பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய ராணுவ தாக்குதலில் ஈரான் நாட்டு உச்சபட்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொலை செய்யப்பட்டார். கமேனி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஈரான் மக்களை கடும் சோகத்திலும் கடும் கோபத்திலும் ஆழ்த்தியது.
கமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து ஈரான் ராணுவம் மிகத் தீவிரமாக இஸ்ரேல் மீதும் அமெரிக்காவுக்கு சொந்தமான விமானப்படை தளங்கள் மீதும் தாக்குதல் நடத்த தொடங்கின. கமேனி மரணம் அடைந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது ஆனால் இதுவரை அவருடைய உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்படவில்லை அல்லது நடந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் கமேனி இருந்த காம்பவுண்ட்டின் மீது வான்வழி தாக்குதல் நடத்தின. இதில் அவர் படுகொலை செய்யப்பட்டார். இதனை அடுத்து நாடு முழுவதும் துக்கம் அனுசரிப்பதாக ஈரான் நாட்டு அரசாங்கம் அறிவித்தது. மூன்று நாட்கள் அவருடைய இறுதிச் சடங்குகள் நடத்தப்படும் என சொல்லப்பட்டது. புனித நகரமாக கருதப்படும் அதே வேளையில் கமேனியின் சொந்த ஊரான மஷாத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்படும் அதற்கு முன்பு உடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் அந்த சமயத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் மிகத் தீவிரமாக ஈரான் மீது தாக்குதல் நடத்தியதாலும் கமேனியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு ஏராளமான மக்கள் வருகை தருவார்கள் என்பதாலும் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக இந்த நிகழ்வுகளை ஒத்தி வைப்பதாக ஈரான் நாட்டு அரசு தெரிவித்தது. அதன் பின்னர் இதுவரை அவருடைய உடலுக்கு இறுதிச்சடங்குகள், இறுதி மரியாதைகள் செய்யப்பட்டதா இல்லையா, உடல் நல்லடக்கம் செய்யப்பட்டதா இல்லையா என்ற விவரத்தை ஈரான் நாட்டு அரசாங்கம் வெளியிடவில்லை.

ரௌதல்லா கொமேனி 1980களில் மரணமடைந்த போது அவருடைய உடலுக்கு இறுதிச்சடங்கு நிகழ்வுகளின் போதும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்கும் லட்சக்கணக்கானவர்கள் தலைநகரம் டெஹ்ரானுக்கு வந்தனர். தற்போது கமேனியின் உடலுக்கும் மரியாதை செலுத்த இதே போன்ற ஒரு கூட்டம் வரும் என்பதால் அந்த சமயத்தி பலி நேரிடும். அதே நேரத்தில் கூட்டத்தை சமாளிக்க முடியாது என்பதற்காக ஈரான் அரசாங்கம் தற்போதைக்கு இதனை தள்ளி வைப்பதாக அறிவித்தது.
ஆனால் அதன் பின்னர் ஈரான் நாட்டு அரசில் பல்வேறு முக்கிய தலைகள் இஸ்ரேலின் தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டு விட்டனர். நாட்டின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மொஜ்தபா கமேனியும் உடல்நிலை காயமடைந்து முகம் சிதைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படுகிறது. அவர் அரசு முடிவுகளை எடுகிறார் ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்கிறார் என கூறப்பட்டாலும் தற்போதைக்கு கமேனியின் இறுதிச்சடங்கு போன்ற ஒரு மிகப்பெரிய நிகழ்வினை நடத்தக்கூடிய நிலையில் ஈரான் அரசாங்கம் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இருக்கக்கூடிய அரசாங்கம் கமேனியின் இறுதி சடங்கு நிகழ்வுகளை நடத்த அச்சப்படுகிறது என்கிறார் Defense of Democracies அறக்கட்டளை தலைவர் பெஹ்லாம் தலேபு. நியூயார்க் போஸ்டுக்கு பேட்டி அளித்துள்ள அவர் ஈரான் அரசாங்கம் வலுவாக இல்லை என்ற பார்வையை முன் வைக்கிறார். ஏனெனில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தலாம், நாட்டிற்குள்ளே இருக்கக்கூடிய எதிர்க்கட்சியினர் அந்த சமயத்தில் போராட்டங்களை நடத்தலாம் என்பதால் தற்போதுள்ள அரசாங்கம் இதனை நடத்துவதற்கு மிகவும் அச்சப்படுகிறது என கூறுகிறார். இருந்தாலும் ஈரான் அரசு இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் வரை யூகங்கள் வந்து கொண்டே தான் இருக்கும்.


Click it and Unblock the Notifications

