கடன் வாங்கிவிட்டு, கூடுமான வரை நிறுவனத்தை நடத்திவிட்டு, நிறுவனம் போண்டி ஆகும் நேரத்தில், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போனால், வெளிநாட்டுக்குத் தப்பி ஓடி விடலாம் என்கிற டிரெண்டை இந்தியா முழுக்க பிரபலப்படுத்தியவர் விஜய் மல்லையா.
Recommended Video
யுனைடெட் ஸ்பிரிட்ஸ் மற்றும் யுனைடெட் ப்ரிவரீஸ் ஆகிய கம்பெனிகளில் முக்கிய பதவிகளில் இருந்தவர், இன்று தனியாக இங்கிலாந்தில் உட்கார்ந்து இருக்கிறார்.
இப்போது மீண்டும் கடனைத் திருப்பிச் செலுத்துவதாகச் சொல்லி இருக்கிறார்.
வழக்கு
விஜய் மல்லையாவை, இந்தியாவுக்குக் கொண்டு வரும் நோக்கத்தில் மத்திய அரசு பல சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு இருக்கிறது. அதற்கு விஜய் மல்லையாவும், இங்கிலாந்து நீதிமன்றங்களில் என்ன எல்லாம் சட்ட வழிகள் இருக்கிறதோ அதை எல்லாம் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்.
கடனை வாங்கிக்குங்க
சமீபத்தில், தான் வங்கிகளிடம் வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்துகிறேன், வங்கி நிர்வாகமும், மத்திய அரசும் அந்த கடனை வாங்கிக் கொண்டு, தன்னை வழக்குகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் மத்திய அரசு விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளில் உறுதியாக இருந்தது.
பாராட்டு + கேள்வி
இப்போது மீண்டும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த கொரோனா உதவித் திட்டங்களைப் பாராட்டி இருக்கிறார் விஜய் மல்லையா. அதோடு "அரசு எவ்வளவு வேண்டுமானாலும் பணத்தை அச்சடித்துக் கொள்ளலாம். ஆனால் தன்னைப் போன்ற நபர்கள் அரசு வங்கிகளிடம் வாங்கிய கடனை 100 % திருப்பிச் செலுத்த முன் வருவதை தொடர்ந்து கண்டு கொள்ளாமல் இருப்பதா?" எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
கடன் விவரம்
விஜய் மல்லையா மீது சுமார் 9,000 கோடி ரூபாய்க்கு கடன் மோசடி குற்றச்சட்டு, பணச் சலவை செய்தது, நிதி முறைகேடுகள்... என பல வழக்குகள் இருக்கின்றன. இப்போது "தயவு செய்து தான் கொடுக்கும் பணத்தை எந்த நிபந்தனையும் இன்றி ஏற்றுக் கொண்டு பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்" என தன் ட்விட் மூலம் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து இருக்கிறார்.
மறுப்பு ஏன்
சரி மத்திய அரசும் சரி வங்கிகளும் சரி ஏன் விஜய் மல்லையா கொடுக்கும் பணத்தை வாங்க மறுக்கிறார்கள்..? அங்கு தன ட்விஸ்டே இருக்கிறது..! விஜய் மல்லையா 100 % பணத்தைச் செலுத்துகிறேன் எனச் சொல்வது வெறும் 6,000 கோடி ரூபாய் அசல் பணத்தை தான். ஆனால் வங்கிகள் க்ளெய்ம் செய்வதோ வட்டி உடனான 9,000 கோடி ரூபாய்.
நஷ்டம்
எந்த வங்கியாவது, தான் கொடுத்த கடனுக்கு பெற வேண்டிய வட்டியைப் பெறாமல் அசலை மட்டும் பெற்றுக் கொள்ளுமா..? அப்படி பெற்றுக் கொண்டால் அது வங்கிக்கு நஷ்டம் தானேனே! ஆகையால் தான் பெற மறுக்கிறார்கள்.
எதிர் வினைகள்
அதோடு, விஜய் மல்லையாவிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டு வழக்குகளில் இருந்து விடுவிக்காமல் இருப்பதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது. நாளை மற்ற பெரு முதலாளிகளும் இதே போல சட்ட நடவடிக்கைகளுக்கு பயப்படாமல், வங்கியிடம் வாங்கிய அசல் தொகையைச் செலுத்திவிட்டு, வழக்குகளை பின் வலிக்கச் சொல்வார்கள்.
மல்லையா உதாரணமாவார்
அதற்கு மல்லையாவின் வழக்குகளையே அடிக் கோடு போட்டு உதாரணம் சொல்வார்கள். ஆக வட்டி நஷ்டத்தோடு, சட்ட நடவடிக்கைகள் மீதான பயமும், பெரு முதலாளிகளுக்குப் போய்விடும் என்பதற்காக மறுக்கிறார்கள் என, ஜூலை 03, 2019 firstpost செய்தியில் விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள்.
ராஜ வாழ்கை
ஒரு காலத்தில், இளம் பெண்கள் படை சூழ, ராஜ வாழ்கை வாழ்ந்து கொண்டிருந்த விஜய் மல்லையா, இன்று தனியாக இங்கிலாந்தில் போராடிக் கொண்டு இருக்கிறார்..! பின்ன வாங்கிய கடனை முறையாக வட்டியோடு செலுத்தவில்லை என்றால், மடியில் உட்கார வைத்து கொஞ்சுவார்களா என்ன?