இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பலருக்கும் இருக்கும் ஒரு ஆசை, தன்னுடைய தேவையை தானே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும், கணவரையும், தன் அப்பாவையும் எதற்காகவும் நிதி ரீதியாக எதிர்பார்க்க கூடாது.
குடும்பத்தினையும் பார்க்க வேண்டும். குழந்தைகளையும் கவனித்துக் கொள்ள வேண்டும். ஆனால் சம்பாதிக்கவும் வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் என்ன செய்வது என்ற ஐடியா இருக்காது.
குறிப்பாக திருமணமான பெண்கள் என்றாலே அது மிகப்பெரிய கேள்வியாக இருக்கும்.
சிறு வயதிலேயே திருமணம்
ஆனால் டெல்லியில் இப்படி யோசித்த ஒரு பெண் எடுத்த முடிவு ஒன்று அவளுக்கு வெற்றிகரமான வணிகமாக மாறியுள்ளது. அவள் சாதித்தது எப்படி? அவள் அப்படி என்ன தொழில் செய்தாள், எப்படி குடும்பத்தையும் தொழிலையும் ஒரு சேர செய்கின்றாள். வாருங்கள் பார்க்கலாம்.
சாதரணமாக பல குடும்பங்களில் நடக்கும் ஒரு விஷயம் தான். பள்ளிப்படிப்பை முடித்தவுடன் சிறுவயதிலேயே அழகு கலை பயிற்சியினை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தவருக்கு, 18 வயதாகியவுடன் திருமணம் என்ற கடிவாளம் போடப்பட்டது.
குடும்ப பொறுப்புகள்
திருமணம் முடிந்த சிறிது காலத்திலேயே குழந்தை பிறந்துள்ளது. இப்போது குடும்ப பொறுப்புகள் அதிகமாகி விட்டன. குடும்பத்தை பார்க்க வேண்டும். குழந்தைகளை பார்க்க வேண்டும். அவர்களை நன்றாக படிக்க வைக்க வேண்டும். தனது குடும்ப செலவு என பலவும் இருந்தன. வழக்கமாக இந்த காலக்கட்டத்தில் பெண்கள் எடுக்கும் ஒரு முடிவு ஏதேனும் பணிக்கு செல்ல வேண்டும். மாதம் கொஞ்சம் வருமானம் கிடைத்தால் போதும் என்று தான் நினைப்பார்கள்.
சிறிய முதலீடு
ஆனால் டெல்லியை சேர்ந்த அந்த பெண் அப்படி எல்லாம் யோசிக்கவில்லை. தான் சிறு வயதில் கற்றுக் கொண்ட அழகுகலையை வணிகமாக்க நினைத்தார். அதற்காக லட்சக்கணக்கில் முதலீடு செய்யவும் நினைக்கவில்லை. தன்னால் முடிந்த அளவுக்கு சிறியளவிலான தொகைக்கு மேக் அப் கிட்டினை வாங்கியுள்ளார். அதனை வைத்து தான் தனது வணிகத்தினை ஆரம்பித்துள்ளார்.
வீடு தேடி செல்லும் சேவை
இதற்காக சொகுசு அறையோ, ஆடம்பரமான பொருட்கள் கொண்டிருக்கவில்லை. விளம்பரம் செய்யவில்லை. தனது வாயவழியோ தன்னை சுற்றியிருப்பவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என கூறினார். தனது சேவையினை செய்ய வாடிக்கையாளர்கள் வீடு தேடி செல்வதை வழக்கமாக கொண்டார். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு, வீட்டு வேலைகளை முடித்து விட்டு சென்றால் மாலைக்குள் வீடு திரும்பி விடுகிறார்.
குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள முடியும்
சில சமயங்களில் குழந்தைகளை பார்க்க ஆள் இல்லை என்றாலும், குழந்தைகளையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு செல்கிறார். இன்று குழந்தைகளுக்கு தேவையானதை தானே வாங்கிக் கொடுக்க முடிகிறது. என்னுடைய தேவைகளை நானே பார்த்துக் கொள்ள முடிகிறது என்கிறார்.
மாத வருமானம்?
இன்று அந்த பெண் மாதம் 20,000 ரூபாய் சம்பாதிப்பதாக தெரிவித்துள்ளார். நிதி ரீதியாக சுதந்திரமாக இருப்பதாகவும், குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள முடிகிறது. எனது குடும்பத்தினையும் பார்த்துக் கொள்ள முடிகிறது. நான் பெரியளவில் சம்பாதிக்க விரும்பவில்லை. பெரியளவில் பார்லர் வைக்க விரும்பவில்லை. எங்களது தேவைகளுக்கு போதுமானதாக இருந்தால் போதும்.
நிதி சுதந்திரம்
எனக்கு இன்று சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. மாதம் 20,000 ஆயிரம் ரூபாய் வருமானம் போதும். சம்பாதிப்பதால் எல்லோரும் மரியாதையுடன் பார்க்கிறார்கள். நானும் நிதி சுதந்திரத்துடன் இருக்கிறேன். இது போதும். இதனை விட என்ன வேண்டும் என்கிறார் கெத்தாக.
பொருளாதார பின்னணியில் உள்ளவர்கள்
ஆய்வின் படி, அழகுகலைத் துறையானது 70 லட்சத்திற்கு அதிகமான தொழில் வல்லுனர்களை கொண்டுள்ளது. அதில் மூன்றில் இரு பங்கு குறைந்த பொருளாதாரம், குறைந்த கல்வியின் பின்னணியில் உள்ளது என்பது தெரியவந்துள்ளது. மொத்தத்தில் இன்று வறுமை சூழலில் இருந்தாலும், பெண்கள் இத்துறையை தேர்தெடுப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக உள்ளது.


Click it and Unblock the Notifications