இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிமாற்றம் கடந்த 5 வருடத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது, இதற்கு முக்கியக் காரணம் மோடி அரசு சரியான முறையில் திட்டமிடாமல் அறிவித்த பணமதிப்பிழப்பு தான். பணமதிப்பிழப்பால் இந்தியா பல மோசமான பாதிப்புகளைச் சந்தித்தாலும், நடந்த ஒரு நல்ல விஷயம் டிஜிட்டல் பணப்பரிமாற்றம்.
மேலும் இந்தியாவில் UPI தளம் கொண்டு வந்த பின்பு பணப் பரிமாற்றம் சேவை அளிக்கும் பல நிறுவனங்கள் இந்தியாவில் பெரிய அளவிலான வளர்ச்சி அடைந்தது. இந்த வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பது கூகிள் பே தான். கூகிள் பே உடன் சரிசமமாகப் போட்டி போட யாரும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது அனைவரும் பயன்படுத்தும் வாட்ஸ்அப் பேமெண்ட் தளத்தில் குதிக்க உள்ளது.
ரிசர்வ் வங்கி மறுப்பு...
இந்த வருடத்தின் துவக்கத்தில் வாட்ஸ்அப் தனது டேட்டாவை இந்தியாவில் வைக்கத் தவறியதன் காரணமாக இந்நிறுவனத்தின் பேமெண்ட் சேவையை அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கி மறுப்புத் தெரிவித்தது.
அதாவது வாட்ஸ்அப் பேமெண்ட் சேவையில் நடக்கும் பகிர்மான தகவல்கள் அனைத்தும் இந்தியாவில் தான் சேமிக்க வேண்டும், அமெரிக்காவிலோ அல்லது வாட்ஸ்அப்-இன் பிற நாட்டு டேட்டாபேஸ் தளத்தில் சேமிக்கக் கூடாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது ரிசர்வ் வங்கி.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
இந்தியாவில் தகவல்களைச் சேமிக்கும் வகையில் தளத்தை 6 மாத்திற்குள் மாற்றினால் ஒப்புதல் அளிக்கப்படும் என ரிசர்வ் வங்கி உச்ச நீதிமன்றத்தின் வாயிலாகக் கூறியது.
இந்நிலையில் பணப்பரிமாற்ற தகவல்களை இந்தியாவில் சேமிக்கும் வகையில் மாற்றித் தற்போது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வாட்ஸ்அப் வாயிலான UPI பணப்பரிமாற்றத்திற்காக proof-of-concept-ஐ வெற்றிகரமாக முடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதர ஒப்புதலுக்காக இரு தரப்பும் காத்திருக்கிறது. ஒப்புதல் கிடைத்த அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் வாட்ஸ் அப் பயன்படுத்தும் அனைவரும் புதிய டிஜிட்டல் பேமெண்ட் சேவையைப் பயன்படுத்தலாம்.
வாட்ஸ்அப் பேமெண்ட்
இந்தியாவில் வாட்ஸ்அப் செயலி சில தனியார் வங்கிகளுடன் இணைந்து தனது பீட்டா பேமெண்ட் சேவையைப் பிப்ரவரி 2018 முதல் வழங்கி வருகிறது. ஆனால் மக்கள் அதிகம் நம்பும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுடன் இணைக்கப்படாத காரணத்தால் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.
அக்டோபர் 30ஆம் தேதி கூட வாட்ஸ்அப் நிறுவனத்தை இயக்கும் பேஸ்புக் நிறுவனத் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் இந்தியாவில் விரைவில் வாட்ஸ்அப் பேமெண்ட் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருந்தார்.
சோதனை
இந்தியாவில் தற்போது வாட்ஸ்அப் பேமெண்ட் சேவையைப் பல கோணத்தில் சோதனை செய்து வருகிறோம். மேலும் அதைப் பயன்படுத்த மக்கள் மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள் என்றும் பேஸ்புக் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை வங்கிகள்
இந்தியாவில் தனியார் வங்கிகள் அதிகம் இருந்தாலும் பொதுத்துறை வங்கிகளின் ஆதிக்கம் மிகவும் அதிகம். எனவே தான் பேஸ்புக் பொதுத்துறை வங்கிகளுடன் இணைத்த பின்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலாம் எனத் திட்டமிட்டு உள்ளது.
கூகிள் பே Vs வாட்ஸ்அப் பே
இந்தியாவில் ஏற்கனவே கூகிள் பே அசத்திக் கொண்டு இருக்கும் நிலையில் வாட்ஸ்அப் பே களத்தில் இறங்க உள்ளது. இரு சர்வதேச நிறுவனங்களும் இந்தியாவில் குழாயடி சண்டையிட வருகிறது. இந்தச் சண்டையில் ஏற்கனவே இந்தியாவில் இருக்கும் போன்பே, பேடிஎம் போன்ற நிறுவனங்களுக்குப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிகிறது.
கூகிள் பே Vs வாட்ஸ்அப் பே இந்தச் சுவாரஸ்யமான போட்டியில் மக்களுக்கு அதிகளவிலான சலுகைகள் கிடைக்க வாய்ப்பு ஏராளமாக உள்ளது.