எல்லோரும் SUV பக்கம் போனா எப்படி? சிறிய கார்களின் விற்பனை 71% சரிவு.. களத்தில் இறங்கும் மத்திய அரசு?

சொந்தமாக ஒரு கார் வாங்கி விட வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கிறது. இந்தியாவில் போட்டி போட்டு கொண்டு பல நிறுவனங்களும் புது புது கார்களை அறிமுகம் செய்த வண்ணம் இருக்கின்றன. மின்சார கார்கள், ஹைபிரிட் கார்கள் என வித விதமான கார்கள் சந்தைக்கு வருகை தருகின்றன. நாம் சாலைகளில் கூட அதிக எண்ணிக்கையில் கார்களை பார்க்க முடிகிறது.

ஆனால் இதில் நாம் கவனிக்க தவறிய ஒரு விஷயம் இருக்கிறது. நாம் சாலையில் தற்போதெல்லாம் சிறிய ரக கார்களை அதிகம் காண முடிவதில்லை. ஆம் இது தான் தற்போது கார் உற்பத்தியாளர்களுக்கும் அரசுக்கும் பெரும் சிக்கலாக உருவாகி இருக்கிறது. ஒரு காலத்தில் இந்தியாவில் கார் விற்பனை என்றாலே சிறிய கார்கள் தான் முதலிடத்தில் இருந்தது. ஆனால் அண்மைக்காலமாக அந்த நிலைமை மாறி மக்கள் பெரிய கார்களை நோக்கி செல்வது தரவுகள் மூலம் தெரிய வந்திருக்கிறது.

எல்லோரும் SUV பக்கம் போனா எப்படி? சிறிய கார்களின் விற்பனை 71% சரிவு.. களத்தில் இறங்கும் மத்திய அரசு?

71% சரிந்த சிறிய கார்கள் விற்பனை:

இந்தியாவில் 3.6 மீட்டர் நீளம் கொண்ட கார்களை சிறிய ரக கார்கள் என அழைக்கிறோம். இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் அண்மையில் வெளியிட்ட தகவலின் படி 2019 ஆம் ஆண்டில் இந்த சிறிய ரக கார்கள் விற்பனை 4,60,000 ஆக இருந்தது, அதுவே 2024 ஆம் ஆண்டு 1,52,000 ஆகக் குறைந்து 2025 ஆம் நிதி ஆண்டில் 1,33,397 என சரிவடைந்து இருக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தியாவில் சிறிய ரக கார்களின் விற்பனை 71% சரிவடைந்து இருப்பது தெரியவருகிறது.

சிக்கலில் மாருதி சுசுகி:

இந்தியாவில் இதுபோன்ற சிறிய ரக கார்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் முதலிடத்தில் இருந்தது மாருதி சுசுகி நிறுவனம். தற்போது சிறிய ரக கார்கள் விற்பனை சரிந்ததால் மாருதி சுசுகி நிறுவனம் மிகப்பெரிய சிக்கலை எதிர்கொண்டு இருக்கிறது. மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆல்டோ மற்றும் எஸ்பிரஸோ கார்கள் தான் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வந்த சிறிய ரக காரர்களாக இருந்தன. ஆனால் அவற்றின் விற்பனை பெருமளவு சரிந்திருப்பதாக அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.

6,067 கார்களே மட்டுமே விற்பனை:

கடந்த மே மாதத்தில் மட்டும் இந்த இரண்டு கார்களின் விற்பனை 6,076 என்ற எண்ணிக்கையில் இருக்கிறது. இது கடந்தாண்டு மே மாதம் 9,907 என்ற அளவில் இருந்தது. அதாவது ஆண்டுதோறும் இந்தியாவில் சிறிய ரக கார்களின் விற்பனை குறைந்து வருவதையே இது காட்டுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் பயணிகள் வாகன விற்பனையில் சிறிய ரக கார்களின் பங்களிப்பு 46 சதவீதமாக இருந்தது. அது 2024 ஆம் நிதியாண்டில் 25 சதவீதம் என குறைந்துள்ளது.

அரசு தலையிடுமா?

சிறிய கார்கள் விற்பனை சரிவால் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருப்பது மாருதி சுசுகி நிறுவனம் தான். இந்த நிறுவனம் தற்போது இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வருவதற்காக மத்திய அரசு உதவியை நாடி இருக்கிறது. இந்தியாவில் சிறிய ரக கார்களின் விற்பனை மீண்டு வருவதற்கு அரசின் தலையீடு மிகவும் முக்கியமானதாக சொல்லப்படுகிறது.கார் வாங்குவது என்றால் அதற்கு சாலை வரி, ஜிஎஸ்டி, இன்சூரன்ஸ் என கூடுதலாக நாம் செய்யும் செலவுகள் அதிகமாக இருக்கின்றன. ஏற்கனவே விலைவாசி உயர்வு கல்வி செலவு, மருத்துவ செலவு உள்ளிட்டவை அதிகரித்துள்ளதால் பலரால் குறிப்பாக இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் இருக்கும் மிடில் கிளாஸ் மக்களால் கார் வாங்குவதை நினைத்து கூட பார்க்க முடிவதில்லை.

