தொழில்நுட்பங்களின் வளர்ச்சி நம் நாட்டில் வங்கிகள் செயல்படும் விதத்தையே மாற்றி அமைத்துவிட்டன. முன்பெல்லாம் வங்கி கணக்கில் பணம் போடுவது, எடுப்பது என அனைத்து வங்கி சேவைகளுக்கும் நாம் நேரடியாக வங்கிக்கு தான் செல்ல வேண்டும். ஆனால் இப்போது ஒரு செயலி வாயிலாகவே பெரும்பாலான வேலைகளை முடித்து கொள்கிறோம்.
வங்கி கணக்கு தொடங்குவது, விவரங்களை அப்டேட் செய்வது, பணத்தை மாற்றுவது என நாம் இருக்கும் இடத்திலேயே இந்த சேவைகள் கிடைத்துவிடுகின்றன. டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப டிஜிட்டல் பேங்கிங் வளர்ச்சி அடைந்ததே இதற்கு காரணம். இத்தகைய சூழலில் வங்கி ஊழியர்களுக்கான பணிகளும் படிப்படியாக மாற்றம் கண்டு வருகின்றன.

இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளான ஹெடிஎஃப்சி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ் போன்றவை, கடந்த நிதியாண்டில் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்தன. கடந்த நிதியாண்டில் இந்த மூன்று பெரிய வங்கிகளும் இணைந்து சுமார் 13,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை குறைத்துள்ளன. இது ஏதோ ஒரு நிதி நெருக்கடியால் எடுக்கப்பட்ட பணி நீக்கம் அல்ல, மாறாக, இது வங்கிகள் செயல்படும் முறையில் ஏற்பட்டுள்ள ஒரு பெரிய மாற்றத்தின் எதிரொலி.
வங்கிகளின் பணிச்சுமை குறையவில்லை, மாறாக வேலை செய்யும் விதம் மாறியுள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்பங்களின் வருகையால், முன்பெல்லாம் மனிதர்கள் செய்த பல back-end பணிகள் தற்போது கணினி மற்றும் மென்பொருட்கள் மூலம் தானாகவே நடைபெறுகின்றன.
தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் குறைவான ஊழியர்களை கொண்டு அதிக அளவிலான வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய முடிகிறது. எனவே வங்கிகள் தற்போது வழக்கமான வங்கி பணிகளை செய்யும் ஊழியர்களை விட, ஏஐ, கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் இன்ஜினியரிங் துறையில் நிபுணத்துவம் பெற்ற ஊழியர்களையே அதிகம் எதிர்பார்க்கின்றன.
பெரும்பாலான வங்கி செயல்பாடுகள் ஆட்டோமேஷன் எனப்படும் தானியங்கி முறைக்கு மாறுவதால், வங்கி ஊழியர்கள் பெரும்பாலும் வாடிக்கையாளருடன் நேரடி தொடர்பு கொண்ட பணிகளுக்கு மாற்றப்படுகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, வெறும் ஆவணங்களை கையாளும் ஊழியர்களாக இல்லாமல், வாடிக்கையாளர்களுடன் நேரடியாக தொடர்புகொண்டு சேவைகளை மேம்படுத்தும் பன்முகத்தன்மை கொண்டவர்களாக வங்கி ஊழியர்கள் மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
எஸ்பிஐ வங்கி தங்கள் ஊழியர்களை சேல்ஸ் பிரிவுக்கு மாற்றி வருகிறதாம். அதாவது சேல்ஸ் பிரிவில் அதிக ஊழியர்கல் இருக்கும் படி பார்த்து கொள்கிறது. ஹெச்டிஎஃப்சி வங்கி பேக் என்ட் ஊழியர்களை , வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ளும் பணிகளுக்கு மாற்றி வருகிறது. ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர் தரவுகளை ஆய்வு செய்து அவர்களுக்கு என பிரத்தியேக சேவைகளை பரிந்துரை செய்யும் வேலைகளை ஊழியர்களுக்கு வழங்கி வருகிறது.
எனவே வங்கி ஊழியர்கள் வழக்கமான வேலைகளில் இருந்து டேட்டா அனாலிசிஸ் முதல் சேல்ஸ் வரை அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. எனவே வருங்காலத்தில் வெறும் வங்கி பணி அனுபவம் மட்டும் போதாது, தொழில்நுட்பத் திறன், விற்பனை திறன் இருந்தால் மட்டுமே வங்கி வேலைகளில் நீடிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications

