இந்தியாவில் அதிவேக இணையதள 5ஜி சேவையை பிரதமர் மோடி சமீபத்தில் தொடங்கி வைத்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இந்தியாவில் முதன்முதலாக தனியார் தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை அளிக்க இருக்கிறது.
இந்த நிலையில் ஏர்டெல் நிறுவனம் 4ஜி சேவைக்கு வாங்கிய கட்டணத்தையே 5ஜி சேவைக்கும் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் 5ஜி சேவை
இந்தியாவில் அதிவேக இன்டர்நெட் தேவையான 5ஜி சேவையை சமீபத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதனை அடுத்து ஏர்டெல், ஜியோ, ஐடியா போன்ற நிறுவனங்கள் அடுத்தடுத்து தங்களது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை தர தயாராக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
5ஜி கட்டணம்
இந்த நிலையில் பாரதி ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு 4ஜி நெட்வொர்க்கில் வாங்கிய கட்டணத்தை 5ஜி நெட்வொர்க் சேவைக்கும் வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 5ஜி சேவை தொடங்கப்பட்டால் அதன் கட்டணம் அதிகமாக இருக்கும் என்று வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்த நிலையில் ஏர்டெல் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
5ஜி ஸ்மார்ட்போன்கள்
இதுகுறித்து ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கூறியபோது தற்போது 8 முதல் 9 சதவீத 5ஜி ஸ்மார்ட்போன்கள் மட்டுமே வாடிக்கையாளர்கள் வைத்திருக்கின்றனர். எனவே இதற்கென தனியாக ஒரு கட்டணத்தை விலை நிர்ணயம் செய்தால் அது ஒட்டுமொத்த பரிணாமத்தை தீர்மானிக்கப் போவதில்லை. 5ஜி ஸ்மார்ட்போன்கள் குறைவாக இருப்பதால் அதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டால் கூடுதலாக பெரிய வருமானமும் கிடைக்காது. எனவே இப்போதைக்க்கு 5ஜி சேவைக்கு 4ஜி சேவைக்கான கட்டணத்தை பெற இருக்கிறோம் என்று தெரிவித்து உள்ளார்.
கட்டணம் நிர்ணயம் எப்போது?
ஆனால் அதே நேரத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் 5ஜி ஸ்மார்ட்போன்கள் அதிகமாக வாடிக்கையாளர்களின் கைக்கு வந்துவிடும் என்றும் அதன் பிறகு 5ஜி சேவைக்கான கட்டணத்தை நிர்ணயிக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சாம்சங் - சியோமி
சாம்சங் மற்றும் சியோமி போன்ற ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் 5ஜி சேவைக்கான போன்களை தயாரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன என்பதும் இதனை அடுத்து அதிகளவு 5ஜி ஸ்மார்ட்போன் மக்களின் கைக்க்கு வந்தவுடன் ஏர்டெல் 5ஜி சேவைக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்யும் என்றும் கூறப்படுகிறது.
ஜியோ
அதுமட்டுமின்றி ஜியோ நிறுவனம் தீபாவளி நாள் முதல் 5ஜி சேவையை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருக்கிறது என்பதும் மலிவு விலையில் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே ஜியோ நிர்ணயம் செய்யும் கட்டணத்தை பொருத்து ஏர்டெல் நிறுவனமும் நிர்ணயம் செய்யும் என்றும் கூறப்படுகிறது.
முகேஷ் அம்பானி
வரும் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தாலுகாவிலும் 5ஜி சேவையை கொண்டு வருவோம் என ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். எனவே அவர் நிச்சயம் 5 சேவைக்கான கட்டணத்தை குறைவாக நிர்ணயிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் இப்போதைக்கு ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 4ஜி கட்டணத்திலேயே 5ஜி சேவையை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.