செகண்ட் ஹேண்ட் கார்கள் விற்பனை அதிகரிப்பு:

எனவே தான் இந்தியாவில் செகண்ட் ஹேண்ட் கார்களின் விற்பனை அதிகமாக இருக்கிறது. உதாரணமாக மாருதி ஆல்டோ கே10 காரின் டெல்லியில் எக்ஸ் ஷோரூம் விலை 2019ஆம் ஆண்டு 3.4 லட்சம் ரூபாயாக இருந்தது, அது தற்போது 25 சதவீதம் உயர்ந்து 4.23 லட்சம் ரூபாய் என இருக்கிறது. இதுவே செகண்ட் ஹேண்ட் கார் என வரும் போது இதில் பாதி விலைக்கே கிடைக்கிறது.

எல்லோரும் SUV பக்கம் போனா எப்படி? சிறிய கார்களின் விற்பனை 71% சரிவு.. களத்தில் இறங்கும் மத்திய அரசு?

அரசு வரிகளை குறைக்குமா?

எனவே அரசு முதல் முறை கார் வாங்குபவர்களுக்கு குறிப்பிட்ட சில வரி சலுகைகள் மற்றும் மானியங்களை வழங்கினால் பலரும் கார்களை வாங்குவதற்கு முன் வருவார்கள். குறிப்பாக சிறிய ரக கார்களுக்கான வரியை குறைப்பது இன்சூரன்ஸில் சலுகை வழங்குவது என்பன உள்ளிட்டவற்றை மேற்கொண்டால் இவற்றின் விலை குறையும் அதே வேளையில் மக்களும் சிறிய ரக கார்களை வாங்க ஆர்வம் காட்டுவார்கள். எனவே தான் மாருதி சுசுகி உள்ளிட்ட நிறுவனங்கள் அரசு சிறிய ரக கார்கள் விற்பனையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுகின்றன.

கார்களின் விலை குறையுமா?

வாகனங்களில் புகை வெளியீட்டை குறைப்பது உள்ளிட்டவற்றுக்காக அரசு பல விதிமுறைகளையும் கடுமையாக்கி உள்ளது. இதனால் கார்கள் உற்பத்திக்கு முன்பை விட பல மடங்கு அதிகம் செலவு செய்வதாக கார் உற்பத்தி நிறுவனங்கள் கூறுகின்றன. மூல பொருட்கள் விலை உயர்வால் கார்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

என்ன செய்யப் போகிறது அரசு?

இந்நிலையில் தான் கார் விற்பனை செய்யும் நிறுவனங்களும் தங்களுடைய விலையை சற்று குறைத்து குறைத்தால் மக்கள் மீண்டும் சிறிய ரக கார்களை நோக்கி வருவார்கள் என கூறப்படுகிறது . அண்மையில் தான் மத்திய அரசு ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு எந்தவித வருமான வரியும் செலுத்த தேவையில்லை என்ற வகையில் வருமான வரி அடுக்கில் மாற்றங்களை கொண்டு வந்தது. இது மக்களின் செலவினங்களை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. எனவே மக்கள் கைகளில் அதிக பணம் புழக்கம் இருக்கும் இதனால் மக்கள் அதிகம் கார்கள் வாங்குவதற்கு முன் வருவார்கள் என கூறப்படுகிறது.

ஜப்பான் இந்த பிரச்சினையை எப்படி சரி செய்தது?

இதற்கு முன்பு ஜப்பான் நாட்டிலும் இதே போன்ற ஒரு பிரச்சினை ஏற்பட்டது. அப்போது அந்நாட்டு அரசு சிறிய ரக கார்கள் விலையை குறைக்க சில நடவடிக்கைகளை எடுத்தது. அதாவது சிறிய ரக கார்களை வாங்கும் நபர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தது. குறிப்பாக பெரிய கார்களுடன் ஒப்பிடும் போது இதற்கான வரியை குறைத்தது, அதேபோல காப்பீட்டிலும் குறிப்பிட்ட சில சலுகைகளை வழங்குகிறது. இதன் காரணமாக ஜப்பான் மக்கள் பெரிய அளவிலான கார்களுக்கு செல்லாமல் சிறிய கார்களை வாங்க தொடங்கினர். தற்போது ஜப்பானில் விற்பனை செய்யப்படும் மூன்றில் ஒரு கார் சிறிய ரக காராக இருப்பதாக மின்ட் தளம் வெளியிடும் செய்தி குறிப்பிடுகிறது. இதே பாணியை மத்திய அரசும் பின்பற்ற வேண்டும் என கார் உற்பத்தி நிறுவனங்கள் கோரிக்கை வைக்கின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+