சென்னை: புதிதாக வாடகைக்கு வீடு தேடுபவர்களுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது வீட்டு உரிமையாளர்கள் கேட்கக்கூடிய டெபாசிட் தொகை. வழக்கமாக வீட்டு உரிமையாளர்கள் ஆறு மாதங்களில் இருந்து ஓராண்டு கால வாடகை தொகையை டெபாசிட்டாக கேட்கின்றனர்.
எனவே புதிதாக வாடகை வீட்டுக்கு செல்பவர்களுக்கு டெபாசிட் தொகையை தயார் செய்வது என்பதே மிகப்பெரிய நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது. உரிமையாளர்களை பொறுத்துவரை டெபாசிட் தொகையை ஒரு பாதுகாப்பாக கருதுகின்றனர்.

வீட்டை காலி செய்யும் போது சில உரிமையாளர்கள் டெபாசிட் தொகையில் இருந்து கணிசமான தொகையை எடுத்து கொண்டு கிட்டதட்ட பாதி தொகையை தான் தருவார்கள். எனவே டெபாசிட் தொகை எப்போதுமே உரிமையாளருக்கும், குடியிருப்பாளருக்கும் இடையே ஒரு பிரச்னையாகவே இருந்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் தான் தற்போது ரெண்டல் பாண்ட்(Rental Bond) எனப்படும் வாடகை பத்திரங்கள் இந்தியாவில் டிரெண்டாகி வருகின்றன.
வாடகை பத்திரம் என்பது வீட்டின் உரிமையாளர் மற்றும் வாடகைக்கு வருபவர் மற்றும் வாடகைக்கு வருபவருக்கு உத்திரவாதம் வழங்கக்கூடிய ஒரு நிறுவனம் ஆகிய மூவருக்கு இடையிலான ஒரு ஒப்பந்தமாகும். வாடகைக்கு குடி வருபவர் வாடகை செலுத்தாமல் தவிர்ப்பது என்பன உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும் போது, வாடகை பத்திரம் மூலம் அதனை பெற்றுக் கொள்ளலாம்.
வாடகை பத்திரம் முறையானது பாரம்பரிய டெபாசிட் முறைக்கு மாற்றாக உரிமையாளருக்கு ஒரு பரந்த மற்றும் விரிவான காப்பீட்டை வழங்குகிறது. வாடகை பத்திரம் வழங்கும் நிறுவனம் குடியிருப்பாளருக்கு ஒரு உத்தரவாதத்தை அளிக்கிறது.
வாடகைக்கு குடி வருபவர் நம்பகமானவர் என்பதற்காக அந்நிறுவனம் ஒரு பத்திரத்தை வழங்குகிறது. அந்த நம்பகத்தன்மையை மீறி வாடகை செலுத்தாமல் விடுவது, மின்சார கட்டணம் செலுத்தாமல் இருப்பது போன்ற சிக்கல்களில், இந்த உத்தரவாதம் வழங்கிய நிறுவனம் அந்த தொகையை வீட்டு உரிமையாளரிடம் வழங்கிவிடும். பின்னர் குடியிருப்பாளரிடம் இருந்து அதனை வசூல் செய்து கொள்ளும்.
வாடகை பத்திரத்தின் மதிப்பு பாரம்பரிய டெபாசிட் தொகையில் இருந்து 6 முதல் 10% வரை தான் இருக்கும். எனவே டெபாசிட்டுக்காக பெரிய தொகையை தயார் செய்ய வேண்டிய நிலை குடியிருப்பவர்களுக்கு ஏற்படாது. தற்போது சந்தையில் பல்வேறு நிறுவனங்களும் வாடகை பத்திரங்களை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
வாடகை பாத்திரங்கள் நிறுவன உத்தரவாதத்துடன் வருவது மட்டுமில்லாமல், 5 நாட்களில் உரிமையாளர்களுக்கு செல்ல வேண்டிய தொகை செலுத்தப்பட்டு விடும் என்கிறார் ஈகுவாரா கேரண்டீஸ் (Eqaro securities) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான விகாஷ்கந்தேல்வால்.
பொதுவாக நாம் ஒரு வீட்டிற்கு குடி போகும் போது உரிமையாளருக்கும் நமக்கு இடையே வாடகை ஒப்பந்தம் போடப்படும். இதில் வாடகை செலுத்த வேண்டிய தேதி மற்றும் இரு தரப்பும் ஒப்புக் கொள்ளும் நிபந்தனைகள் இடம்பெற்றிருக்கும். ஆனால் இது இருதரப்புக்குமான நம்பகத் தன்மையை வளர்ப்பதில்லை.
ஆனால் வாடகை செலுத்தாமல் விட்டால் என்ன செய்வது?, வீட்டினை சேதப்படுத்தினால் என்ன செய்வது என உரிமையாளருக்கு ஒரு அச்சம் இருக்கும். அதே போல டெபாசிட் தொகையில் எவ்வளவு திரும்ப கிடைக்குமோ என்ற சந்தேகம் குடியிருப்பாளருக்கு இருக்கும்.
இதற்கு தீர்வாக இரு தரப்புக்கும் நிம்மதியான ஒரு அனுபவத்தை வழங்குகின்றன வாடகை பத்திரங்கள். குறிப்பாக உரிமையாளர்களுக்கு நிதி பாதுகாப்பை உறுதி செய்வதால் இது வரவேற்பை பெற்றுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications