டெல்லி: பட்ஜெட் என்று வந்துவிட்டாலே, வரி விதிப்பு மற்றும் செஸ் ஆகிய இரண்டு சொல்லாடல்கள் அதிகம் கேள்விப்பட வேண்டியதாக இருக்கும். Tax மற்றும் Cess என்ற இரண்டுமே வரி வசூல் தொடர்பானவைதானே, பிறகு எப்படி வித்தியாசப்படுகிறது என்ற கேள்வி பலருக்கும் எழக்கூடியதுதான்.
பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், வரி மற்றும் செஸ் ஆகியவற்றுக்கு நடுவேயான வித்தியாசத்தை அறிந்து கொண்டால், நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகளில் உள்ள விவரங்களையும் எளிமையாக புரிந்து கொள்ளலாம்.
ஓகே.. இப்போ மேட்டருக்கு வருவோம். செஸ் மற்றும் வரி ஆகியவற்றுக்கான வித்தியாசங்களை பார்க்கலாம்:
வரி என்பது விரிவான வகையில் பொருள் கொள்ளக்கூடியது. செஸ் என்பது சில நேரங்களில் அந்த வரி மீது விதிக்கப்படும் கூடுதல் வரி என்ற அடிப்படையிலும் புரிந்து கொள்ள முடியும். உதாரணத்திற்கு தனி நபர் வருமான வரியை டேக்ஸ் என்கிறோம். ஆனால் வருமான வரி மீது கல்வி செலவுக்காக செஸ் விதிக்கப்படுவது இதற்கு ஒரு உதாரணம்.
குறிப்பிட்ட திட்டத்தை ஊக்குவிப்பதற்கான செஸ்
ஒரு குறிப்பிட்ட திட்டத்தை ஊக்குவிப்பதற்காக செஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கல்வி செஸ் இதற்கு ஒரு உதாரணம். கிராமப்புற மக்களின் சுகாதாரத் தேவைகளை மேம்படுத்துவதற்காக சுகாதார மற்றும் கல்வி செஸ் போடப்படுகிறது. அந்த செஸ் வசூல், குறிப்பிட்ட திட்டத்திற்குத்தான் பயன்படுத்தப்படும்.
நோக்கம்
ஒரு தனிநபரிடமிருந்து வசூலிக்கப்படும் தொகை இரண்டும் கருவூலத்தின் வருவாயை கூட்டுகின்றன. ஆனால் செஸ் வரி, பொதுவாக ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்கானது மட்டுமே. அரசால், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வசூலிக்கப்படும் அனைத்து வரிகளும் இந்திய அரசியலமைப்பின் பிரிவு 266 (1) இன் படி அமைக்கப்பட்ட குறிப்பிட்ட நிதி பிரிவுகளுக்கு கொண்டு சேர்க்கப்படுகின்றன. இங்கிருந்து பட்ஜெட்டின் அறிவிப்புபடி வெவ்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், செஸ் மூலம் பெறப்பட்ட, நிதி ஒரே நோக்கத்திற்காக மட்டுமே திருப்பிவிடப்பட வேண்டும்.
வரி மற்றும் செஸ் வகைகள்
நேரடி மற்றும் மறைமுக வரி உள்ளிட்ட பல வரிகளை உள்ளடக்கி ஜிஎஸ்டி வரி கொண்டுவரப்பட்டுள்ளது. வருமான வரி மற்றும் நிறுவன வரி தனிநபர்களிடமிருந்தும், நிறுவனங்களிடமிருந்தும், வசூலிக்கப்படுகிறது. இருப்பினும் இவை நிலையானவை. ஆனால், கிருஷி கல்யாண் திட்டம் மற்றும் ஸ்வச் பாரத் செஸ், கல்வி மற்றும் சுகாதார பராமரிப்பு செஸ் போன்ற பெயர்களில், ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்கு தேவையான நிதியை திரட்ட செஸ் தற்காலிகமாக போடப்படுகிறது.
மக்களுக்கே
வரி மற்றும் செஸ் பொருள் போன்றவை, பெரிய அளவில் வேறுபடுவதில்லை என்பதையும், இறுதியில் அரசின் கருவூலத்திற்கு சென்று, அதன் வாயிலாக, குடிமக்களுக்கு ஏராளமான சேவைகளை வழங்கத்தான் பயன்படுகிறது. நோக்கங்கள்தான் மாறுபடும்.