புக்குப் பின்பு அமெரிக்கா கச்சா எண்ணெய் விலையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக அவசர கால இருப்பில் இருந்து கச்சா எண்ணெய்-ஐ பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தது.
அவசர கால இருப்பு
இதைத் தொடர்ந்து 23ஆம் தேதி இந்தியா தனது strategic petroleum reserves (SPR)-ல் இருந்து சுமார் 5 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்-ஐ பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் முதல் முறையாக இத்தகைய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய நாடுகள்
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரிட்டன் ஆகிய ஆகிய அனைத்து நாடுகளும் இதேபோன்ற முடிவைத் தான் எடுத்துள்ளது. இதன் மூலம் OPEC+ நாடுகளின் உதவி இல்லாமல் எரிபொருள் விலையில் தற்காலிகமாகக் குறைக்க முடியும் என்பது உலக நாடுகளின் திட்டம்.
கச்சா எண்ணெய் இருப்பு
இந்தியா 5.33 மில்லியன் டன் கச்சா எண்ணெய் இருப்பு வைத்திருக்கும் நிலையில் தற்போது 5 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் மட்டுமே பயன்பாட்டுக்குக் கொண்டு வருகிறது. அமெரிக்கா 50 மில்லியன் பேரலும், ஜப்பான் 4.33 மில்லியன் பேரலும் தனது இருப்பில் இருந்து பயன்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை
இந்தியாவில் எரிபொருள் தேவையைச் சுமார் 80-85 சதவீதத்தை வெளிநாட்டு இறக்குமதி வாயிலாகவே ஈடு செய்யப்படுகிறது. இந்த நிலையில் இறக்குமதி அளவு குறைந்து உபரி கச்சா எண்ணெய் சந்தைக்கு வரும் போது கட்டாயம் எரிபொருள் விலை குறைய வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்தியாவில் 22 நாட்களாகப் பெட்ரோல் விலை மாறாமல் இருப்பது முக்கியமானது.