தமிழ்நாட்டில் அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக வெற்றி பெற்றது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சி அமைத்துள்ளது, முதலமைச்சராக விஜய் பொறுப்பு வகித்து வருகிறார்.
விஜய் பொறுப்பேற்றது முதலே தனக்கு நெருக்கமானவர்களுக்கு அரசின் முக்கிய பொறுப்புகளை வழங்குவதாக தொடந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்.முதலில் அவரது ஜோதிடருக்கு அரசு பதவி வழங்கப்பட்டது சர்ச்சையாகி பின்னர் வாபஸ் பெறப்பட்டது. அடுத்ததாக ரூட் அமைப்பின் தலைவர் ஜெகதீஷ் பழனிசாமிக்கு பதவி வழங்கியதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில் தான் விஜய்-இன் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளரும் கேவிஎன் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் தலைவருமான கே. வெங்கட நாராயணாவுக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக பதவி வழங்கப்பட்டுள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்பது அமைச்சரவை அந்தஸ்துக்கு நிகரான ஒரு பதவி.
ஓராண்டு காலத்திற்கு தற்காலிக அடிப்படையில் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே பாலமாகச் செயல்படுவது, தமிழக முதலமைச்சரின் டெல்லி பயணங்களை ஒருங்கிணைப்பது, மத்திய அமைச்சகங்களுடனான திட்டப்பணிகளை கவனிப்பது மற்றும் நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் நலன்களை முன்னெடுப்பது போன்றவை இந்த பதவியின் முக்கியப் பணிகள்.
ஏற்கனவே முதலமைச்சர் விஜய் ஆளுநரை சந்திக்க செல்லும் போது வெங்கட நாராயணாவும் உடன் சென்றிருந்ததே சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இவ்வளவு முக்கியமான பதவியை அவருக்கு ஏன் வழங்கினார்கள் என்ற விவாதம் மிக வலுவாக எழுந்துள்ளது. இதற்கு முதலில் இந்த வெங்கட் நாராயணா யார் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் தான் வெங்கட் நாராயணா. இவர் KVN Productions என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர். முன்னதாக, 'பிரஸ்டீஜ் குரூப்' நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றியவர். இந்த குழுமத்தின் ரியல் எஸ்டேட் திட்டங்கள் டெல்லி உள்ளிட்ட பிரதான நகரங்களுக்கும் விரிவடைய இவர் முக்கிய காரணம். தொழில் ரீதியாக திறமையான ஒரு நபர். 2020இல் தான் கேவிஎன் பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். கடைசியாக விஜய்யின் கடைசித் திரைப்படமான ஜனநாயகன் திரைப்படத்தை தயாரித்தார். அந்த படம் திரைக்கே வரவில்லை பல சர்ச்சையில் சிக்கி கொண்டிருக்கிறது.
இந்த சூழலில் தான் அவருக்கு தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி பொறுப்பு வழங்கப்பட்டுல்ளது. பாரம்பரியமாக, இந்த பதவிக்கு அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள் அல்லது மூத்த அதிகாரிகளே நியமிக்கப்படுவார்கள். ஆனால், முதல்முறையாக ஒரு தொழிலதிபர் நியமிக்கப்பட்டுள்ளார். இது இப்பதவியின் முக்கியத்துவத்தைக் குறைப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றன.
வெங்கட் நாராயணா கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பதால், மேகதாது அணைப் பிரச்சனை போன்ற தமிழகத்தின் வாழ்வாதார சிக்கல்களில் இவர் எப்படி தமிழகத்தின் உரிமைகளுக்காக உறுதியாகக் குரல் கொடுப்பார் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.இவர் முதலமைச்சரின் நெருங்கிய நண்பர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் என்பதால், தனிப்பட்ட செல்வாக்கின் அடிப்படையிலேயே இந்த நியமனம் நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.


Click it and Unblock the Notifications

