வீடு என்பது பாதுகாப்பு, உரிமை, கவலையில்லா எதிர்காலம் இவை அனைத்தும் 80கள், 90களில் பிறந்தவர்களின் ஃபேவரைட் டயலாக். ஆனால் ஜென்Z தலைமுறையினர் இதைப்பற்றி யோசிக்காமல், சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லாமல் உள்ளனர். இதனால் ஒட்டுமொத்த ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் இத்தலைமுறையை எப்படி வீடு வாங்க வைப்பது என்பதை யோசித்து தலையை உடைத்து வருகின்றனர்.
ஜென்Z தலைமுறையினர் சொந்த வீடு வாங்க விரும்பாமல் இருப்பதற்கு முக்கியமான காரணம்.. சொந்த வீடு வாங்குவது என்பது இன்றைய காலக்கட்டத்தில் TRAP என அவர்கள் உணர்ந்தது தான். வீடு வாங்குவது எப்படி டிராப் என கூற முடியும் என நீங்கள் கேட்கலாம், இதற்கு முக்கியமான காரணம் வீடுகளின் விலை உயர்வு.

இன்று பெங்களூர், மும்பை, சென்னை போன்ற நகரங்களில் 3BHK அப்பார்டமென்ட் வாங்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 1.5 கோடி ரூபாய் வேண்டும், அதிகப்படியாக 4-5 கோடி வரை செல்கிறது. இதுவே ஆடம்பர வீடு என்றால் 10 -20 கோடி வரை செல்கிறது.
கடந்த 10-20 வருடத்தில் அதாவது ஜென்Z தலைமுறையினரின் காலம் துவங்கியதில் இருந்து வீடுகளின் விலை பெரிய அளவில் உயர்ந்துள்ளது, இதனால் பெரும்பாலான மக்கள் பெற்றோர்கள் உடனோ அல்லது வாடகை வீட்டிலோ தங்குவதற்கு ரெடியாகியுள்ளனர்.
இந்த மனநிலை வருவதற்கும், ஏற்கனவே சொன்னது போல் TRAP என்பதற்கும் முக்கிய தொடர்பு உள்ளது.
முந்தைய தலைமுறையினர் அதாவது நம்முடைய அப்பாக்கள் தங்களுடைய சம்பளத்தில் 20 சதவீதம் சேமித்தால் போதும் 5-10 வருடத்தில் ஒரு பெரிய வீட்டை வாங்கிட முடியும். இன்று 24 வயதுடைய ஒரு ஜென்Z இளைஞர் சம்பளத்தில் 20 சதவீதம் சேமித்தால் 3 கோடி ரூபாய் மதிப்பிலான தீப்பெட்டி போல் ஒரு வீட்டை வாங்குவது என்பது 25 வருட Loan Trap-ல் சிக்கும் ஒரு செயலாக இருக்கும்.
இப்படியிருக்கையில் எப்போது ஓய்வு, எப்போது நிதியியல் சுதந்திரம், எப்போது விரும்பிய வாழ்க்கையை வாழ்வது.. என்பதை ஜென்Z தலைமுறையினர் யோசிக்க துவங்கியதன் விளைவு தான் இத்தகைய மனநிலை.
உண்மையில் ஜென்Z தலைமுறையினர் மேக்ரோஎக்னாமிக் கணக்கீட்டை மாறுப்பட்ட கோணத்தில் பார்த்து வருகின்றனர். எட்ட முடியாத ஒரு விஷயத்தை அடைய ஆசைப்பட்டு மொத்த வாழ்க்கையை வீட்டுக்காக பணயம் வைக்க வேண்டும் என யோசிக்கின்றனர், தயங்குகின்றனர்.
ஆனால் இதே ஜென்Z இளைஞர்கள் 1.5 லட்சம் ரூபாய்க்கு ஐபோன் ப்ரோ மேக்ஸ் வாங்குவது, 15000 ரூபாய் மதிப்புள்ள ஸ்னீக்கர் வாங்குவது, 2 லட்சம் ரூபாய்க்கு வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வதை மிகவும் எளிதாகவும், தயக்கம் இல்லாமலும் செய்கின்றனர். இது எப்படி..?
ஜென்Z தலைமுறையினர் வாழ்க்கையை அனுபவிக்கவும், ரிஸ்க் இல்லாத வாழ்க்கை முறையையே அதிகமாக தேர்வு செய்கின்றனர். இதை பார்க்கும் போது ஒட்டுமொத்த ஜென்Z தலைமுறையும் 'லிப்ஸ்டிக் எஃபெக்ட்' பொதுப்படையாக்க, பொது கருத்தாக்க முயற்சி செய்வதை காட்டுக்கிறது.
லிப்ஸ்டிக் எஃபெக்ட் என்றால் என்ன?
லிப்ஸ்டிக் எஃபெக்ட் என்பது கடினமான பொருளாதார காலத்தில் மக்கள் பெரிய செலவுகளை (கார், வீடு, விலையுயர்ந்த பேக்) தவிர்த்தாலும், தங்களை மகிழ்விக்கும் சிறிய, மலிவான ஆடம்பரப் பொருட்களை வாங்குவார்கள். இது அவர்களுக்கு உணர்வு பூர்வமான திருப்தியையும், நம்பிக்கையையும் அளிக்கும். லிப்ஸ்டிக் தான் அதற்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறது.
2001-ம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையின் போது, எஸ்தீ லாடர் நிறுவனத்தின் தலைவர் லியோனார்ட் லாடர் இந்த நிகழ்வை கவனித்தார்.
அமெரிக்க பொருளாதாரம் மோசமாக இருந்தபோதும், காஸ்ட்லியான ஆடம்பர பொருட்களை மக்கள் வாங்க முடியாத நிலையில், பெண்கள் விலையுயர்ந்த பிராண்டெட் லிப்ஸ்டிக்களை அதிகம் வாங்கினர். இதனால் விற்பனை அதிகரித்தது. அப்போதுதான் "லிப்ஸ்டிக் எஃபெக்ட்" என்ற சொல் உருவானது, பிரபலமானது.
இதேபோல் இங்கு ஜென்Z தலைமுறையினர் வீடு வாங்க முடியாத காரணத்தால் அந்த ஏக்கத்தை ஐபோன், ஸ்னீக்கர், வெளிநாட்டு டூர் மூலம் ஈடு செய்து வருகின்றனர். ஜென்Z தலைமுறையில் பலர் தங்களுடைய பெற்றோர்கள் வெல் செட்டில் நிலையில் இருப்பதாலேயே இந்த மனநிலை வருகிறது என்ற கருத்தும் உள்ளது.


Click it and Unblock the Notifications