அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது மீண்டும் வரலாறு காணாத சரிவினைக் கண்டுள்ளது.
இது தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தினை கடந்த வாரத்தில் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் ஏப்ரல் மாத நுகர்வோர் பணவீக்கம் என்பது சற்று அதிகரித்திருந்தாலும், முந்தைய மாதங்களுடன் ஒப்பிடும்போது மெதுவாக குறைந்து வருகின்றது.
பணவீக்கம்
எனினும் தற்போது வரையில் பணவீக்கம் என்பது உச்சத்திலேயே உள்ளது என்பதை அமெரிக்க அதிபர் ஜோ பைடனே ஒரு அறிக்கையில் ஒப்புக் கொண்டுள்ளார். இதற்கிடையில் அன்னிய முதலீடுகளானது தொடர்ந்து வெளியேறத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இன்று பங்கு சந்தைகள் மீண்டும் சரிவினைக் காணத் தொடங்கியுள்ளன.இதுவும் ரூபாய் சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது.
மீண்டும் வரலாறு காணாத சரிவு
இதற்கிடையில் இன்று காலை தொடக்கத்திலேயே இந்திய ரூபாயின் மதிப்பானது 77.41 ரூபாயாக சரிவிலேயே தொடங்கியது. இது கடந்த அமர்வில் 77.24 ரூபாயாக முடிவடைந்திருந்தது. இன்று இதுவரையில் ரூபாயின் மதிப்பானது 77.59 ரூபாய் என்ற அளவிலான வரலாற்று சரிவினையும் கண்டுள்ளது. இது முன்பாக மே 9 அன்று 77.52 ரூபாயாக சரிவினைக் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வட்டி அதிகரிக்கலாம்
பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர அமெரிக்க மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்திருந்தாலும், மீண்டும் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்துள்ளது, இது நிச்சயம் மீண்டும் ஒரு வட்டி விகிதத்திற்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மீண்டும் டாலர் மதிப்பு வலுவடைய காரணமாக அமையலாம்.
சரிவுக்கான முக்கிய காரணம்
வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே டாலரின் மதிப்பானது வலுவடைய தொடங்கியுள்ளது. இது இந்திய சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேற வழிவகுத்துள்ளன. மேலும் தொடர்ந்து அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை, உள்நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கமென பலவும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிய காரணம் என ஆனந்த ரதி ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
புராபிட் புக்கிங்
சர்வதேச அளவில் அமெரிக்க சந்தையானது ஏற்றத்தினை காணத் தொடங்கியுள்ள நிலையில், இது மற்ற நாடுகளில் உள்ள முதலீடுகளை வெளியேற்ற தூண்டியுள்ளது. ஆக இதனால் அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகின்றது. இதுவும் ரூபாய் சரிவுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
உள்நாட்டு பணவீக்கம்
தொடர்ந்து அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலைக்கு மத்தியில் பணவீக்க விகிதமானது, இந்தியாவில் அதிகரித்து வருகின்றது. இது தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேலாக ரிசர்வ் வங்கியின் இலக்குக்கு மேலாக உள்ளது. இதன் காரணமாக அன்னிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருகின்றது.
இனி எப்படியிருக்கும்
ரூபாயின் மதிப்பானது 77.20 - 77.80 ரூபாய் வரையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே பணவீக்கத்தினை கட்டுக்குள் வைக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தினை திடீரென உயர்த்தியது. இது இனி வரவிருக்கும் கூட்டத்திலும் அதிகரிக்க வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.