கொரோனா வைரஸுக்கு மத்தியில், சில முக்கியமான அரசியல் நிகழ்வுகளை கூட நாம் மறந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் கணிணிகள் மறப்பதில்லையே. நமக்கு செய்தி அனுப்பி எல்லாவற்றையும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றன. இன்றுடன் பிரதமர் நரேந்திர மோடி, இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்து 1 வருடம் நிறைவடைகிறது.
இந்த காலகட்டத்தில் முதலீட்டாளர்கள் வருத்தப்படும் விதத்தில் சில சம்பவங்கள் நடந்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அதைத் தான் விரிவாகப் பார்க்க இருக்கிறோம்.
நரேந்திர மோடி 2.0
மோடி, பதவிக்கு வந்த உடனேயே பல்வேறு சட்டங்களைக் கொண்டு வரத் தொடங்கினார். அதற்கு ஆதரவாகவும், எதிராகவும் மக்கள் தங்கள் கருத்துக்களைப் பேசத் தொடங்கினார்கள். குறிப்பாக தொழில் துறையினரும், பங்குச் சந்தை முதலீட்டாளர்களும் வரவேற்கும் விதத்தில் பல திட்டங்களைக் கொண்டு வந்தார். இருப்பினும், பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இந்த ஒரு வருட காலத்தில் சுமாராக 27 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறதாம்.
எப்படி? என்ன கணக்கு?
இதை புரிந்து கொள்ள வேண்டுமானால், முதலில் சந்தை மதிப்பு பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். இந்த சந்தை மதிப்பு என்பதை ஆங்கிலத்தில், மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் என்போம். அப்படி என்றால் என்ன என்பதைப் பார்த்து விடுவோம். பங்குச் சந்தையில், பட்டியலிடப்பட்டு இருக்கும் நிறுவனங்கள் வர்த்தகமாவதைப் பார்த்து இருப்போம். அப்படி வர்த்தகம் ஆகும் பங்குகளுக்கு ஒரு விலை இருக்கும். மொத்த பங்குகள் * ஒரு பங்கின் விலை = மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்.
விளக்கம்
இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், ஒவ்வொரு நிறுவனத்தின் மொத்த பங்குகளின் மதிப்பு என ஒன்றைக் குறிப்பிடுவார்கள். அது தான் Market Capitalization. ஒரு நிறுவன பங்கின் இன்றைய விலைக்கு, அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் விற்றால் என்ன கிடைக்குமோ அதைத் தான் மொத்த சந்தை மதிப்பு என்கிறோம். சரி இந்த 27 லட்சம் கோடி ரூபாய் கணக்குக்கு வருவோம்.
கணக்கு
கடந்த 30 மே 2019 அன்று மும்பை பங்குச் சந்தையின் மொத்த சந்தை மதிப்பு 154.43 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் 29 மே 2020 அன்று, அதே மும்பை பங்குச் சந்தையின் மொத்த சந்தை மதிப்பு 127.06 லட்சம் கோடி ரூபாயாக சரிந்து இருக்கிறது. ஆக 27.37 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு காற்றில் கரைந்து விட்டது என்கிறார்கள்.
பாஜக அரசு
அப்படி என்றால் பாஜக அரசை, முதலீட்டாளர்கள் விரும்பவில்லையா என்று கேட்டால் பதில் ‘நோ'. பாஜக அரசின் மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதற்குச் சான்று செப்டம்பர் மாதத்தில் கார்ப்பரேட் வரியைக் குறைத்த போது, சந்தை இரண்டே நாளில் சுமாராக 3,000 புள்ளிகள் ஏற்றம் கண்டதை நாம் மறந்துவிடக் கூடாது.
சந்தை ஏற்றம்
கடந்த 30 மே 2019 அன்று சென்செக்ஸ் 39,831 புள்ளிகளில் நிறைவடைந்து இருந்தது. அதன் பின் 17 ஜனவரி 2020 அன்று சென்செக்ஸ் தன் வாழ்நாள் உச்சப் புள்ளியாக 41,945 புள்ளிகளைத் தொட்டு நிறைவடைந்தது. இது சுமாராக 5.3 சதவிகிதம் ஏற்றம். ஜனவரி காலத்திலேயே கொரோனா பற்றிய பதற்றம் பங்குச் சந்தைகளைத் தொற்றிக் கொண்டது. அதன் பின் கொரோனாவால் தான் சந்தை செம அடி வாங்கி இருக்கிறது. எப்படி?
கொரோனா காலத்தில் சரிவு
மும்பை பங்குச் சந்தையின் சந்தை மதிப்பு, கடந்த 17-1-2020 -அன்று 160.57 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் கடந்த 23-3-2020 அன்று 101.86 லட்சம் கோடி ரூபாயாக சரிந்து இருக்கிறது. சுமாராக 59 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு காற்றில் கரைந்து இருக்கிறது. எனவே, மோடியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தின் முதல் வருடத்தில், 27 லட்சம் கோடி சந்தை மதிப்பு அடி வாங்கியதற்கு, கொரோனா தான் காரணம் என்பதை, தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.