இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி. இவர் கால் பதிக்கும் துறை எல்லாம் வெற்றி தான். எப்படி இவர் மட்டும் தொடங்கும் எல்லா தொழிலிலும் வெற்றி பெற முடிகிறது என்பது தான் லட்சக்கணக்கான மக்கள் ஆச்சர்யப்படும் ஒரு விஷயம். ஏராளமான தொழில்முனைவோருக்கும் முன் உதாரணமாக இருப்பவர் முகேஷ் அம்பானி.
தொழில் தொடங்குவது, அதனை எப்படி மக்களிடம் சேர்த்து வெற்றி பெறுவது, ஒரு தொழிலை எப்படி தக்க வைப்பது என அவ்வப்போது முகேஷ் அம்பானி கூறும் அறிவுரைகள் காலத்திற்கும் நிலைத்து நிற்பவை. அந்த வகையில் தன்னுடைய மருமகனும் பிராமல் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான ஆனந்த் பிராமலுக்கு முகேஷ் அம்பானி வழங்கிய ஒரு முக்கியமான அறிவுரை தான் இன்று தொழில் உலகில் பேசு பொருளாக இருக்கிறது.

அண்மையில் ஆனந்த் பிராமல் ஒரு கலந்துரையாடலின் போது ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் எவ்வாறு செயல்பட வேண்டும் என தன்னுடைய மாமனார் தனக்கு வழங்கிய அறிவுரையை பகிர்ந்துள்ளார். அப்போது 2012ஆம் ஆண்டு, ஆனந்த் பிராமலுக்கு 26 வயது. அந்த சமயத்தில் முகேஷ் அம்பானி அவரிடம், "உன் கைகளை அழுக்காக்கி கொள்" (Get your hands dirty) என கூறினாராம். அதாவது ஒரு ஏசி அறையில் அமர்ந்து கொண்டு உத்தரவுகளை மட்டும் பிறப்பிக்காமல், களத்தில் இறங்கி நேரடியாக வேலை செய்ய வேண்டும் என்பதை தான் முகேஷ் அம்பானி அவ்வாறு கூறினாராம்.
ஒரு தொழிலின் வெற்றி அதன் அலுவலக அறைகளில் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. வாடிக்கையாளர்களை நேரில் சந்திப்பது, நிறுவனத்தின் அன்றாட செயல்பாடுகளை கவனிப்பது மற்றும் ஊழியர்கள் சந்திக்கும் சவால்களை புரிந்துகொள்வதுதான் ஒரு தலைவனுக்கு அழகு என கூறினாராம் அம்பானி.

ஒரு தொழிலை ஆழமாக புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அதன் ஒவ்வொரு நிலையிலும் நீங்களே நேரடியாக ஈடுபட்டு, சிக்கல்களை எதிர்கொண்டு தீர்வுகளை காண வேண்டும். தொழிலை வெளியில் இருந்து ஆலோசகராக பார்ப்பதற்கும், அதை ஒரு தொழிலதிபராக நின்று உருவாக்குவதற்கும் பெரிய வித்தியாசம் உண்டு இந்த பாடத்தை நான் என் மாமனாரிடம் இருந்து கற்று கொண்டேன் என ஆனந்த் பிராமல் கூறியுள்ளார்.
குறிப்பாக comfort zoneஇல் இருந்து வெளியே வர வேண்டும் என்ற அறிவுரை தன்னை இன்னமும் மெருகேற்றியது என பிராமல் கூறுகிறார். சமீப காலமாக சமூகவலைதளங்களில் ஷார்ட்ஸ், ரீல்ஸ்களை பார்த்துவிட்டு பலரும் குறுகிய காலத்தில் பெரும் வெற்றியை அடையத் துடிக்கின்றனர். ஆனால், ஒரு தொழிலை உருவாக்கி வெற்றி பெற களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும் என்ற முகேஷ் அம்பானியின் வார்த்தைகள் இளம் தொழில் முனைவோர் பலருக்கும் ஊக்கம் தருவதாக அமைந்துள்ளது.
தற்போது பிராமல் குழுமத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் ஆனந்த் பிராமல், பிராமல் ரியால்டி எனப்படும் ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் பிராமல் ஃபைனான்ஸ் நிதி நிறுவனம் ஆகியவற்றிலும் முக்கிய பொறுப்பு வகிக்கிறார். பிராமல் அறக்கட்டளை மூலம் சுகாதாரம், கல்வி மற்றும் கிராமப்புற மேம்பாடு எனப் பல களப்பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். இவரது மனைவி ஈஷா அம்பானி, முகேஷ் அம்பானியின் செல்ல மகள் அவர் ரிலையன்ஸ் ரீடெய்ல் பிரிவு தலைவராக செயல்பட்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications

