இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான , மொத்த சந்தை பங்கில், 53 சதவிகித சந்தைப் பங்கைக் கொண்டுள்ள இந்த நிறுவனம் சியாஸ், எர்டிகா, வேகன் ஆர், ஆல்டோ கே-10, ஆல்டோ 800, ஸ்விஃப்ட், செலெரியோ, ஸ்விஃப்ட் டிசையர், பலேனோ, பலேனோ ஆர்.எஸ், ஈக்கோ, இக்னிஸ், எஸ்-கிராஸ், விட்டெரா பிரெஸ்ஸா, எஸ்-பிரெஸ்ஸோ உள்ளிட்ட கார்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் சியாஸ், எர்டிகா மற்றும் எக்ஸ் எல் 6 உள்ளிட்ட கார்களில் உள்ள, லித்தியம் அயன் பேட்டரிகளில் தீப்பற்றுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
எனினும் தற்போது இந்த கோளாறுகளை சரிசெய்து தரும் பணியில் மாருதி ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
கார்களை திரும்ப பெறுகிறது
மாருதி சுசூகியின் சியாஸ், எர்டிகா, எக்ஸ்.எல்.6 ஆகிய ஸ்மார்ட் ஹைபிரிட் கார்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் கார்கள் திரும்பப் பெறப்படவுள்ளதாகவும் மாருதி தெரிவித்துள்ளது. பயணிகள் அமரும் இருக்கைகளுக்கு கீழ் வைக்கப்பட்டிருக்கும் இந்த லித்தியம் அயன் பேட்டரிகள், சமீபத்தில் சில இடங்களில் தீப்பிடித்து எழுந்ததாகப் புகார்கள் வந்ததாகவும் கூறப்படுகிறது.
பேட்டரி பிரச்சனை
இந்த நிலையில் தான் கடந்த ஒரு ஆண்டு காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட புதிய எர்டிகா, சியாஸ், எக்ஸ்.எல்.6 கார்களின் லித்தியம் அயன் பேட்டரிகளில் கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மேற்கூறப்பட்டுள்ள பிரிவுகளின் கீழ் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கார்கள் இந்திய சாலைகளில் இயங்கிக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதில் ஒரு லட்சம் கார்கள் வரையில் திரும்பப்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
விற்பனையிலும் வீழ்ச்சி
இதற்கு முன்னர், நவம்பர் 15, 2018 முதல் ஆகஸ்ட் 12, 2019 வரையில் உற்பத்தி செய்யப்பட்ட 40,618 வேகன் ஆர் மாடல் கார்களை மாருதி சுசூகி நிறுவனம் திரும்பப்பெற்றது குறிப்பிடத்தக்கது. கார்களின் விற்பனையைப் பொறுத்தவரையில், எக்ஸ்.எல்.6 கார்களின் மாதாந்திர விற்பனை எண்ணிக்கை 4,200 யூனிட்டுகளாகவும், எர்டிகா கார்களின் விற்பனை எண்ணிக்கை 7,000 யூனிட்டுகளாகவும் இருந்தது. எனினும், சியாஸ் கார் விற்பனை நவம்பர் மாதத்தில் சரிவைச் சந்தித்துள்ளது. 62 சதவிகித சரிவுடன் 1,148 சியாஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன.
திரும்ப பெறும் கொள்கை
இவ்வாறு பாதிக்கப்பட்ட வாகனங்களில் ஜனவரி 1, 2019 முதல் நவம்பர் 21, 2019 வரை உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2012ம் ஆண்டு இந்தியாவின் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களின் சங்கம் சியாம், திரும்ப அழைக்கும் கொள்கையை அறிவித்ததிலிருந்து உள்ளூர் சந்தைகளில் 3,007,661 வாகனங்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.