மத்திய அரசு அதீத கடனில் இருந்த ஏர் இந்தியா டாடா குழுமத்திற்கு விற்பனை செய்துள்ள நிலையில் மீதமுள்ள விமானப் போக்குவரத்துத் துறையின் நிறுவனங்கள் மற்றும் சொத்துக்களை விற்பனை செய்ய முடிவு செய்து அதற்கான பணிகளைத் துவங்கியுள்ளது.
இந்நிலையில் ஏர் இந்தியா-வின் சேவைகளை விரைவில் சந்தைக்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காக, டாடா சன்ஸ்-ன் கிளை நிறுவனமான டேலெஸ் 20 பேர் கொண்ட முக்கிய நிர்வாகக் குழுவை அமைத்து உள்ளது இதில் டாடா குழும அதிகாரிகள் மட்டும் இல்லாமல் ஏர் இந்தியாவின் சில உயர் அதிகாரிகளும் இணைந்துள்ளனர்.
இதேவேளையில் டாடா குழுமம் ஏர் இந்தியாவின் புதிய தலைவரையும் தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளது.
ஏர் இந்தியா
ஏர் இந்தியா நிறுவனத்தை மொத்தமாகக் கைப்பற்றும் முக்கியமான ஒப்பந்தத்தில் நவம்பர் மாதம் தான் மத்திய அரசும் டேலெஸ் நிறுவனமும் கையெழுத்திட உள்ளது. ஆனால் அதற்கு முன்பாகவே ஏர் இந்தியா-வை எப்படி டாடா குழும நிர்வாகத்திற்குள் கொண்டு வர வேண்டும் எனப் பணிகளைத் தற்போது உருவாக்கியுள்ள குழு துவங்கியுள்ளது.
டாடா சன்ஸ் - டேலெஸ்
இந்நிலையில் டாடா சன்ஸ் தலைமையிலான டேலெஸ் நிறுவனம் ஏர் இந்தியாவின் புதிய தலைவரை தேடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஏர் இந்தியா-வை மீண்டும் முன்னணி நிறுவனமாக மாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் டாடா, சர்வதேச விமானப் போக்குவரத்துச் சந்தையில் அதிக அனுபவம் கொண்ட ஒருவரை தான் சிஇஓ-வாக நியமிக்க முடிவு செய்துள்ளது.
வெளிநாட்டு அதிகாரிகள்
இதன் மூலம் வெளிநாட்டு அதிகாரிகள், உலகின் முன்னணி விமானச் சேவை நிறுவனங்களின் சிஇஓ ஆகியோரை தேடும் பணியில் இறங்கியுள்ளது. டேலெஸ் நிறுவனத்தின் கீழ் தற்போது ஏர் இந்தியா மட்டும் அல்லாமல் ஏர் ஏசியாவும் உள்ளது. இதனுடன் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் உடன் உருவாக்கப்பட்ட விஸ்தாராவும் உள்ளது.
3 விமான நிறுவனங்கள்
இந்த 3 நிறுவனங்களையும் இணைத்து நிர்வாகம் செய்யவில்லை என்றாலும் 3 நிறுவனத்துடனும் இணைந்து பணியாற்ற வேண்டியது கட்டாயம். ஆகையால் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி யாரேனும் ஏர் இந்தியா தலைவராக நியமிக்கப்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளது.
ஏர் இந்தியா ராஜீவ் பன்சால்
ஏர் இந்தியா நிறுவனத்தில் தற்போது சிஇஓ பதவியில் யாருமே இல்லை. இதற்கு மாறாகச் சேர்மன் மற்றும் நிர்வாகத் தலைவர் பதவியில் ராஜீவ் பன்சால் உள்ளார், இவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரி மட்டும் அல்லாமல் சிவில் ஏவியேஷன் துறையின் செயலாளரும் ஆவார். இதனால் டாடா கட்டுப்பாட்டிற்கு ஏர் இந்தியா வந்த பின்னர் இவர் இப்பதவியில் இருந்து விலக வேண்டியிருக்கும்.
102 இடங்கள்
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஏர் இந்திய இந்திய மற்றும் உலக நாடுகளில் சுமார் 102 இடங்களுக்கு விமானச் சேவை அளித்து வருகிறது. ஏர் இந்தியா-விடம் தற்போது ஏர்பஸ் மற்றும் போயிங் ஆகிய இருவிமான நிறுவனங்களைச் சார்ந்த மொத்தம் 128 விமானங்களை வைத்துள்ளது.
கட்டாயம் தேவை
உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் சுமார் 25 சதவீத சந்தையை வைத்திருக்கும் ஏர் இந்தியா உலக நாடுகளில் சுமார் 900 விமானப் பார்கிங் ஸ்லாட் வைத்துள்ளது. இவை அனைத்தையும் சிறப்பான முறையில் பயன்படுத்தி வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல கட்டாயம் வெளிநாட்டுச் சந்தை அனுபவம் கொண்ட தலைவர் ஏர் இந்தியாவிற்கு வேண்டும்.