தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளின் போது இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என்பதும் இது கடந்த பல ஆண்டுகளாக ஆட்சி மாற்றங்கள் நடந்த போதிலும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1981ம் ஆண்டு முதல் இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு வழங்கப்படுமா? என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து விசைத்தறி மற்றும் கைத்தறி தொழிலாளர்கள் அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலவச வேட்டி சேலை
தமிழ்நாடு அரசு கடந்த 1981ஆம் ஆண்டு முதல் பொது வினியோக அமைப்புகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் மற்றும் பொங்கலுக்கு தேவையான பொருட்களை வழங்கி வருகின்றது. இது ஒவ்வொரு ஆண்டும் நடைமுறையில் இருப்பதால் பொங்கல் தினத்தன்று ஏழை எளிய மக்கள் மகிழ்ச்சியுடன் பொங்கல் திருநாளை கொண்டாடி வந்தனர்.
ஆர்டர்
இந்த நிலையில் பொங்கலுக்கு தரப்படும் வேஷ்டி சேலைகள் ஆறு மாதங்களுக்கு முன்பே அதாவது ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதமே விசைத்தறி மற்றும் கைத்தறி உற்பத்தியாளர்களுக்கு ஆர்டர் கொடுப்பது வழக்கமாக இருந்து வந்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இலவச வேட்டி சேலைகளுக்கான ஆர்டர் விசைத்தறி மற்றும் கைத்தறி உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கவலை
ஆனால் இந்த ஆண்டு ஆகஸ்டு இரண்டாவது வாரம் ஆகியும் இன்னும் அரசு இலவச வேஷ்டி சேலை தயாரிப்பு குறித்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்பதால் விசைத்தறி மற்றும் கைத்தறி தொழில் துறையினர் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக விசைத்தறி மற்றும் கைத்தறி தொழில் மிகப்பெரிய பாதிப்பு அடைந்து உள்ளது என்பதும் பல விசைத்தறி உரிமையாளர்கள் விசைத்தறி இயந்திரங்களை விற்றுவிட்டு கூலி வேலைக்கு சென்று வருவதாகவும் கூறப்படுகிறது.
வேலையிழக்கும் அபாயம்
இந்த நிலையில் விசைத்தறி மற்றும் கைத்தறி தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருந்த இலவச வேட்டி சேலை தயாரிக்கும் பணியும் தற்போது நிறுத்தப்படுமா? என்ற அச்சம் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இலவச வேட்டி சேலை ஆர்டரை தமிழக அரசு தராவிட்டால் பல தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
1.8 கோடி வேட்டி சேலை
இந்த நிலையில் தமிழகத்தில் பொது வினியோகத் திட்டத்தின் மூலம் சுமார் 1.8 கோடி வேட்டி மற்றும் சேலைகள் தயாரிப்படுவதற்கான ஆர்டரை உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டுமென விசைத்தறி மற்றும் கைத்தறி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
உண்ணாவிரத போராட்டம்
தங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதாகவும் விசைத்தறி, கைத்தறி தொழிலாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த நிலையில் தமிழக அரசு இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications