சென்னை: கடந்த ஓராண்டில் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு ரெடிமேட் ஆடைகள் மற்றும் துணிகளை இறக்குமதி செய்வது அதிகரித்துள்ளது. குறைந்த விலையில் வங்கதேச ரெடிமேட் ஆடைகள் மற்றும் துணிகள் குவிவதை தடுக்க முடியாமல் நம்முடைய இந்திய மற்றும் தமிழக ஜவுளி துறையினர் தவித்து வருகிறார்கள்.
இதற்கு முக்கிய காரணம் ஜிஎஸ்டி வரியை குறிப்பிடலாம். ஜிஎஸ்டி வரி காரணமாக துணிகள் உற்பத்தி செய்வது பாதிக்கப்பட்ட ஒருபக்கம் என்றால் வங்கதேசத்தில் இருந்து துணிகளைஇறக்குமதி செய்வதற்கான 12 சதவீத வரியை அரசு நீக்கியது இன்னொரு காரணம்.
இதன் காரணமாக இந்தியா முழுவதும் உள்ள ஜவுளிக்கடைகள் கடந்த தீபாவளிக்கு முன்பு தமிழகத்தில் இருந்து ரெடிமேட் ஆடைகள் மற்றும் பின்னலாடைகளை இறக்குமதி செய்வதை குறைத்து வங்கதேசத்தில் இருந்து குறைந்த விலையில் இறக்குமதி செய்தன. இதன் காரணமாக நம்மூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
போட்டி போட முடியல
இது ஒருபுறம் எனில் பின்னாலை உற்பத்தியில் அண்டை தேசமான வங்க தேசத்துடன் போட்டி போட முடியாமல் நம்ம திருப்பூர் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதற்கு முக்கிய காரணம் ஜாப் ஒர்க்குகளுக்கு அரசு விதித்த ஐந்து சதவீத ஜிஎஸ்டி வரி. ஏற்கனவே பணமதிப்பிழப்பால் நொந்து போய் மெல்ல மெல்ல மேடேறி வந்த மக்கள், ஜிஎஸ்டிக்கு பிறகு கடுமையாக பாதிக்கப்பட்டார்கள்.
என்ன காரணம்
ஜிஎஸ்டி மட்டுமே வங்கதேசத்துடன் நம் இந்தியா போட்டி போட முடியாமல்போவதற்கு காரணமாக என்று பார்த்தால், அது மட்டும் இல்லை, வங்கதேசத்தில் நம்மூரை விட குறைந்த விலையில் பொருட்களை தயாரித்துவிட முடியும். அதுவும் முக்கிய காரணம்.
ஜவுளி உற்பத்தியாளர்கள்
குறைந்த விலை என்றால் தான் நம்மூர் மக்கள் வாங்குவார்கள் என்பதால் அங்கே இருந்து இறக்குமதி செய்து நல்ல லாபத்தில் விற்க ஜவுளி நிறுவனங்கள் விரும்புகின்றன. உதாரணத்திற்கு இங்கே ஒரு ரெடிமேட் தரமான பேண்ட் சர்ட் 1000 ரூபாய்க்கு வாங்கி 1500க்கு விற்க வேண்டும் என்றால், வங்கதேசத்தில் இருந்து 500க்கு அதே ரெடிமேட் துணிகளை வாங்கி 1000க்கு விற்கலாம் என்று ஜவுளி நிறுவனங்கள் விரும்புகின்றன. இதுவே ஜவுளி உற்பத்தியாளர்களை மிகவும் பாதிக்க வைத்த மோசமான காரணி.
திருப்பூர் பின்னலாடை
வங்கதேசம் நம்ம ஊருக்கு மட்டும் ஏற்றுமதி செய்யவில்லை. நமக்கு வர வேண்டிய ஆர்டகர்ளையும் குறைந்த விலையில் செய்து தருவதாக கூறி பையர்கள் என்று சொல்லக்கூடிய ஆர்டர் கொடுப்பவர்களை லாவகாக தள்ளிக்கொண்டு சென்று விடுகிறது. இதனால் ஏற்கனவே உள்ளூர் விற்பனை பாதிப்பு ஒருபுறம் என்றால் வெளிநாட்டு ஆர்டகளும் கிடைப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. இதை எல்லாம் சமாளித்து தான் நம்ம திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் செய்து வருகிறார்கள்.
கட்டுப்பாடுகள் இல்லை
ஏன் வங்கதேசத்தால் குறைந்த விலைக்கு பொருட்களை கொடுக்க முடிகிறது என்றால், அங்கு நம் இந்தியாவைப்போல் தொழிலாளர் உரிமைச் சட்டங்களோ, நிறுவனங்களை துவங்குவதற்கான விதிமுறைகளோ சுத்தமாக இல்லை.10 பேருக்கு மேல் இந்தியாவில் ஒரு நிறுவனம் துவங்க வேண்டும் என்றால், இஎஸ்ஐ, பிஎப் கொடுக்க வேண்டும். அடிப்படை ஊதிய சட்டத்தை பின்பற்ற வேண்டும். தீயணைப்பு துறை, மாசுகட்டுப்பாட்டு துறை என பல அனுமதி வாங்க வேண்டும். இத்துடன் வரிகளும் அதிகமாக செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் வங்கதேசத்தில் இப்படி எந்த ஒரு பெரிய கட்டுப்பாடுகளும் இல்லை. எனவே தான் ஆர்டர்கள் குவிகிறது.
இதுவும் காரணம்
இந்த கஷ்டம் ஒருபுறம் எனில் ஜிஎஸ்டி வரியை விதித்த கையோடு வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்வதற்கான 12 சதவீத வரியை அரசு நீக்கியதால் இந்தியாவில் துணிகள் இறக்குமதி வங்கதேசத்தில் இருந்து அதிகரித்துள்ளது.
தடையற்ற ஒப்பந்தம்
2018-19 நிதியாண்டில் வங்கதேசத்தில் இருந்து ஜவுளி இறக்குமதி 53% உயர்ந்து 1.07 பில்லியன் டாலராக (ரூ. 7,500 கோடி) அதிகரித்துள்ளது. குறைந்த உற்பத்தி செலவுகள் மற்றும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் (எஃப்.டி.ஏ) போன்ற நன்மைகள் காரணமாக வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளள், இந்திய சந்தையில் தங்களை வெளியேற்றும் என்று நம்மூர் தொழில்முனைவோர் அச்சத்தில் இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் மத்திய அரசு நல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.