இந்தியாவில் எரிபொருட்கள் விலையை பாதிக்கும் விதமாக எண்ணெய் உற்பத்தி குறைப்புக்கு செல்ல வேண்டாம் என்று இந்தியா, ஓபெக் நாடுகள் மற்றும் ஒபெக் பிளஸ் நாடுகளை வலியுறுத்தியது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
எரிபொருட்கள் விலையானது கடந்த சில வாரங்களாகவே தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் சர்வதேச சந்தையில் உற்பத்தியானது குறைவாக உள்ளது.
எண்ணெய் உற்பத்தி நாடுகள் அதிக லாபம் அடைவதற்காக உற்பத்தியை குறைத்துள்ளன. இதனால் நுகர்வோர் நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
உற்பத்தி குறைப்பு
கடந்த ஆண்டில் கொரோனா காரணமாக, முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகள், அதிக விலை சரிவினை தடுக்க எண்ணெய் உற்பத்தியை குறைத்தன. இதனால் விலையானது அதிகரிக்கா விட்டாலும் மேற்கொண்டு குறையாமல் இருந்தது. ஆனால் தற்போது உலகளவில் நுகர்வு அதிகரித்து வரும் பட்சத்திலும், உற்பத்தியானது அதிகரிக்கப்படவில்லை.
எரிபொருட்கள் விலை அதிகரிப்பு
தொடர்ந்து கடந்த 10 தினங்களுக்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வருகிறது. மும்பையில் இதுவரை இல்லாத அளவு பெட்ரோல் விலையானது லிட்டருக்கு 97 ரூபாயாகவும், இதே டீசல் விலையானது 88 ரூபாயினையும் தாண்டியுள்ளது. இதற்கிடையில் அதிகரித்து வரும் எரிபொருட்கள் விலை குறித்து, எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
சில மாநிலங்கள் வரி குறைப்பு
இதற்கிடையில் சில மாநிலங்களில் எரிபொருட்கள் விலையை கட்டுக்குள் கொண்டு வர, அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் மாநில அரசுகள் வரி விகிதத்தினை குறைத்துள்ளன. இதில் அசாம் மாநில அரசு லிட்டருக்கு பெட்ரோல் மற்றும் டீசலுக்கு 5 ரூபாய் குறைத்துள்ளது. இதே மேற்கு வங்க மாநில அரசு லிட்டருக்கு 1 ரூபாய் குறைத்துள்ளது.
இனி விலை என்னவாகுமோ
இது தவிர இன்னும் சில மாநிலங்களும் குறைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. இந்த வரி குறைப்புகள் போதுமானதாக இருக்குமா என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது. உண்மையில் இந்த வரி குறைப்போடு மத்திய அரசும் வரி குறைப்பினை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் சர்வதேச சந்தையில் நிபுணர்கள் இன்னும் விலை அதிகரிக்கலாம் என்று கணித்து வரும் நிலையில், இறக்குமதியை அதிகளவில் நம்பியுள்ள இந்தியாவில் இன்னும் விலை உச்சத்தினை தொடலாம். ஏற்கனவே சில பகுதிகளில் 100 ரூபாய்க்கு மேல் சென்றுள்ள நிலையில், இன்னும் எங்கே போய் நிற்குமோ தெரியவில்லை.