ஒருவரின் சொத்து அவர் இறந்த பிறகு யாருக்கு செல்ல வேண்டும்? என்பதை சட்டப்பூர்வமாக சொல்லும் ஆவணமே உயில். இதை வைத்துதான் அவருடைய வாரிசுகளுக்கு சொத்து சென்றடையும். உயில் எழுதாமல் ஒருவர் இறந்து விட்டால் குடும்பத்திற்குள்ளேயே பல குழப்பங்கள் ஏற்படும். அதுவும் குறிப்பாக இறந்தவருக்கு திருமணம் ஆகாமல் இருந்தால் அந்த சொத்து அவருடைய சகோதர சகோதரிகளுக்கு சேருமா? யாருக்கு முன்னுரிமை வழங்கப்படும்? என்ற பல சந்தேகங்கள் எழும். இதை நாம் அனுமானங்களின் அடிப்படையில் முடிவு செய்ய முடியாது. இதற்கும் சட்ட விதிகள் உள்ளது. அதன் அடிப்படையில் தான் யாருக்கு எவ்வளவு பங்கு சேரும் என்பது தீர்மானிக்கப்படும்.
இந்து வாரிசுரிமைச் சட்டம்: இந்துக்கள், பௌத்தர்கள், சமணர்கள் மற்றும் சீக்கியர்கள் ஆகியோரில் யாரேனும் உயில் எழுதாமல் இருந்து விட்டால் இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956-இன் கீழ் பங்கு பிரித்து வழங்கப்படும். இந்தச் சட்டத்தின்படி முதல் நிலை வாரிசுகள் இரண்டாம் நிலை வாரிசுகள் என இரண்டு நிலையாக வாரிசுகளை பிரிப்பார்கள்.

அதில் முதல் நிலை வாரிசுகளின் கீழ் இறந்தவரின் மனைவி, மகன், மகள், தாய், தந்தை ஆகியோர் அடங்குவர். இரண்டாம் நிலை வாரிசுகளின் கீழ் சகோதர, சகோதரிகள் அடங்குவர். முதல் நிலை வாரிசுகள் யாருமே இல்லாத பட்சத்தில் சகோதர சகோதரிகளுக்கு சொத்தில் உரிமை உண்டு. மனைவி, மகன் குழந்தைகள் யாரேனும் இருந்தால் அவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். அப்படி இல்லாத பட்சத்தில் அவருடைய சகோதர சகோதரிகளுக்கு பிரித்து வழங்கப்படும்
இறந்த நபருக்கு தந்தை மனைவி மகன் மகள் இப்படி யாருமே இல்லை அவருடைய தாயாருடன் வசித்து வந்தவர் என்றால் அந்த சொத்து முழுமையாக தாயையே சென்றடையும். அவருடைய சகோதர சகோதரிகளுக்கு பங்கு கிடைக்காது. அதுவே இறந்தவருக்கு தாய் இல்லை.. தந்தை இருக்கிறார்.. திருமணமாகாதவர் என்றால்.. சகோதர சகோதரிகளை விட தந்தைக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இதில் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். இறந்தவருடைய சொத்து சுய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்டதா? அல்லது பரம்பரை சொத்தா? என்பதையும் பார்க்க வேண்டும். ஏனெனில் 2005-ஆம் ஆண்டில் இந்து வாரிசுரிமை சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது. அதில் பரம்பரை சொத்தாக இருந்தால் அதில் மகன்களுக்கும் மகன்களுக்கும் சமமான உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதுவும் சகோதர சகோதரிகள் சேர்ந்து ஒரு சொத்தை வாங்கி இருந்தால் அது கூட்டு சொத்தாக இருக்கும். இதில் ஒரு சகோதரர் சொத்தை விற்க விரும்பலாம். மற்றொருவர் அதை நினைவாக வைத்துக் கொள்ள விரும்பலாம். இது போன்ற சமயங்களில் முறையாக சட்ட ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.


Click it and Unblock the Notifications
