போர் பதற்றத்தின் காரணமாக விலைவாசி கடுமையாக உயர்ந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக LPG சிலிண்டர், பெட்ரோல், டீசல் போன்ற அனைத்தும் அதிகரித்து மாத சம்பளக்காரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. என்னதான் விலை அதிகரித்தாலும் சிலிண்டர் என்பது ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான ஒன்று. ஆனால் கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மே மாதம் LPG சிலிண்டர் பயன்பாடு 19 சதவீதம் குறைந்திருப்பதாக வெளியான அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலியம் பிளானிங் & அனாலிசிஸ் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் கடந்த 2025-ஆம் ஆண்டு மே மாதத்தில் உபயோகிக்கப்பட்ட சிலிண்டர்களை விட 2026-ஆம் ஆண்டு மே மாதத்தில் உபயோகிக்கப்பட்ட சிலிண்டர்கள் 19% வரை குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெட்ரோல் பயன்பாடு 2.8 சதவீதம் அதிகரித்திருப்பதும், டீசல் பயன்பாடு 1 சதவீதம் அதிகரித்திருப்பதும் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு மே மாதத்தில் 2.62 மில்லியன் மெட்ரிக் டன் சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு 2.12 மில்லியன் மெட்ரிக் டன் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. மேற்காசிய போரின் காரணமாக நிலவி வரும் பதற்றமான சூழலால் சிலிண்டர் சப்ளை வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதுவும் இந்த குறைவிற்கு ஒரு காரணம்.

அரசு தரப்பிலும் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே 21 நாட்களுக்கும் ஒரு முறை சிலிண்டர் முன்பதிவு செய்யும் நடைமுறை இருந்தது. ஆனால் இப்போது நகரங்களாக இருந்தால் 25 நாட்களுக்கு ஒரு முறையும், கிராமப்புறங்களாக இருந்தால் 45 நாட்களுக்கு ஒரு முறையும் முன்பதிவு செய்ய வேண்டும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனால் வழக்கமாக மக்கள் சிலிண்டர் புக் செய்த வேகம் குறைந்துவிட்டது. அதோடு சமையல் சிலிண்டர் பிரச்னையால் பல நடுத்தர குடும்பங்கள் எலக்ட்ரிக் ஸ்டவ் மற்றும் விறகடிப்பை பயன்படுத்த தொடங்கியுள்ளன. ஒரு சில நகரங்களில் பிஎன்ஜி சப்ளையும் பெற்று வருகின்றனர்.
சிலிண்டர் பிரச்சனைக்கு மாற்று வழியை கண்டுபிடித்த மக்கள், பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பிலும் அதன் பயன்பாட்டை நிறுத்தவில்லை. 2025-ஆம் ஆண்டு மே மாதத்தில் 3.78 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த பெட்ரோல் பயன்பாடு 2026-ஆம் ஆண்டின் மே மாதத்தில் 2.8 சதவீதம் அதிகரித்து 3.89 மில்லியன் மெட்ரிக் டன்னை எட்டியுள்ளது.
கோடை விடுமுறையும் இந்த அதிகரிப்பிற்கு காரணமாக அமைந்தது. பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் பெற்றோர் குழந்தைகளை வெளியூருக்கு அழைத்துச் செல்வது, வெளியூரில் இருந்து வீட்டிற்கு அழைத்து வருவது என வாகனங்களின் பயன்பாட்டை அதிகரித்துள்ளனர். இன்றைய சூழலில் வீட்டிற்கு ஒரு இருசக்கர வாகனமாவது இருக்கிறது. கண்டிப்பாக அதற்கு பெட்ரோல் போட்டாக வேண்டும். இதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் எந்த பயன்பாட்டில் குறைவு ஏற்பட்டாலும் பெட்ரோல் டீசல் பயன்பாடு குறையவே குறையாது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 8.67 மில்லியன் மெட்ரிக்
டன் டீசல் பயன்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக டீசல் பயன்பாடு ஒவ்வொரு ஆண்டும் 2 முதல் 3 சதவீதம் வரை அதிகரிக்கும். ஆனால் இந்த ஆண்டு அப்படி நடக்கவில்லை.கத்திரி வெயிலின் தாக்கமும் டீசல் பயன்பாடு குறைந்தற்கு மற்றொரு காரணமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications