மத்திய அரசு விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் 11 வது தவணையை விரைவில் விவசாயிகளுக்கு வழங்க உள்ளது.
சென்ற ஆண்டு மே மாதம் 15-ம் தேதி விவசாயிகளுக்கு இந்த நிதியுதவி வழங்கப்பட்டது. எனவே இந்த ஆண்டும் இதே தேதியில் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் இப்போது வரை மத்திய அரசு இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
இருந்தாலும் விவசாயிகள் தங்களுக்கு இந்த முறை பிரதான் மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் 11 வது தவணையில் நிதியுதவி கிடைக்குமா என்பதை சரிபார்க்க முடியும். அதை எப்படி செக் செய்வது என இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
விவசாயிகளுக்கு நிதி விநியோகிக்கும் தேதிகள்
ஒவ்வொரு ஆண்டும் பிரதான் மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு முதல் தவணை ஏப்ரல் 1 முதல் ஜூலை 31-ம் தேதிக்குள் வழங்கப்படும். இரண்டாவது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30-ம் தேதிக்குள் வழங்கப்படும். மூன்றாவது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31-ம் தேதிக்குள் வழங்கப்படும்.
தவணை விவரம்
பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ், மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் ஏழை மற்றும் விளிம்புநிலை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் 6000 ரூபாயை நிதியுதவியாகச் செலுத்துகிறது. மூன்று தவணையாக ஒவ்வொரு தவணைக்கும் 2000 ரூபாய் என வழங்கப்படுகிறது.
பயனாளிகள் பட்டியலில் பெயரை சரிபார்ப்பது எப்படி?
படி 1: https://pmkisan.gov.in இணைப்பைத் திறக்கவும்.
படி2: அதில் விவசாயிகள் கார்னர் என்ற டேபிள் உள்ள பயணிகள் பட்டியலுக்கான பட்டனை கிளிக் செய்யவும்.
படி 3: பயனாளியின் மாவட்டம், பிளாக், கிரமம் உள்ளிட்டவற்றைத் தேர்வு செய்து Get Report' என்பதை கிளிக் செய்யவும்.
படி 4: உங்கள் பகுதியில் உள்ள பயனாளிகளின் பட்டியல் வரும். அதில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்த்துக்கொள்ளலாம்.
பிரதான் மந்திரி கிசான் யோஜனா திட்டம்
பிரதான் மந்திரி கிசான் யோஜனா திட்டம் பிரதமர் மோடி அவர்களால் 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. 4 மாதங்களுக்கு ஒரு முறை, விவசாயிகளுக்கு இந்த திட்டம் கீழ் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்தி விவசாயிகள் அவர்களது நிலத்திற்குத் தேவையான விதை, உரம் போன்ற செலவுகளைப் பார்த்துக்கொள்ளலாம்.