மத்திய அரசு, சரக்கு மற்றும் சேவை வரி கொண்டு வந்த பின், மாநில அரசுகளின் பட்ஜெட்டில் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருப்பதாக தெரிகிறது.
இருப்பினும், இது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின், இந்த ஆட்சிக் காலத்தின் கடைசி பட்ஜெட் என்பதால் கொஞ்சம் எதிர்பார்ப்புகள் கூடி இருக்கிறது.
பொது மக்களுக்கு இந்த 2020 - 21 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் என்ன சொல்லி இருக்கிறார் நம் தமிழக நிதி அமைச்சர் ஒபிஎஸ்..?
எதிர்பார்ப்பு
அடுத்த ஆண்டில் தாக்கல் செய்ய இருக்கும் பட்ஜெட் எப்படியும் இடைக்கால பட்ஜெட்டாகத் தான் இருக்கும். அப்படிப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் பெரிதாக எந்த அறிவிப்பையும் வெளியிட முடியாது என்பதால் இந்த பட்ஜெட்,இந்த நேரத்தில் அரசியல் ரீதியாகவும், தேர்தல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
உணவு
உணவு மானியத்துக்கு 6,500 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்களாம். இந்த உணவு மானியம் இன்று வரை கடைக் கோடி ஏழைகள் வரை பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்பதால் இது வரவேற்கப்படுகிறது.
ஏழை மக்கள் சாப்பிடும் ஒரு ரூபாய் இட்லி, ஐந்து ரூபாய் மதிய உணவு வகைகள் வழங்கும், அம்மா உணவகத்திற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து இருக்கிறார்.
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் கொண்டு வரப்படும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.
வேலைவாய்ப்பு & பாதுகாப்பு
2015-ல் வெள்ளம் வந்து சென்னையை சின்னா பின்னமாக்கியது. எனவே இந்த முறை சென்னையில் வெள்ளம் வந்தால் நிர்வகிக்க என தனியாக 100 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்களாம்.
2020 - 21 நிதி ஆண்டிலும் சுமாராக 10,000 காவலர்களை புதிதாக வேலைக்கு எடுக்கப்பட இருக்கிறார்களாம். இதனால் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு அதிகரிப்பதோடு, வேலை வாய்ப்பும் கூடும்.
இழப்பீடு & பேருந்து பாதுகாப்பு
விபத்துக்கள் ஏற்பட்டு மரணம் அடைபவர்களின் குடும்பத்துக்கு வழங்கும் நஷ்ட ஈடு 4 லட்சம் ரூபாயாக அதிகரித்து இருக்கிறார்களாம்.
அனைத்து அரசு பேருந்துகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த ரூ75.02 கோடி ஒதுக்கீடு.
அரசு பேருந்துகளில் மின்னனு பயணசீட்டு முறை கொண்டுவரப்படும். பணமில்லா பரிவர்த்தனை பயண சீட்டு பெரும் முறை அமல்படுத்தப்படும் எனச் சொல்லி இருக்கிறார்.
கல்வி
முதல் தலைமுறை மாணவர்களின் கல்வி கட்டண சலுகை தொடர ரூ506 கோடி ஒதுக்கீடு செய்து இருக்கிறார்.
பள்ளிக்கல்வித்துறைக்கு அதிகபட்சமாக ரூபாய் 34,181 கோடி மற்றும் உயர் கல்வித் துறைக்கு ரூபாய் 5,052 கோடி என ஒதுக்கீடு செய்து இருக்கிறார் ஓ பன்னீர் செல்வம்.
மற்றவைகள்
மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறைக்கு ரூபாய் 15,863 கோடி செய்து இருக்கிறார்.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 6,754 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அறிவித்து இருக்கிறார். நகராட்சி நிர்வாக செலவுகளுக்கு மொத்தமாக 18,540 கோடி ஒதுக்கீடு செய்து இருக்கிறார் ஓ பன்னீர் செல்வம்.