இந்தியாவின் முன்னணி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து 2வது நாளாகச் சற்றும் எதிர்பார்க்காத வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்து வருகிறது. கடந்த 6 மாதத்தில் 2 நாள் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவது இது தான் முதல் முறை.
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து உயர்ந்து நாட்டின் பல பகுதிகளில் புதிய உச்சத்தைத் தொட்டு வந்த வேளையில், 24 நாட்கள் விலை உயர்வின் விடுமுறைக்குப் பின் தற்போது 2 நாட்களாக விலை குறைந்து வருவது சாமானிய மக்கள் முதல் போக்குவரத்து நிறுவனங்கள் வரையில் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகவே உள்ளது.
இந்நிலையில் இந்தத் திடீர் சரிவுக்குப் பின்னால் இருக்கும் உண்மையான காரணம் என்ன..?!
பெட்ரோல், டீசல் விலை
சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாகவும், மத்திய அரசின் அதீத வரி விதிப்புக் காரணமாக இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து நாட்டின் பல பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தொட்டு புதிய உச்சத்தைத் தொட்டது.
5 மாநிலத்தில் தேர்தல்
இந்த நிலையில் தமிழ்நாடு, கேரளா உட்பட 5 மாநிலத்தில் தேர்தல் நாள் அறிவிக்கப்பட்ட அடுத்த நாள் முதல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றத்தைக் கண்காணிக்க வேண்டும் என்ற காரணத்தின் வாயிலாக இந்தியாவின் முன்னணி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் விலை மாற்றத்தை நிறுத்தியது.
24 நாட்கள் விடுமுறை
நாட்டின் முன்னணி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் சுமார் 24 நாட்கள் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட கடுமையான மாற்றங்களைத் தாண்டியும் விலையை மாறாமல் தொடர்ந்து ஓரே விலையை நிலைநிறுத்தியது. இது சாமானிய மக்களுக்குச் சாதமாக அமைந்தது என்றால் மிகையில்லை.
சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு நஷ்டம்
இந்த 24 நாட்களில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 70 டாலர் வரையில் உயர்த்தது. இந்த விலை மாற்றத்தின் வாயிலாகச் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 2.5 முதல் 3 ரூபாய் வருமானத்தை இழக்கும் எனக் கணிப்புகள் வெளியான நிலையில் விரைவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் என எதிர்ப்பாக்கப்பட்ட நிலையில் தற்போது 2 நாட்களாகத் தொடர்ந்து விலை குறைந்து வருகிறது.
கச்சா எண்ணெய் விலை
அக்டோபர் மாதம் வெறும் 40 டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு பேரல் கச்சா எண்ணெய், கொரோனா பாதிப்பு குறைந்த வேளையில் உலக நாடுகளில் ஏற்பட்ட அதீத எரிபொருள் தேவை மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட கச்சா எண்ணெய் உற்பத்தி ஆகியவற்றின் காரணமாக மார்ச் மாதத்தில் 70 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
மீண்டும் கொரோனா
இந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று, ஐரோப்பிய நாடுகளில் புதிதாக அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், அமெரிக்கா அதிகரித்திருக்கும் கச்சா உற்பத்தி ஆகியவை சர்வேதச விற்பனை சந்தையில் இதன் விலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
OPEC அமைப்பு நாடுகள்
OPEC அமைப்பு நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை ஏப்ரல் மாதமும் தொடர்ந்து நிர்ணயம் செய்யப்பட்ட குறைவான அளவு கச்சா எண்ணெய் மட்டுமே உற்பத்தி செய்யும் என முடிவு செய்துள்ள நிலையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயரத் துவங்கியது. இதன் வாயிலாகவே 70 டாலரைத் தொட்டது கச்சா எண்ணெய்.
அமெரிக்கா கச்சா எண்ணெய்
இதேவேளையில் அமெரிக்காவில் டீ ப்ரீஸ் நிலை வேகமாக மாறிய காரணத்தால் அமெரிக்காவின் கச்சா எண்ணெய் உற்பத்தியும், விநியோகமும் இயல்பு நிலைக்குத் திரும்பிய காரணத்தால் கச்சா எண்ணெய் விலையில் தடுமாற்றம் ஏற்பட்டு உள்ளது. மேலும் இந்தியா தனது கச்சா எண்ணெய் இறக்குமதி திட்டத்தில் புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது.
இந்தியாவின் புதிய திட்டம்
சவுதி அரேபியா தனது கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முடியாது எனத் தெரிவித்துள்ள நிலையில் இந்தியா அமெரிக்காவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கத் துவங்கியுள்ளது. இதனால் இந்தியாவுக்கு ஈரான் நாட்டை அடுத்த மிகப்பெரிய கச்சா எண்ணெய் சப்ளை செய்யும் நாடாகத் தற்போது அமெரிக்கா மாறியுள்ளது. இதன் மாற்றம் தான் இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை குறைய முதல் முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.