உலகளவில் ஒவ்வொரு நொடியும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஒரு தகவல் பரிமாற்ற செயலி வாட்ஸ் அப். இதில் நாம் ஒருவருடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் மொபைல் நம்பரை தர வேண்டி இருக்கிறது.இந்நிலையில் தான் வாட்ஸ் அப் நிறுவனம் யூஸர் நேம் அதாவது பயனர் பெயர் என்ற கான்செப்டை கொண்டு வந்தது.
வாட்ஸ் அப் வாடிக்கையாளர்கள் தங்கள் யூஸர் நேமை ரிசர்வ் செய்து வைத்து கொண்டால் நம்பரை பகிராமல் யூஸர் நேமை மட்டுமே பகிர்ந்து தகவல் பரிமாறலாம். இந்நிலையில் மத்திய அரசு யூஸர் நேம் வசதி இணையவழி மோசடிகளுக்கு வழிவகுக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இது குறித்து, வாட்ஸ் அப் தாய் நிறுவனமான, மெட்டாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மெட்டா நிறுவனம் மூன்று நாட்களில் விளக்கம் அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

வாட்ஸ் அப்பின் புதிய பயனர் பெயர் அம்சம், ஆள்மாறாட்டம், மோசடி மற்றும் இணையவழி ஏமாற்று வேலைகளுக்கு வழிவகுக்கக்கூடும் என மத்திய அரசு கூறுகிறது. இந்த அம்சம், மோசடியாளர்களுக்கு சாதகமாகவும் இணையவழி மோசடி, ஃபிஷிங், டிஜிட்டல் கைது மோசடிகள் ஆகிய நிகழ்வுகளை கணிசமாக அதிகரிக்கக்கூடும் என கருதுகிறோம் என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சசகம் அந்த நோட்டீஸில் கூறியுள்ளது.
இந்த புதிய அம்சம் குறித்து அரசுக்கு திருப்தி ஏற்படும் வகையிலான விளக்கம் கிடைக்கும் வரை இந்தியாவில் இதனை கொண்டு வரக்கூடது என மத்திய அரசு அந்த நோட்டீஸில் சுட்டிக்காட்டியுள்ளது. முன்னதாக பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா, நாட் டேட்டிங் நிறுவனர் ஜஸ்வீர் சிங் ஆகியோரும் யூஸர் நேம் வசதி மோசடிகளுக்கு வழிவகுக்கும் என கூறி இருந்தனர்.
இந்தியாவில் சைபர் குற்றங்கள் எனப்படும் இணைய வழி குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. போலி முதலீட்டு திட்டங்கள், டிஜிட்டல் கைது மோசடி, போலி கடன் செயலி, நிறுவன அதிகாரிகள் போல் ஊழியர்களிடம், வாட்ஸ் அப்பில் ஆள்மாறாட்டம் செய்து பேசுவது என, பல வழிகளில் இந்த குற்றங்கள் நடக்கின்றன. இந்நிலையில் பிரபலங்கள், நிறுவனங்கள் அல்லது நம்பகமான நபர்களின் பெயர்களை கொண்டு வாட்ஸ் அப் பயனர் பெயர்களை உருவாக்கி பயன்படுத்தும் வாய்ப்பு இதன் மூலம் ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மத்திய அரசின் நோட்டீஸ் குறித்து வாட்ஸ்அப் செய்தித் தொடர்பாளர் அளித்துள்ள பதிலில் , வாட்ஸ்அப்பில் மக்கள் தங்களுக்கு விருப்பமான பயனர் பெயரை முன்பதிவு செய்துகொள்ளும் வசதியை நாங்கள் அறிவித்துள்ளோம். ஆள்மாறாட்டத்தைத் தடுக்கும் வகையில், பொதுப் பிரமுகர்கள், அரசு அமைப்புகள், பிரபலங்கள் மற்றும் சரிபார்க்கப்பட்ட மெட்டா கணக்குகள் போன்ற மிக முக்கியமானவர்களின் பெயர்களை நாங்கள் பாதுகாத்து வைத்துள்ளோம்; இதனால் அந்த பெயர்களை அவற்றின் உண்மையான உரிமையாளர்களால் மட்டுமே பெற முடியும் என கூறியுள்லார்.
தொலைபேசி எண் இருந்தால் தான் ஒருவரால் வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியும் என்றும் மோசடிகளுக்கு எதிரான பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார். மற்ற பயனர்கள் உங்களுக்குச் செய்தி அனுப்ப உங்கள் சரியான பயனர் பெயரை அறிந்திருக்க வேண்டும்; ஒரு கணக்கு எத்தனை புதிய நபர்களைத் தொடர்புகொள்ளலாம் என்பதற்கு வரம்பு விதிப்போம், ஒருவரின் பயனர் பெயரை ஊகிப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளைத் தடுப்போம், அத்துடன், ஆள்மாறாட்டம் போன்ற மோசடிகளை கண்டறிந்து அவற்றை நீக்குவதற்கான பாதுகாப்பு அமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன என்கிறார்.
இந்த அம்சம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு, யாரேனும் ஒருவர் உங்கள் பயனர் பெயர் மூலம் உங்களுக்கு முதன்முறையாகச் செய்தி அனுப்பினால், அவர் புதிய கணக்கை கொண்டவரா, உங்கள் தொடர்புகளில் உள்ளவரா, உங்களுடன் பொதுவான குழுக்களில் இருப்பவரா அல்லது வேறொரு நாட்டில் இருப்பவரா என்பன விவரங்களை வாட்ஸ் அப் உங்களுக்கு காட்டும்; இதன் மூலம் அவர்களுக்குப் பதிலளிக்கலாமா வேண்டாமா என்பதை நீங்கள் முடிவு செய்யலாம், என அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications

