ஆப்பிரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா ஊழல் குற்றச்சாட்டில் சிக்க காரணமாக இருந்தவர்களும், அந்த நாட்டில் இருந்து தப்பிச் சென்ற இந்திய சகோதரர்களான ராஜேஷ் குப்தா, அடுல் குப்தா இருவரையும் துபாய் போலிசார் கைது செய்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவையே திரும்பி பார்க்க வைத்த இந்த சகோதரர்கள் யார்? இவர்கள் என்ன வணிகம் செய்து வருகின்றனர்? இவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு? மற்ற முக்கிய காரணிகள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
யார் இவர்கள்?
அஜய் குப்தா, அதுல் குப்தா மற்றும் ராஜேஷ் குப்தா உத்தரபிரதேச மாநிலத்தினை சேர்ந்த சகோதரர்களான குப்தா சகோதரர்கள், 1993ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு இடம் பெயர்ந்தனர்.
இவர்கள் தென் ஆப்பிரிக்காவில் சுரங்கம், விமான போக்குவரத்து, ஊடகம், தொழில் நுட்பம், எரிசக்தி, கணினி உள்ளிட்ட பல தொழில்களில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
பல மோசடிகள்
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுடன் நட்புறவை ஏற்படுத்திக்கொண்டு, அரசு அதிகாரத்தில் புகுந்து தங்களுக்கு வேண்டியவர்களை நியமித்தது, பல நிதிமோசடியில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளது.குறிப்பாக அரசு துறைகளுடனான லாபகரமான ஒப்பந்தங்கள் மூலம் குப்தா குடும்பத்தினருக்கு சொந்தமான பல நிறுவனங்கள் பலனடைந்ததாக கூறப்படுகிறது.
இந்தியாவிலும் மோசடியா?
குப்தா சகோதரர்கள் இந்தியாவில் பணமோசடி செய்ததாகவும் குற்றாச்சாட்டுகள் எழுந்துள்ளன. கடந்த 2018ம் ஆண்டு டெல்லியில் அமைந்துள்ள அவர்கள் அலுவலகம் உட்பட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் குப்தா சகோதரர்கள் மீது சுமத்தப்பட்ட பெரும்பாலான குற்றச்சாட்டுகள், ஜேக்கப் ஜூமாவுடன் அவர்களுக்கு இருந்த நெருக்கமான உறவுடன் தொடர்புடையதாக இருந்ததாக கூறப்படுகிறது.
ஜேக்கப் ஜூமா பற்றி
ஜேக்கப் ஜூமா 2009ம் ஆண்டிலிருந்து 9 ஆண்டுகள் தென் ஆப்ரிக்காவின் அதிபராக இருந்தார். அதன்பிறகு அவர் மீது சுமத்தப்பட்ட பல ஊழல் குற்றச்சாட்டுகளால் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ஜூமாவுடனான தொடர்பை பயன்படுத்தி, தென் ஆப்ரிக்க அரசின் அனைத்து மட்டங்களிலும் குப்தா சகோதரர்கள் அதிகாரம் செலுத்தினர் என்ற குற்ற சாட்டு இருந்து வருகின்றது.
பல கோடி கையாடல்
தென் ஆப்பிரிக்காவில் செயல்பட்டு வந்த பாராஸ்டாட்டல் நிறுவனங்களில் இருந்து கோடிக்கணக்கான டாலர்களை கையாடல் செய்த குப்தா சகோதரர்கள், கடந்த 2018ம் ஆண்டு துபாய்க்கு தப்பிச் சென்றனர். இதனை தொடர்ந்து 2021ம் ஆண்டு குப்தா சகோதரர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு தென்னாப்பிரிக்கா கோரிக்கை விடுத்தது.
செருப்பு விற்பனை
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அஜய் குப்தா, அதுல் குப்தா, ராஜேஸ் குப்தா ஆகிய 3 சகோதரர்கள், ஆரம்பத்தில் தென் ஆப்பிரிக்காவில் காரில் செருப்பு வியாபாரத்தை நடத்துகிறார்கள். அதன்பின் சஹாரா கம்ப்யூட்டர்ஸ் என்ற நிறுவனத்தை மூவரும் தொடங்கினர். அதன் பிறகு தென் ஆப்பிரிக்காவின் வறுமை, ஊழல், லஞ்சம் ஆகியவற்றை பயன்படுத்திக்கொண்ட குப்தா சகோதரர்கள் அரசு அதிகாரத்துக்குள் மெல்ல நுழைந்து தங்களுக்கு வேண்டிய காரியங்களை சாதிக்கத் தொடங்கினர். எனினும் ஊழல் பிரச்சனைக்கு பிறகு துபாய்க்கு தப்பி சென்று விட்டனர்.
ரெட் நோட்டீஸ்
எனினும் குப்தா சகோதரர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டது, ஆயுதக் கொள்முதலில் ஊழல் நடந்தது உள்ளிட்ட வழக்கில் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. இப்படி அதிபரையே கம்பி எண்ண வைத்த குப்தா சகோதரர்கள் துபாயில் இருப்பதை அறிந்து, அவர்களை தென் ஆப்பிரிக்காவுக்கு அழைத்துவர அந்நாட்டு அரசு முயன்றது. இது தொடர்பாக ரெட்நோட்டீஸ் 3 பேருக்கும் எதிராக விடுக்கப்பட்டது.
கைதி பரிமாற்றத்திற்கு மறுப்பு
ஐக்கிய அரபு அமரீகத்துக்கும், தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையே கைதிகளை பரிமாற்றம் செய்யும் ஒப்பந்தம் இல்லாததால், குப்தா சகோதர்ரகளை ஒப்படைக்க யுஏஇ அரசு மறுத்துவிட்டது. இதன் பிறகு தான் இது தொடர்பாக ஐ.நா.வில் தென் ஆப்பிரிக்க அரசு முறையிட்டது. அதன்பின் 2021ம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையே கைதிகளை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம் கையொப்பம் நடந்தவுடன், குப்தா சகோதரர்களை அழைத்து செல்ல தென் ஆப்பிரிக்க அரசு சார்பில் விண்ணப்பம் செய்யப்பட்டது.
நெட்வொர்த் எவ்வளவு?
இந்த நிலையில் தான் துபாய் போலீஸார், குப்தா சகோதர்களில், ராஜேஷ் குப்தா, அடுல் குப்தா ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். 3-வது நபரான அதுல் குப்தா மட்டும் சிக்கவில்லை என கூறப்படுகிறது.
அதுல் குப்தாவின் நெட்வொர்த் 2016 நிலவரப்படி 773.47 மில்லியன் டாலராகும். மற்ற சகோதரர்களின் சரியான சொத்து விவரங்கள் இல்லை.