ஜனவரி மாதத்தில் நிஃப்டி (Nifty) சுமார் 4% சரிவை சந்தித்துள்ள நிலையில், பட்ஜெட்டுக்கு முந்தைய ஏற்றத்தை (Pre-Budget Rally) எதிர்பார்த்த முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. உலகளாவிய அரசியல் பதற்றங்கள் மற்றும் பலவீனமான சந்தை போக்குகளுக்கு மத்தியில், பிப்ரவரி 1 பட்ஜெட்டை நோக்கி காத்திருக்கின்றனர்.
பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு ஏன் குறைந்துள்ளது?
சந்தை நிபுணர்களின் கருத்துப்படி, பட்ஜெட் அறிவிப்புகள் இப்போது முன்பை போல பெரிய ஆச்சரியங்களை தருவதில்லை. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு.

நடைமுறை மாற்றம்: முக்கியமான கொள்கை முடிவுகள் இப்போது பட்ஜெட்டிற்கு வெளியிலேயே (ஆண்டு முழுவதும்) எடுக்கப்படுகின்றன.
ஏற்கனவே வழங்கப்பட்ட சலுகைகள்: கடந்த பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினருக்கான வருமான வரி சலுகை மற்றும் ஜிஎஸ்டி (GST) குறைப்பு போன்ற அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுவிட்டதால், இந்த முறை முக்கிய அறிவிப்புகள் வர வாய்ப்பு குறைவு.
புள்ளிவிவரங்கள் சொல்லும் உண்மை?
சம்கோ செக்யூரிட்டீஸ் (Samco Securities) தரவுகளின்படி, பட்ஜெட் நாட்களில் சந்தையின் செயல்பாடு மிகவும் மந்தமாகவே இருந்துள்ளது. கடந்த 2010 முதல் பட்ஜெட் நாட்களில் நிஃப்டியின் சராசரி லாபம் வெறும் 0.19% மட்டுமே. கடந்த 2023, 2024 மற்றும் 2025 பட்ஜெட் நாட்களில் கூட சந்தை லேசான சரிவையே கண்டது. இதே பேங்க் நிஃப்டி (Nifty Bank) குறியீடானது சற்று பரவாயில்லை என்றாலும், அதன் சராசரி லாபமும் 0.42% என்ற அளவிலேயே உள்ளது.
நிபுணர்கள் சொல்லும் சவால்கள் என்ன?
நிறுவனங்களின் சமீபத்திய மூன்றாம் காலாண்டு முடிவுகள் எதிர்பார்த்த அளவுக்கு வலுவாக இல்லை. இது சந்தையின் வேகத்தைத் தடுக்கிறது. இதனிடையே டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சற்று பலவீனமாகவே இருந்து வருகிறது. இது அந்நிய முதலீட்டாளர்களைக் யோசிக்க வைக்கலாம். இதனால் முதலீடுகள் குறைந்து வருகிறது. ஏற்கனவே பெரிய அளவில் முதலீடுகள் வெளியேறி வருகிறது. போதாக்குறைக்கு இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இன்னும் பேச்சு வார்த்தை என்ற நிலையில் தான் இருக்கிறது. இது வெற்றிகரமாக இன்னும் முடிவுக்கு வராத பட்சத்தில் அது கவலையளிக்கும் காரணியாகவும் பார்க்கப்படுகிறது. இதுவும் சந்தையில் ஒரு விதமான அழுத்தமான சூழலையே உருவாக்கியுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக அரசாங்கம் தனது செலவினங்களை கட்டுக்குள் வைக்க நினைப்பதால், பெரிய நிதி ஒதுக்கீடுகள் இருக்காது என சந்தை கணிக்கிறது. இருப்பினும் குறிப்பிட்ட சில துறைகளுக்கு அதிக ஒதுக்கீடுகள் செய்யப்படலாம்.
எங்கே லாபம் கிடைக்கும்?
மொத்த சந்தையும் ஒரே அடியாக உயராது என்றாலும், குறிப்பிட்ட சில துறைகளில் முதலீடுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஏற்றுமதி சார்ந்த துறைகள்: உலகளாவிய வரி விதிப்புகளால் பாதிக்கப்பட்ட ஏற்றுமதி துறைகளுக்கு அரசு சிறப்பு சலுகைகள் வழங்க வாய்ப்புண்டு. அப்படி வழங்கினால் அது சார்ந்த பங்குகளில் முதலீடுகள் அதிகரிக்கும். இது பங்கு விலைகளையும் அதிகரிக்க வழிவகுக்கலாம்.
பாதுகாப்புத் துறை: பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால், இது வழக்கம்போல முதலீட்டாளர்களின் கவனத்தைப் பெறும். ஆக இதுவும் கவனத்தில் கொள்ள வேண்டிய துறையாக பார்க்கப்படுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications