இன்றைய காலகட்டத்தில் கணினித் துறை மாணவர்கள் பலரும் கோடிங் தெரிந்தால் மட்டும் போதும். ஏஐ உலகில் கொடி கட்டிப் பறக்கலாம் என நினைக்கிறார்கள். ஆனால் செயற்கை நுண்ணறிவுத் துறையின் பிதாமகன் என்று போற்றப்படும் யான் லெகுன், மாணவர்களுக்கு ஒரு புதிய பாடத்தை உரக்கச் சொல்லி இருக்கிறார். நீங்கள் ஒரு சிறந்த ஏஐ இன்ஜினியராக விரும்பினால், புரோகிராமிங்கை படித்தால் மட்டும் போதார்து. கணிதத்திலும் கில்லாடியாக மாறுங்கள் என்கிறார்.
ஏஐ என்பது வெறும் கணினி மொழி மட்டுமல்ல, அதன் ஆன்மாவே கணிதம் தான். சிக்கலான அல்காரிதம்கள் முதல் தானாக இயங்கும் கார்கள் வரை அனைத்தும் கணிதக் கோட்பாடுகளின் அடிப்படையில் செயல்படுகின்றன. கோடிங் என்பது ஒரு கருவி மட்டுமே. ஆனால் அந்தக் கருவியை இயக்குவதற்கான மூளை கணித அறிவில் தான் உள்ளது. இத்தகைய கணிதம் குறித்து யான் லெகுன் என்ன கூறியிருக்கிறார், ஒரு சராசரி மாணவர் எப்படி ஏஐ மேதையாக மாற முடியும் என விரிவாக பார்க்கலாம்.

எதில் ஆழ்ந்த அறிவு வேண்டும்?
ஏஐ யுகத்தை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், ஏஐ-யின் தந்தை என கூறப்படும் யான் லெகுன், கணினி துறை குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். ஆங்கில செய்தித் தளத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், பாரம்பரியமான கணினி அறிவியல் பட்டம் மட்டுமே, அடுத்தகட்ட தொழில்நுட்ப மாற்றத்தை தாங்கிப் பிடிக்க போதுமானதாக இருக்காது. வருங்கால மாற்றங்களுக்கு ஏற்ப நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு தற்போது டிரெண்டில் உள்ள ஏதோ ஒரு மொழியை கற்றுக் கொண்டால் மட்டும் போதாது, மாறாக அடிப்படைக் கணிதம் மற்றும் இயற்பியலில் ஆழ்ந்த அறிவைப் பெறுவது தான் என்று வலியுறுத்தியுள்ளார்.
நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், மெட்டா ஏஐ அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானியாகவும் இருக்கும் லெகுன், நவீன கணினி அறிவியல் பாட திட்டங்களில் உள்ள ஒரு முக்கிய குறையை சுட்டிக் காட்டுகிறார். அதாவது நீங்கள் ஒரு கணினி அறிவியல் (CS) மாணவராக இருந்து, பாடத்திட்டத்தில் உள்ள குறைந்தபட்ச கணிதப் பாடங்களை மட்டும் படித்தால், எதிர்கால தொழில்நுட்ப மாற்றங்களுக்கு உங்களை மாற்றிக் கொள்ள முடியாமல் போகலாம். பல CS திட்டங்களில் மாணவர்கள் Calculus 1 உடன் படிப்பை முடித்து விடுகிறார்கள். ஆனால், பொறியியல் மாணவர்கள் Calculus 1, 2, மற்றும் 3 ஆகியவற்றை முறையாகக் கற்கிறார்கள். கண்ட்ரோல் தியரி (Control Theory) மற்றும் 'சிக்னல் ப்ராசஸிங்' (Signal Processing) போன்ற ஆழமான கணித அறிவே ஏஐ போன்ற தொழில்நுட்பங்களுக்கு உண்மையிலேயே உதவும் என கூறும் லெகுன், 3 முக்கிய விஷயங்களையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
1. கணித மாதிரியாக்கம்: வெறும் தத்துவங்களை மட்டும் கற்காமல் அவற்றை நிஜ உலக யதார்த்தத்துடன் இணைத்துப் பார்க்க பழங்குங்கள்.
2. இயற்பியல் மற்றும் மின் பொறியியல்: ஒரு அமைப்பு எப்படி செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள இயற்பியல் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடங்களில் இருந்து உத்வேகம் பெறுங்கள்.
3. தற்காலிக டிரெண்டுகளைத் தவிருங்கள்: இன்று பிரபலமாக இருக்கும் டெக் விஷயங்களைத் துரத்தாமல், இன்னும் 20 ஆண்டுகள் கழித்தும் உண்மையாக இருக்கக் கூடிய அடிப்படைக் கொள்கைகளை கற்றுக்கொள்ளுங்கள்.
கணிதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், புரோகிராமிங் கோடிங் இன்னும் இறந்துவிடவில்லை. அடிப்படை கோடிங் திறன்கள் அவசியம். ஏஐ என்பது மனிதனின் தர்க்க அறிவுக்கு ஒரு மாற்று அல்ல. அது ஒரு திறமையான கருவி மட்டுமே. ஐடி துறையில் நிலவி வரும் பணி நீக்க சூழலுக்கு மத்தியில், லெகுனின் இந்த அறிவுரையானது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஏஐ ஆனது எல்லா வேலைகளையும் செய்ய முடியும் என்று கூறும் கருத்துகள் மத்தியில், அடிப்படைகளைக் தெளிவாகக் கற்றுக் கொள்வதன் அவசியத்தை இது உணர்த்துகிறது.


Click it and Unblock the Notifications