தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படக்கூடிய ஒரு வார்த்தையாக மாறி இருக்கிறது குதிரை பேரம். அரசியலுக்கும் குதிரைக்கும் என்ன தொடர்பு, குதிரை பேரம் என்ற வார்த்தை ஏன் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களை பெற்று விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சி தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருந்தாலும் ஆட்சி அமைப்பதற்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்பதால் தமிழக வெற்றி கழகம் பல்வேறு கட்சிகளின் கூட்டணியோடு ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருகிறது. இந்த சூழலில் தான் தமிழக வெற்றி கழகம் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு இருக்கிறது.

தங்களுடைய ஒரே எம்எல்ஏவான காமராஜை, தவெக ஆட்சிக்கு ஆதரவு தரும் படி தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது, போலியான ஆதரவு கடிதத்தை சமர்ப்பித்துள்ளது என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். இந்த சூழலில் தான் குதிரை பேரம் என்ற வார்த்தை கவனம் பெறுகிறது. அரசியலில் குதிரை பேரம் என்ற வார்த்தை ஏன் அதிகம் பயன்படுத்தப்படுகிறது, அரசியலுக்கும் குதிரைகளுக்கும் என்ன தொடர்பு என்பதை தெரிந்து கொள்ளலாம்.
Horse trading என்பதையே தமிழில் குதிரை பேரம் என அழைக்கிறோம். ஆட்சியை தக்கவைக்க வேண்டும் , பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற காரணங்களுக்காக மற்ற கட்சி எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுப்பதற்காக அரசியல் கட்சியினர் அவர்களை விலைக்கு வாங்க முயற்சிப்பதையே குதிரை பேரம் என அழைக்கிறார்கள். பதவி தருகிறோம், அமைச்சரவையில் இடம் தருகிறோம் , பெரிய அளவிலான பணம் தருகிறோம் என ஆசை வார்த்தைகளை கூறி அவர்களை தங்கள் பக்கம் இழுப்பார்கள்.
அமெரிக்க ஆங்கிலத்தில் புத்திசாலித்தனத்துடன் பேரம் பேசுவதை தான் குதிரை பேரம் என அழைக்கிறார்கள். அதாவது அரசியல் கட்சிகள் பிரச்சனைகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப புத்திசாலித்தனமான முறையில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதையே அமெரிக்க ஆங்கிலத்தில் குதிரை பேரம் என்கிறார்கள். ஆனால் பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் மோசடி செயலை குறிக்க இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
குதிரை பேரம் என்ற வார்த்தை 1820 ஆம் ஆண்டிலிருந்து புழக்கத்தில் இருந்து வருகிறது. முந்தைய காலத்தில் குதிரை வியாபாரிகள் பலரும் தங்களுடைய குதிரைகளை முந்தைய காலத்தில் விற்கவும் வாங்கவும் மிகவும் புத்திசாலித்தனமான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்களாம். கழுதையை கூட ஏமாற்றி குதிரை என விற்பனை செய்வார்களாம்.
அதாவது அறம் எதுவும் இல்லாத, மக்களை ஏமாற்றுகிற செயல்களை தான் குதிரை பேரம் என்கிறார்கள். நேர்மையற்ற முறையி8ல் நடக்கும் பேச்சுவார்த்தை அதனால் ஏற்படும் ஒப்பந்தம். பொதுமக்கள் வாக்களிப்பது ஒரு கட்சிக்கு ஆனால் சந்தர்ப்ப சூழலை பயன்படுத்தி கொண்டு அந்த மக்கள் பிரதிநிதி பணத்திற்கு விலை போவதும், அரசியல் கட்சிகள் நேர்மையற்ற முறையில் செயல்படுவதையும் தான் அரசியல் சூழலில் குதிரை பேரம் என்கிறார்கள். அது நாட்டின் ஜனநாயகத்திற்கே ஆபத்தானது. தற்போதைய சூழலில் பெரும்பான்மையை நீருபிக்க அமமுக எம்.எல்.ஏ விடம் தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது நிரூபணம் ஆனால் தவெக விஜய் ஆட்சி அமைப்பதிலேயே சிக்கல் ஏற்படலாம்.


Click it and Unblock the Notifications

