இந்தியாவில் ஏற்கனவே ஸ்ரீஹரிகோட்டாவில் விண்வெளி நிலையம் இருக்கும் நிலையில் இரண்டாவது விண்வெளி நிலையத்தை தமிழகத்தில் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.
இந்தியாவுக்கு ஏன் புதிய விண்வெளி நிலையம்? மற்றும் விண்வெளி நிலையம் அமைக்க தமிழகத்தை தேர்வு செய்தது ஏன்? என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.
இந்த தகவல்கள் அனைவரையும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் உள்ளதால் இந்த தகவல்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
தமிழ்நாட்டில் புதிய விண்வெளி நிலையம்
இந்தியாவின் இரண்டாவது விண்வெளித் துறைமுகத்தை நிர்மாணிப்பதற்காக தமிழ்நாட்டில் 2,350 ஏக்கரில் 1,950 நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழ்நாட்டில் அமைந்துள்ள குலசேகரப்பட்டினம், நாட்டின் விண்வெளி திட்டத்திற்காக இந்தியா உருவாக்கி வரும் இரண்டாவது விண்வெளித் தளத்தின் இருப்பிடமாகும். நாடாளுமன்றத்தின் மேல்சபையில் பேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், தமிழ்நாடு அரசின் மூலம் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
அத்தியாவசிய வசதிகள்
இந்த இரண்டாவது விண்வெளி மையத்தில் விண்கலத்தில் அத்தியாவசிய வசதிகளை நிறுவுவதை மேற்பார்வையிடவும், ஏவுதல் தொடர்பான முக்கியமான செயல்பாடுகளை மேற்கொள்வதற்காகவும் திட்டமிடப்பட்டுள்ளது' என்று அமைச்சர் கூறினார். இரண்டாவது விண்வெளி நிலையம் 2024 அல்லது 202ஆம் ஆண்டு அல்லது 2025ஆம் ஆண்டுக்குள் ஏவுவதற்கு தயாராக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி நிலையத்தின் சிறப்பு
ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இரண்டு ஏவுதளங்களுடன் ஒரு விண்வெளி நிலையம் இயங்கி வருகிறது. ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையம் கடந்த 1970களின் பிற்பகுதியிலிருந்து தொடங்கப்பட்டது. 1993 முதல், இந்த விண்வெளி மையத்தில் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி எம்கே3 ராக்கெட்டுகளையும் ஏவியது. ஸ்ரீஹரிகோட்டா ஒரு சிறந்த ஏவுதளமாக பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.
பூமத்திய ரேகை
கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள பூமத்திய ரேகைக்கு அருகில் இந்த விண்வெளி நிலையம் உள்ளதால் இங்கிருந்து ஏவப்படும் ராக்கெட்டுகள் பூமியின் மேற்கு-கிழக்கு சுழற்சியின் கூடுதல் வேகத்தால் உதவுகின்றன. இந்த சுழற்சியின் விளைவு பூமத்திய ரேகைக்கு மிக அருகில் உணரப்படுகிறது. பூமியின் துருவங்களில் கிட்டத்தட்ட பூஜ்யமாக உள்ளதால் பூமத்திய ரேகை சுற்றுப்பாதையில் ஏவப்படுவதால் நன்மை பயக்கும்.
பேரழிவை தவிர்க்க உதவும்
கடலுக்கு சற்று அருகில் அமைந்துள்ள ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்ட ராக்கெட்டுகள் கிழக்கு நோக்கி பறந்து, கடலுக்கு மேலே உயரும். எனவே, விபத்துகள் ஏற்பட்டால், ராக்கெட் மற்றும் அதன் குப்பைகள் கடலில் மட்டுமே விழும் என்பதால் பெரிய பேரழிவு தவிர்க்கப்பட்டது.
புதிய விண்வெளி நிலையம் ஏன்?
ஸ்ரீஹரிகோட்டா கனமான ராக்கெட்டுகளை ஏவுவதற்கு ஏற்றதாக உள்ளது. ஆனால் இஸ்ரோவின் சிறிய செயற்கைக்கோள், சிறிய ராக்கெட்டுகளை ஏவும்போது ஒரு பெரிய சவாலாக இருக்கிறது. துருவ சுற்றுப்பாதையில் ராக்கெட்டுகள் செலுத்தப்படும் போது ஸ்ரீஹரிகோட்டா ஒரு சவாலை அளிக்கிறது.
இலங்கையை தவிர்க்க
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஒரு ராக்கெட் தென் துருவத்தை நோக்கி பயணிக்கும் போது, அந்த ராக்கெட் இலங்கையை கடந்து செல்ல வேண்டும். ஒரு நாட்டிற்கு மேல் பறக்கும் அபாயம் இருப்பதால், இந்தியாவின் ராக்கெட்டுகள் இலங்கை நிலப்பரப்பை தவிர்ப்பதற்காக புதிய விண்வெளி மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் ராக்கெட் நேர்கோட்டில் பறக்காமல், வளைந்த பாதையில் சென்று திருப்பம் எடுக்கும்.
குலசேகரப்பட்டினம்
இதனால் சிறிய ராக்கெட்டுகளை ஒரு நேர்கோட்டில் ஏவக்கூடிய இடத்தை இந்தியா தேடிக்கொண்டிருந்த நிலையில் தான் தமிழ்நாட்டின் தென் பகுதியில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம் புதிய விண்வெளி நிலையம் அமைக்க சரியான இடம் என தேர்வு செய்யப்பட்டது.
சிறிய ராக்கெட்டுக்கள்
குலசேகரப்பட்டினத்தில் இருந்து ஏவப்படும் போது, SSLV போன்ற சிறிய ராக்கெட்டுகள் மற்றும் இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களால் உருவாக்கப்படும் ராக்கெட்டுகள் எரிபொருளை சேமித்து துருவத்தை நோக்கி நேராகப் பறக்க முடியும். சிறிய ராக்கெட்டுகளை உருவாக்குவதற்கும், ஒன்று சேர்ப்பதற்கும், அவற்றின் பெரிய சகாக்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த நேரத்தில் ஏவுவதற்கும் எளிதானது என்பதால், அத்தகைய சிறிய ராக்கெட்டுகளுக்கு ஒரு பிரத்யேக விண்வெளி நிலையம் இருப்பது இந்தியாவிற்கு முக்கியம்.
செலவு குறைவு
குறைந்த செலவில் சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த விரும்பும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்காக குலசேகரப்பட்டினத்தில் இரண்டாவது விண்வெளி மையத்தை இந்தியா அமைக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.