அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வெள்ளிக்கிழமை 16 பைசா சரிந்து வரலாறு காணாத சரிவான 82.33 ரூபாய் அளவீட்டைத் தொட்டு உள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பு கடந்த 4 நாட்களில் 1 சதவீதமும், 2022 ஆம் ஆண்டில் 10 சதவீதம் டாலருக்கு எதிராகச் சரிந்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இவ்வளவு பெரிய சரிவைப் பதிவு செய்யவில்லை, ஆனால் பிற முன்னணி நாணயங்களை ஒப்பிடும்போது ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி சற்று குறைவாகவே உள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரியும் என்றும் அடுத்த சில வாரத்தில் 84 ரூபாய் வரையில் சரியும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது. இந்தத் தடாலடி சரிவுக்கு என்ன காரணம்..?
ரூபாய் மதிப்பு
ரூபாய் மதிப்பின் சரிவுக்கு முக்கியமான காரணம் அமெரிக்கப் பெடரல் வங்கி எடுத்துள்ள முடிவுகளும், அதன் பின் முதலீட்டாளர்கள் செய்த காரியமும் தான் முக்கியமானதாக விளங்குகிறது. அமெரிக்க உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்புகள் தரவுகள் அந்நாட்டின் பொருளாதாரத்திற்கும், வளர்ச்சிக்கும் சாதகமாக இல்லை.
OPEC+ நாடுகள்
இதேவேளையில் OPEC+ நாடுகள் கச்சா எண்ணெய் விலையை அதிகரிக்க அதன் உற்பத்தியை ஒரு நாளுக்கு 2 மில்லியன் பேரல் வரையில் குறைக்க முடிவு செய்துள்ளது. இது உலகில் அனைத்து நாடுகளையும் கட்டாயம் பாதிக்கும் குறிப்பாக அமெரிக்க, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளின் பணி காலம் துவங்க உள்ள நிலையில் கச்சா எண்ணெய் விலை உயர் என்பது பணவீக்கத்தை அதிகரிக்கும்.
உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்புத் தரவுகள்
அமெரிக்க உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்புத் தரவுகள் சாதகமாக இல்லாத நிலையில், பணவீக்கத்தைக் கூடுதலாக அதிகரிக்க உள்ள கச்சா எண்ணெய் உற்பத்தி அளவுகள் ஆகியவை அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பெரிய அளவில் பாதிக்கும் என்பதால் பெடரல் ரிசர்வ் அதிகாரிகள் மீண்டும் வட்டி விகதத்தை உயர்த்த வேண்டிய நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
முதலீட்டாளர்கள்
இதன் எதிரொலியாக அமெரிக்க முதலீட்டாளர்கள் முதல் சர்வதேச முதலீட்டாளர்கள் வரையில் அனைவரும் வெளிநாட்டுச் சந்தையில் இருக்கும் முதலீட்டை திரும்பப் பெற துவங்கினர். சொல்லப்போனால் அமெரிக்கப் பங்குச்சந்தையில் இருந்து பெரும் பகுதி முதலீடுகள் பத்திர சந்தைக்கு மாறியுள்ளது, இதனால் வியாழக்கிழமை அமெரிக்காவின் டாவ் ஜோன்ஸ், S&P 500, நாஸ்டாக் காம்போசிட் குறியீடுகள் அனைத்தும் சரிவைச் சந்தித்துள்ளது.
டாலர் இண்டெக்ஸ்
இதனால் டாலர் இண்டெக்ஸ் 0.14 சதவீதம் உயர்ந்து 112.10 ஆக உள்ளது, இதன் வாயிலாக டாலருக்கு எதிரான அனைத்து முன்னணி நாணயங்களும் இன்று சரிவை பதிவு செய்துள்ளது.
ரிசர்வ் வங்கி, மத்திய அரசு
இந்தப் பட்டியலில் இந்திய ரூபாயும் இருக்கும் காரணத்தால் ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசும் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டிய இக்கட்டான கட்டாயத்தில் உள்ளது.
டிசம்பர் கூட்டம்
இப்படிப்படச் சூழ்நிலையில் டிசம்பர் மாத கூட்டத்தில் அல்லது அதற்கு முன்னதாகவே அமெரிக்கப் பெடரல் வங்கியின் அதிரடி முடிவுகளைப் பொறுத்து ஆர்பிஐ தனது பென்ச்மார்க் வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தை உயர்த்தலாம்.
ரெப்போ விகிதம்
இதற்கு முன்பு ஆர்பிஐ 25-35 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது 75 அடிப்படை புள்ளிகள் வரையில் உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படிச் செய்தால் அனைத்து கடன்களுக்குமான வட்டி விகிதம் அதிகரிக்கும்.