பேடிஎம் பெரும் நம்பிக்கையுடன் இந்தியப் பங்குச்சந்தையில் மிகப்பெரிய ஐபிஓ வெளியிட்டது, ஆனால் யாரும் எதிர்பார்க்காத நிலையில் ஐபிஓ-வின் கடைசி நாளில் தான் முட்டி மோதி பங்குகளை விற்பனை செய்தது.
மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடும் நாளில் தள்ளுபடி விலையில் பட்டியலிடப்பட்டு 2 நாள் தொடர்ந்து சரிந்ததில் ஒரு பங்கு விலை 2150 ரூபாயில் (ஐபிஓ விலை) இருந்து திங்கட்கிழமை வர்த்தகத்தில் 1271 ரூபாய் வரையில் சரிந்தது. 1 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பீட்டு அளவீட்டையும் இழந்தது.
இந்நிலையில் சர்வதேச தரகு நிறுவனமான Macquiare 2வது முறையாக அதுவும் காலாண்டு முடிவுகள் வெளியிட்ட பின்பு பேடிஎம் நிறுவனத்தின் டார்கெட் விலையை 1200 ரூபாயாகக் குறைத்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் பேடிஎம் மீதான நம்பிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது.
பேடிஎம் நிறுவனம்
பேடிஎம் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2நாள் தொடர் சரிவில் இருந்த காரணத்தால் இந்நிறுவனத்தின் ஐபிஓ முதலீட்டாளர்கள் அதிகப்படியான நஷ்டத்தை எதிர்கொண்டனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை புதிய முதலீடுகளால் பேடிஎம் நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர துவங்கியுள்ளது.
Macquiare நிறுவனம்
Macquiare நிறுவனம் அறிவித்த பேடிஎம் நிறுவனத்தின் டார்கெட் விலையான 1271 ரூபாய் அளவீட்டைத் தொட்டு உள்ள காரணத்தால் புதிய முதலீடுகள் குவியத் துவங்கியுள்ளது. இதனால் இன்றைய வர்த்தகத்தில் பேடிஎம் நிறுவன பங்குகள் கிட்டதட்ட 9 சதவீதம் வளர்ச்சி அடைந்து ஒரு பங்கு விலை 1,494 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
தோல்விக்கு என்ன காரணம்..?
பேடிஎம் நிறுவனத்தின் இந்த மோசமான ஐபிஓ இந்த நிறுவனத்திற்கு மட்டும் அல்லாமல் அடுத்தடுத்து ஐபிஓ வெளியிடக் காத்திருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் பின்டெக் நிறுவனங்களை அதிகளவில் பாதிக்கிறது. சரி பேடிஎம் நிறுவனத்தின் இந்த ஐபிஓ தோல்விக்கு என்ன காரணம்..?
பொறுமை
முதலில் பேடிஎம் முதலீட்டாளர்கள் பொறுமை காக்க வேண்டும், இந்நிறுவன முதலீட்டில் மற்றும் பங்கு வர்த்தகத்தில் அதிகப்படியான நிலையற்ற தன்மை இருக்கும் காரணத்தால் முதலீட்டாளர்கள் நிதானமாகவும் பொறுமையுடனும் கையாள வேண்டும் என ஹெம் செக்யூரிட்டிஸ் பண்ட் மேனேஜர் தெரிவித்துள்ளார்.
பின்டெக் நிறுவனங்கள்
பேடிஎம் நிறுவனத்தின் தோல்வியால் பின்டெக் நிறுவனத்தின் மதிப்பீடு குறையுமா என்பது தான் தற்போது அனைவரின் முக்கியக் கேள்வியாக உள்ளது. இந்திய பின்டெக் நிறுவனங்கள் மத்தியில் பேமென்ட் சேவை மூலம் வருமானம் மற்றும் லாபம் பார்க்கும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.
பேடிஎம் கேள்விக்குறி
இதனாலேயே பேடிஎம் நிறுவனத்தின் வர்த்தக மாடல் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கேள்விக்குறியாக விளங்குகிறது. இதேபோல் பேடிஎம் உட்படப் பல முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் எப்போது லாபம் ஈட்டும் இன்றளவும் கேள்விக்குறியாகவே உள்ளது.
யூபிஐ பேமெண்ட் தளம்
இந்தியாவில் யூபிஐ தான் மிகப்பெரிய பேமெண்ட் தளமாக உருவெடுத்துள்ளது, இதேவேளையில் இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான பேமெண்ட் நிறுவனங்கள் அனைத்தும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ யூபிஐ-யை சார்ந்து தான் உள்ளது.
ஜீரோ-MDR
யூபிஐ மூலம் பேமெண்ட் செய்யும் போது எவ்விதமான கட்டணமும் இல்லை என்பதால் பேடிஎம் நிறுவன வாடிக்கையாளர்கள் இத்தளத்தில் அதிகம் பயன்படுத்தும் பேமெண்ட் சேவைக்கு zero-MDR (merchant discount rate) நடைமுறையில் இருக்கும் காரணத்தால் இதில் இருந்து வருமானம் ஈட்டுவது இல்லை. இது பேடிஎம் ஐபிஓ முதலீட்டாளர்களுக்கு முக்கியக் கேள்வியாக மாறியுள்ளது.
கட்டணம் தேவை
இந்தச் சூழ்நிலையில் பேடிஎம் தோல்விக்குப் பின்பு பேடிஎம் உட்பட அனைத்து இந்திய பின்டெக் நிறுவனங்களும் யூபிஐ சேவைக்குக் கட்டணத்தை வசூலிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. இதேவேளையில் IAMAI மற்றும் பின்டெக் நிறுவனங்கள் மத்திய அரசிடம் யூபிஐ சேவைக்கு ஏதேனும் கட்டணத்தை விதிக்கக் கோரிக்கை வைத்துள்ளது.
பேடிஎம், போன்பே
இதேவேளையில் பேடிஎம், போன்பே உட்பட இந்தியாவில் இருக்கும் அனைத்து முன்னணி பின்டெக் நிறுவனங்களும் மில்லியன் கணக்கில் வாடிக்கையாளர்களையும், பில்லியன் கணக்கில் பணப் பரிமாற்றத்தைச் செய்து வந்தாலும் பெரிய அளவிலான வருமானத்தை ஈட்டுவது மிகவும் குறைவாகவே உள்ளது.