சீனா சமீபத்திய காலமாக பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் சிக்கித் தவித்து வருகின்றது. இதனால் சீன நிறுவனங்கள் பலவும் மந்த நிலையை எதிர்கொண்டு வருகின்றன. இதற்கு உதாரணமே சீனாவின் எவர்கிராண்டே சரிவு தான்.
இந்த குழுமத்தில் தொடங்கிய பிரச்சனையானது இன்று வரையில் தொடர்ந்து கொண்டே உள்ளது. பல நிறுவனங்களும் இப்பிரச்சனைகளை எதிர்கொள்ள தொடங்கியுள்ளன.
சீனாவில் தொடங்கியுள்ள இந்த பிரச்சனையானது, சர்வதேச அளவில் நெருக்கடியை ஏற்படுத்தலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சர்வதேச அளவிலான பிரச்சனைகள்
ஏற்கனவே உக்ரைன்- ரஷ்யா பிரச்சனை, சீனா தைவான் பிரச்சனை என பல அரசியல் பதற்றங்கள், கொரோனா, சீனாவின் ஜீரோ கோவிட் பாலிசி என பலவும் சப்ளை சங்கிலியில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றன. இது மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்றும் அஞ்சப்படுகின்றது. இதற்கிடையில் சீனாவின் முக்கிய வணிகமாக இருந்து வரும் ரியல் எஸ்டேட் வணிகமானது பெரிதும் முடங்கியுள்ளது.
வளர்ந்து வரும் சந்தைகளில் கவனம்
சீனாவின் இந்த பிரச்சனையில் இருந்து இந்தியா கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன? இந்தியா செய்ய வேண்டியது என்ன? நிபுணர்களின் கூற்று என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
சீனாவில் நிலவி வரும் நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில், சீன முதலீட்டாளர்கள் இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் சந்தைகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இது இந்திய சந்தைகளில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
கவனம்?
இந்தியாவில் விரைவான நகரமயமாக்கல், 4700 பட்டியலிடப்பட்ட அம்ருத் 2.0 நகரங்கள், மேக் இன் இந்தியா திட்டம், மிகப்பெரிய மெட்ரோ ரயில் திட்டங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்கள், நகரங்களை ஒன்றோடொன்று இணைக்கும் திட்டங்கள் என பலவற்றிலும் கவனம் செலுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீடுகள் அதிகரிக்கலாம்
இது தேவையை அதிகரிக்கலாம். குறிப்பாக வணிக ரீதியிலான ரியல் எஸ்டேட் சொத்துகள், வீடுகள் உள்ளிட்டவற்றில் தேவை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக சீன முதலீட்டாளர்களின் கவனம் அதிக லாபம் கொடுக்கும் திட்டங்களில் திரும்பலாம். இதனால் சீனா டெவலப்பர்களிடமிருந்து, இந்திய டெவலப்பர்களிடம் முதலீடுகள் திரும்பலாம். இவ்வாறு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் முதலீடானது, தற்போது இருக்கும் முதலீட்டினை விட மூன்று மடங்கு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீழ்ச்சி காணலாம்
சீனாவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் கடந்த ஆண்டில் சீனாவில் சொத்து விற்பனையானது 72% குறைந்துள்ளது. இது நாட்டின் ஜிடிபி விகிதத்தில் கிட்டத்தட்ட 30% உள்ளது. தற்போது சீனா ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விற்பனை குறைந்துள்ள இந்த நேரத்தில், கடன் விகிதமும் அதிகரித்துள்ளது. முதலீடுகளும் சரிவினைக் கண்டுள்ளன. மொத்தத்தில் நிலவி வரும் நிலையற்ற தன்மையால் ரியல் எஸ்டேட் சந்தை இன்னும் வீழ்ச்சி காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எச்சரிக்கையுடன் செயல்படணும்
சீனாவில் நிலவி வரும் மந்த நிலையானது நீண்டகால நோக்கில் இந்தியாவிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இந்தியாவின் வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். ஏனெனில் இந்தியாவின் இரும்பு மற்றும் ரியல் எஸ்டேட் வணிகம் சார்ந்த ஏற்றுமதிகள் பாதிக்கப்படலாம். இது இந்திய நிறுவனங்களில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். எப்படியிருப்பினும் இந்திய டெவலப்பர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக அமையலாம். ஆக அதனை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.