இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வருகிற மே 1 முதல் 18 வயது முதல் அனைவரும் கொரோனா தடுப்பு மருந்து பெற அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் இந்திய மக்கள் தொகையில் பெரும் பகுதி 18 முதல் 44 வயது வரம்பில் இருக்கும் வேளையில், சீரம் நிறுவனம் தனது மருந்துக்கான விலையை உயர்த்தியுள்ள சூழ்நிலையில் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து அளிக்க எவ்வளவு செலவாகும்..?
கோவிட் வேக்சின் செலவு
இந்தியாவில் 18 முதல் 44 வயதுடைய மக்கள் அனைவருக்கும் கோவிட் வேக்சின் அளிக்க வேண்டும் என்றால் மத்திய அரசு சுமார் 67,193 கோடி ரூபாய் கிட்டதட்ட 9 பில்லியன் டாலர் செலவு செய்ய வேண்டும் என இந்தியா ரேட்டிங்க்ஸ் மற்றும் ஆராய்ச்சி அமைப்பு கணித்துள்ளது. இந்த 67,193 கோடி ரூபாய் இந்திய ஜிடிபி-யில் 0.36 சதவீதம்.
இதுவே சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மருந்துக்கு நிர்ணயம் செய்துள்ள விலையின் அடிப்படையில் கணக்கிட்டால் 47,500 கோடி ரூபாய் முதல் 71,500 கோடி ரூபாய் வரையில் செலவாகும்.
செலவை ஏற்கும் மாநில அரசுகள்
இந்தியாவில் இதுவரை சுமார் 7 மாநில அரசுகள் தடுப்பு மருந்து செலவுகளை அரசே ஏற்று மக்களுக்கு இலவசமாகக் கொரோனா வேக்சின் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் மாநில அரசு பெரும் பகுதி தொகை அதாவது மொத்த தொகையான 67,193 கோடி ரூபாயில் கிட்டத்தட்ட 46,323 கோடி ரூபாய் அளவிலான நிதிச் சுமையை மாநில அரசே ஏற்றுக்கொள்ளும்.
மத்திய அரசுக்கான செலவு
இந்தச் சூழ்நிலையிலும் இந்தியாவின் முன்னணி வேக்சின் தயாரிக்கும் நிறுவனமான சீரம் மத்திய அரசுக்கு ஒரு விலையிலும், மாநில அரசுக்கும் ஒரு விலையிலும் கொரோனா தடுப்பு மருந்தை விற்பனை செய்கிறது. இதன் மூலம் மத்திய அரசு வெறும் 20,870 கோடி ரூபாய் மட்டும் செலவு செய்தால் போதுமானது. 18 முதல் 44 வயதுடைய அனைத்து மக்களுக்கு வேக்சின் அளிக்க முடியும்.
18 - 44 வயதுடைய மக்கள் தொகை
மத்திய அரசு தற்போது 45 வயதுக்கு மேல் உடையவர்கள் அனைவருக்கும் அரசு மருத்துவமனையில் இலவசமாக வேக்சின் அளித்து வரும் நிலையில், 18 முதல் 44 வயதுடைய மக்களின் எண்ணிக்கை 59.46 கோடியாக உள்ளது.
பிகார் மாநிலம்
ஒவ்வொரு மாநிலத்திலும் 18 முதல் 44 வயதுடைய மக்களின் எண்ணிக்கை மாறுபடும் காரணத்தாலும், மேலும் 2 முறை வேக்சின் செலுத்துவதற்கு மாநில அரசுக்கு ஒருவருக்கு 800 ரூபாய் செலவு செய்ய வேண்டிய நிலையில் பீகார் மாநிலம் அதிகப்படியாகத் தனது மாநில ஜிடிபி அளவில் 0.60% செலவு செய்ய வேண்டும்.
இதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் (0.47%), ஜார்கண்ட் (0.37%), மணிப்பூர் (0.36%), அஸ்ஸாம் (0.35%), மத்திய பிரதேசம் (0.30%) மற்றும் ஒடிசா (0.30%) என்ற அளவீட்டில் செலவு செய்ய வேண்டும்.
தனியார் மருத்துவமனையில் வேக்சின்
இதேபோல் தனியார் மருத்துவமனையில் வேக்சின் மக்கள் பெற்றுக்கொண்டால் மக்களின் நிதிநிலையில் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படும், உதாரணமாக 2 டோஸ்களுக்கு 1200 ரூபாய் என்றால் ஒரு வீட்டில் சராசரியாக 4 முதல் 6 பேர் வரை என வைத்துக்கொண்டாலும் ஒரு குடும்பத்திற்கு 4800 ரூபாய் முதல் 7,200 ரூபாய் வரையில் செலவு செய்ய வேண்டும்.
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா
இந்தியாவின் மிகப்பெரிய கோவிட் வேக்சின் தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மத்திய அரசுக்கு ஒரு டோஸ் கோவிஷீல்டு மருந்தை 150 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலையில், மே 1 முதல் மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் கோவிஷீல்டு 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பாரத் பயோடெக் வேக்சின் விலை
இதேபோல் அடுத்த சில நாட்களில் பாரத் பயோடெக் நிறுவனமும் தனது கோவேக்சின் மருந்துக்கான புதிய விலையை அடுத்த சில நாட்களில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இந்திய மக்களுக்குப் போதுமான தடுப்பு மருந்தை இந்தியாவில் இக்குறுகியகாலத்தில் தயாரிக்க முடியாது என்பதால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.
18 வயதிற்கு மேல் உள்ள மக்கள் தொகை
மத்திய அரசின் புதிய அறிவிப்பின் வாயிலாக 18 வயதிற்கு மேல் வேக்சின் பெறத் தகுதி உடையவர் மொத்த எண்ணிக்கை 94 கோடியாக உள்ளது, ஆனால் தற்போது இந்தியாவில் ஒரு மாதத்திற்கே வெறும் 8 கோடி பேருக்கான கோவிட் வேக்சின் தயாரிக்கும் திறன் உள்ளது. கடுமையான உற்பத்தி விரிவாக்கம் செய்தாலும் 8 கோடியில் இருந்து 10 கோடியாக உயர்த்தலாம்.
வெளிநாட்டு வேக்சின் கட்டாயம் தேவை
இந்த இக்கட்டான சூழ்நிலையில் வெளிநாட்டில் இருந்து கொரோனா தடுப்பு மருந்தை இறக்குமதி செய்வதை எந்த விதத்திலும் தடுக்க முடியாது. ஏற்கனவே மத்திய அரசு ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி வேக்சின் மருந்தை இந்தியாவிற்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து பைசர், மாடெர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய முன்னணி நிறுவனங்களின் கொரோனா தடுப்பு மருந்தையும் இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய ஆலோசனை செய்து வருகிறது.
பைசர் நிறுவனம் உதவி
இந்நிலையில் நேற்று பைசர் நிறுவனம் இந்தியாவின் தேவையை உணர்ந்து தானாக முன்வந்து லாபமற்ற விலையில் தடுப்பு மருந்தை அளிக்க விருப்பம் தெரிவித்துள்ளது. பைசர் நிறுவனம் அமெரிக்காவில் தனது கோவிட் வேக்சின் மருந்தை 19.5 டாலருக்கும், ஐரோப்பிய யூனியனில் 15.5 யூரோவுக்கும் விற்பனை செய்கிறது.
இந்தச் சூழ்நிலையில் அமெரிக்க விற்பனை விலையைப் பார்க்கும் போது இந்தியாவில் இதன் விலை 1,459.91 ரூபாய். இன்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 74.87 ரூபாய்.