இந்திய வங்கிகளில் அடுத்தடுத்த கடன் மோசடிகள் நடைபெறுவது வழக்கமாகியுள்ள நிலையில் இண்டஸ்இண்ட் வங்கியின் மூத்த அதிகாரிகள் ரிசர்வ் வங்கியிடம் வங்கி நிர்வாகத்தில் முறைகேடு நடப்பதாகவும், எவர்கிரீனிங் பிரச்சனை பெரிய அளவில் இருப்பதாகவும் புகார் அளித்துள்ளனர்.
இதில் மிக முக்கியமாகக் கொரோனா தொற்றுக்குப் பின்பு இந்தப் பிரச்சனை மிகப்பெரியதாக வெடித்துள்ளது எனவும் தனது புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இண்டஸ்இண்ட் வங்கி
இண்டஸ்இண்ட் வங்கியின் கிளை நிதி நிறுவனமான பாரத் பைனான்சில் இன்குலுஷன் நிறுவனத்தில் பல நிர்வாக முறைகேடுகள் நடந்து வருவதாகவும், குறிப்பாக வாராக் கடனாக மாறும் பல கடன்களுக்குக் கூடுதலான கடன் கொடுத்துத் தொடர்ந்து இயங்கி வருவதாகக் காட்ட எவர்கிரீனிங் பயன்படுகிறது. இந்த எவர்கிரீனிங் செயல்பாடு அளவுக்கு மீறிச் செய்யப்படுவதாகப் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
புகார்
இண்டஸ்இண்ட் வங்கியில் இருக்கும் சில தனிப்பட்ட தலைவர்கள் இந்தப் புகார் கடிதத்தை அக்டோபர் 17 மற்றும் 24ஆம் தேதி இண்டஸ்இண்ட் வங்கி சிஇஓ சுமந்த் கத்பாலியா-க்கும், ரிசர்வ் வங்கியிடமும் புகார் அளித்துள்ளனர். இதுமட்டும் அல்லாமல் இதை உடனடியாகத் தாய் நிறுவனம் கவனிக்கவில்லை எனில் பெரும் பிரச்சனையாக மாறும் எனத் தெரிவித்துள்ளனர்.
பாரத் பைனான்சில் இன்குலுஷன் நிறுவனம்
பாரத் பைனான்சில் இன்குலுஷன் நிறுவனத்தில் தற்போது வாராக் கடனை மோசடி மட்டும் அல்லாமல் பல அரசியல் சார்ந்த பிரச்சனைகள் இருப்பதாகவும் எக்னாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. முன்பு SKS மைக்ரோபைனான்ஸ் நிறுவனமாக இருந்த நிறுவனம் தான் தற்போது பாரத் பைனான்சில் இன்குலுஷன் நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனத்தை மார்ச் 2019ல் இண்டஸ்இண்ட் வங்கி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
ஆவணம்
இண்டஸ்இண்ட் வங்கி இந்தப் புகாரை பெயரில்லாத புகாராகத் தான் பெற்றது, இதுபோன்ற பிரச்சனைகளைச் சமாளிக்க வலிமையான கட்டமைப்பு எங்களிடம் உள்ளது. மேலும் இந்தப் பிரச்சனை குறித்து நிர்வாகம் ஆய்வு செய்து வருகிறது, ஆனால் இதுவரை இந்தப் பிரச்சனையை உறுதி செய்யும் எவ்விதமான ஆவணமும் கிடைக்கவில்லை என வங்கி தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.
ரிஸ்க் மேனேஜ்மென்ட் மற்றும் தணிக்கை குழு
மேலும் சில புகார்களும் இதுகுறித்து வந்துள்ளதாக வங்கி கட்டுப்பாட்டு ஆணையத்திடம் பெற்றுள்ளது. மேலும் தற்போது பாரத் பைனான்சில் இன்குலுஷன் நிறுவன பங்குச்சந்தையில் இல்லை என்பதாலும், இண்டஸ்இண்ட் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதாலும் இதுவரை ரிஸ்க் மேனேஜ்மென்ட் மற்றும் தணிக்கை குழு இல்லாமல் இருந்தது. தற்போது இதை அமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
எம்.ஆர்.ராவ்
அக்டோபர் 14ஆம் தேதி இந்தப் புகார் அடிப்படையில் பாரத் பைனான்சில் இன்குலுஷன் நிறுவனத்தின் சிஇஓ பதவி விலகினார். இவரது ராஜினாமா கடிதத்தில் வாடிக்கையாளர் ஒப்புதல் இல்லாமல் மே 2021ல் அளிக்கப்பட்ட 80,000 கடன்கள் குறித்து ரிசர்வ் வங்கிக்குப் பிரச்சனை இருப்பது தெரியும். ஆனால் இதன் மூலம் கடன் திரும்பிச் செலுத்தும் அளவீடு அதிகரித்துள்ளது. இதேபோல் இதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளையும் நிர்வாகத்திற்கு முன்கூட்டியே தெரிவித்துள்ளேன் எனச் சிஇஓ எம்.ஆர்.ராவ் தெரிவித்துள்ளார்.