இந்தியாவின் பெரும் பணக்காரராக ஆக இருந்த கௌதம் அதானி-யின் அதானி எண்டர்பிரைஸ் நிறுவனத்தின் 20000 கோடி ரூபாய் மதிப்பிலான FPO திட்டத்தைத் திடீரென ரத்து செய்வதாகப் புதன்கிழமை இரவு அறிக்கையை வெளியிட்டது மூலம் ரீடைல் முதலீட்டாளர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதானி எண்டர்பிரைஸ் நிறுவனத்தின் FPO திட்டத்திற்கு முதல் 2 நாள் பெரிய அளவிலான வரவேற்பு கிடைக்காத நிலை 3வது நாள் முடிவில் 20000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் அனைத்திற்கும் முதலீட்டை பெற்றது ஆனாலும் தற்போது 2 முக்கியக் காரணத்தால் தனது மாபெரும் FPO திட்டத்தை ரத்துச் செய்து முதலீட்டாளர்களுக்குப் பணத்தைத் திரும்பக் கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த இரு காரணங்கள் மூலம் அதானி குழும பங்குகள் கூடுதலான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது என்பது தான் உண்மை. இந்த நிலையில் அதானி குழுமம் FPO-ஐ ரத்துச் செய்ய என்ன காரணம்..? கிரெடிட் சுசூசி என்ன செய்தது..?
ஹிண்டன்பர்க் ரிசர்ச்
அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பு 32000 வார்த்தைகளைக் கொண்ட அறிக்கையைச் சரியாக அதானி எண்டர்பிரைஸ் நிறுவனத்தின் FPO வெளியாகும் போது வெளியிட்ட காரணத்தால் அதானி குழுமத்திற்கான பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது.
அதானி எண்டர்பிரைசஸ்
அதானி எண்டர்பிரைசஸ் புதன்கிழமை வர்த்தகம் வரையில் சுமார் 28 சதவீதம் வரையில் சரிந்தது, இதை விட முக்கியமான விஷயம் என்னவென்றால் அதன் FPO விலையைக் காட்டிலும் மோசமான சரிவை எட்டியுள்ளது.
முதலீட்டாளர்கள் நம்பிக்கை
இதனால் முதலீட்டாளர்கள் பணத்தைக் காப்பாற்றவும், முதலீட்டாளர்கள் நம்பிக்கையைத் தொடர்ந்து காப்பாற்றவும் FPO திட்டத்தை ரத்துச் செய்வதாக அறிவித்துப் பணத்தைத் திரும்பவும் முதலீட்டாளர்களுக்கே அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
நிர்வாகக் குழு முடிவு
இந்த முடிவை புதன்கிழமை மாலை அதானி எண்டர்பிரைசஸ் நிர்வாகக் குழு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாக்க எடுத்துள்ளது, இது மட்டும் அல்லாமல் FPO முதலீட்டாளர்களின் பணத்தைத் திரும்ப அவர் அவர் கணக்குகளுக்குத் திருப்பிச் செலுத்துவதற்கான பணிகளைத் துவங்கியுள்ளதாகவும் அதானி குழும தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கிரெடிட் சுசூசி
இதேவேளையில் கிரெடிட் சுசூசி ஏஜி நிறுவனம் தனது தனியார் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மார்ஜின் லோன் வழங்குவதற்கு அதானி குரூப் நிறுவனங்களின் பத்திரங்களைக் கோலேட்ரல் ஆகப் பெறுவதை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
அதானி குரூப் பத்திரங்களை
இது ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பின் அறிக்கைக்குப் பின்பு அதானி குழும பங்குகளின் விலை தொடர்ந்து குறைந்து வரும் காரணத்தால் அதானி குரூப் நிறுவனங்களின் பத்திரங்களைக் கோலேட்ரல் ஆகப் பெற்று கடன் கொடுப்பதை நிறுத்த கிரெடிட் சுசூசி முடிவு செய்துள்ளது.
முக்கிய நிறுவனம்
மேலும் கிரெடிட் சுசூசி ஏஜி நிறுவனம் அதானி போர்ட்ஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதான் எலக்ட்ரிசிட்டி மும்பை ஆகிய நிறுவனம் வெளியிட்ட பத்திரங்களுக்கு zero-lending value எனக் குறியிட்டு உள்ளது. ஆனால் மற்ற வங்கிகள் தொடர்ந்து கடன் அளித்து வருகிறது.
அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள்
இந்த அறிவிப்பு வெளியான நிலையில் இன்று அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் சுமார் 9 சதவீதம் சரிந்துள்ளது. ஜனவரி 9 ஆம் தேதி 3854.2 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 1809.40 ரூபாய் வரையில் சரிந்துள்ளது.
52 வார குறைவான விலை
இந்நிறுவனத்தின் 52 வார குறைவான விலை 1,529.55 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது, FPO வெற்றி மூலம் கணிசமான உயர்வை பதிவு செய்த நிலையில் இன்று கிரெடிட் சுசூசி முடிவு காரணமாக 9 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.