தமிழ்நாடு மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைக்கும் அளவிற்கு ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, 5 முக்கியமான பொருளாதார வல்லுநர்களைக் கொண்டு புதிய பொருளாதார ஆலோசனை குழுவை அமைத்துள்ளது.
பொருளாதாரத்தையும், மாநிலத்தில் நிதி நிலையை மேம்படுத்துவதையும் தாண்டி, தமிழ்நாட்டு மக்களின் வறுமையைப் போக்குவது மிகவும் முக்கியமானது என்பதை உணர்ந்த ஸ்டாலின் அரசு, உலகளவில் வறுமை ஒழிப்பு ஆய்வில் உலகின் உயரிய விருதான நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டப்லோ-வை தனது பொருளாதார ஆலோசனை குழுவில் இணைத்துள்ளது.
தமிழ்நாட்டின் மும்முனை செயல்பாடுகள்
தமிழ்நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம், நிதி நிலை ஆகியவற்றை மேம்படுத்த நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தலைமையிலான ஒரு அணியும், மாநில வளர்ச்சி குழு துணைத் தலைவராக ஜெயரஞ்சன் தலைமையிலான ஒரு அணியும், பொருளாதார ஆலோசனை குழு வாயிலாக ரகுராம் ராஜன் தலைமையிலான ஒரு அணியும் மும்முனையில் இயங்க உள்ளது.
தமிழ்நாட்டு மக்களின் வறுமை
இந்த நிலையில் தமிழ்நாட்டு மக்களை வறுமையில் இருந்து மீட்டு எடுப்பதற்காகவும், அவர்களின் வாழ்வியலை மேம்படுத்துவதற்காகவும் இத்துறையில் சிறந்து விளங்கும் நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டப்லோ நியமிக்கப்பட்டு உள்ளார்.
நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டப்லோ
எஸ்தர் டப்லோ, அபிஜித் பானர்ஜி, மைக்கேல் கிரேமர் ஆகியோர் நடத்திய வறுமை ஒழிப்பு ஆய்வுகளுக்கு 2019ல் பொருளாதார நோபல் பரிசு வழங்கப்பட்டது. கல்வி, சுகாதாரம், மருத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய வறுமை ஒழிப்பை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதை எஸ்தர் டப்லோ உட்பட மூவர் அடங்கிய குழு ஆராய்ச்சி செய்தது உலகளவில் நோபல் பரிசு மூலம் அங்கீகரிக்கப்பட்டது.
எஸ்தர் டப்லோ கருத்து
நலத்திட்டங்களை மக்களிடம் நேரடியாகக் கொண்டு செல்வதே வறுமை ஒழிப்பின் முதல் படி என்று எஸ்தர் டப்லோ குறிப்பிட்டார். முக்கியமாக இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளை மோசமாக விமர்சனம் செய்து வந்தார், இதுமட்டும் அல்லாமல் மோடி அரசின் செயல்பாடுகளை அவ்வப்போது விமர்சனம் செய்யும் அபிஜித் பானர்ஜி-யின் மனைவி தான் இந்த எஸ்தர் டப்லோ.
ரகுராம் ராஜன் தலைமையிலான குழு
இவர் ரகுராம் ராஜன் தலைமையிலான குழுவில் இடம்பெற்று இருப்பது ஜாக்பாட் என்று சொன்னால் மிகையில்லை. இக்குழுவின் மூலம் தமிழ்நாட்டின் நிதி நிலையை மேம்படுத்துவதோடு வறுமையையும் ஒழிக்க முடியும்.
வறுமை ஒழிப்பு
அதேபோல் வறுமை ஒழிப்பு என்பதும் இன்று திட்டம் அறிவித்து நாளை தீர்ப்பது இல்லை, சரியான திட்டம் வகுத்தல் மூலம் நீண்ட கால அடிப்படையில் சரி செய்ய வேண்டிய மிக முக்கியமான ஒன்று. இந்தப் பணிக்கு எஸ்தர் டப்லோ தேர்வு செய்துள்ளதும், பொருளாதார ஆலோசனை குழுவில் நியமிக்கப்பட்டு உள்ளதும் தமிழக அரசின் கண்ணோட்டத்தைக் காட்டுகிறது.
பொருளாதாரக் கொள்கை
பொருளாதாரக் கொள்கை என்பது பேப்பரில் மட்டுமே இருப்பது கிடையாது. அதை நடைமுறை ரீதியாக மக்களிடம் எப்படிக் கொண்டு செல்வது என்பதை எஸ்தர் டப்லோ தனது ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடித்தவர் என்பது இதில் கூடுதல் சிறப்பு.