கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து இந்தியப் பொருளாதாரத்தை மீட்க, மத்திய அரசுடன், மத்திய ரிசர்வ் வங்கியும் கை கோர்த்து பல அறிவிப்புகளை அவ்வப் போது வெளியிட்டுக் கொண்டு இருக்கிறது.
இன்று மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ், பத்திரிகையாளர்களைச் சந்தித்து சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
ஆர்பிஐ, ரெப்போ ரேட் வட்டி விகிதத்தை 0.4 % குறைத்தது, இன்னும் 3 மாதங்களுக்கு கடன்களுக்கான இஎம்ஐ தவணைகளைச் செலுத்துவதை ஒத்திப்போட்டது எல்லாம் மிக முக்கிய அறிவிப்புகள் தான்.
இந்தியப் பொருளாதாரம்
அதோடு, இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை என்ன? இந்தியப் பொருளாதாரம், இந்த 2020 - 21 நிதி ஆண்டில் என்ன வளர்ச்சி காணும், உணவுப் பணவீக்கம் மற்றும் உணவு உற்பத்தி என பலவற்றைக் குறித்தும் பேசி இருக்கிறார். அவைகளைத் தான் இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்க இருக்கிறோம். முதலில் ஜிடிபி & தொழில் துறையில் தொடங்குவோம்.
ஜிடிபி & தொழில் துறை
இந்த 2020 - 21 நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி சரியலாம் எனச் சொல்லி இருக்கிறார் ஆர்பிஐ ஆளுநர். அதாவது கடந்த நிதி ஆண்டில், இந்திய ஜிடிபி 100 ரூபாயாக இருந்தால், இந்த ஆண்டு 100 ரூபாய்க்குக் கீழ் போகலாம் எனச் சொல்லி இருக்கிறார். அதே போல இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி மார்ச் 2020-ல் 16.7 % சரிந்து இருப்பதையும் சுட்டிக் கட்டி இருக்கிறார்.
உற்பத்தி
இந்திய பொருளாதாராத்தின் மிக முக்கிய அங்கமாக இருக்கும் உற்பத்தி துறையும் சுமாராக 21 % சரிவில் இருப்பதாகச் சொல்லி இருக்கிறார். அது போக, மார்ச் 2020-ல் இந்தியாவின் முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சியும் -6.5 % இருப்பதாகச் சொல்லி இருக்கிறார் ஆர்பிஐ ஆளுநர்.
ஏற்றுமதி
கடந்த ஏப்ரல் 2020-ல், இந்தியா செய்த ஏற்றுமதியை, ஏப்ரல் 2019 உடன் ஒப்பிட்டால் சுமாராக 60 % சரிவில் இருக்கிறது எனவும் குறிப்பிட்டு இருக்கிறார் ஆர்பிஐ ஆளுநர் சக்தி காந்த தாஸ். அதே போல ஏப்ரல் 2020-ல் இறக்குமதியும் 17.12 பில்லியன் டாலருக்கு தான் செய்திருக்கிறார்களாம். இது ஏப்ரல் 2019-ஐ விட 58.65 % சரிவாம்.
நுகர்வு சரிவு
இது போக கொரோனா வைரஸ் லாக் டவுன் நீடித்துக் கொண்டு இருபப்தால், இந்தியாவின் மின்சார தேவை மற்றும் பெட்ரோலிய பொருட்களுக்கான தேவையும் கணிசமாக குறைந்து இருக்கிறதாம். அதோடு தனியார் நுகர்வும் கணிசமாக குறைந்து இருப்பதைச் சொல்லி இருக்கிறார் ஆர்பிஐ ஆளுநர்.
பணவீக்கம்
ஏப்ரல் 2020-ல், இந்தியாவின் நுகர்வோர் பணவீக்கம், 8.59 %-மாக அதிகரித்து இருப்பதையும் சுட்டிக் காட்டி இருக்கிறார் ஆர்பிஐ ஆளுநர். இத்தனை சலசலப்புகளுக்கு மத்தியிலும் இதியாவின் உணவு தானிய உற்பத்தி 3.7 % அதிகரித்து இருப்பதையும் சுட்டிக் காட்டி பேசி இருக்கிறார் ஆர்பிஐ ஆளுநர்.


Click it and Unblock the Notifications