காலையில் எழுந்தவுடன் பிற வேலைகளை செய்கிறார்களோ? இல்லையோ? மொபைலை ஆன் செய்து, வாட்ஸ்அப், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றை ஒரு முறையாவது பார்த்து விட்டு அதன் பிறகுதான் பலர் பல்துலக்கவே செல்கின்றனர். இப்படி நம் அன்றாட வாழ்க்கையோடு ஸ்மார்ட்போன்கள் பின்னி பிணைந்துவிட்டன. ஒரு நாள் ஸ்மார்ட் ஃபோன் இல்லாமல் இருந்தாலும் சிலருக்கு உலகமே ஸ்தம்பித்தது போல் ஆகிவிடும்.
இது போன்ற நபர்களுக்கு பேரிடியாய் ஒரு தகவல் வந்துள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல், கேஸ் விலை உச்சத்தில் ஏறி நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மொபைல் ரீசார்ஜ் கட்டணமும் அதிகரிக்கும் சூழல் நிலவுகிறது. இந்தியாவின் ஒரு சில நகரங்களில் பெட்ரோல் விலை ஏற்கனவே 107 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பெட்ரோல் விலை ஏறினால் கேப் ட்ரைவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், லாரி ஓட்டுநர்கள் தான் கவலைப்பட வேண்டும். மொபைல் ரீசார்ஜ்க்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? என்று தானே யோசிக்கிறீர்கள்.. நம் மொபைலுக்கு சிக்னல் வழங்குவதே ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ள டவர்கள் தான். இந்த டவர்கள் அனைத்தும் தடையின்றி இயங்க மின்சாரமும், டீசலமும் மிக மிக முக்கியம்.

24 மணி நேரமும் டவர் இயங்கினால் தான், நம் மொபைலில் ஃபுல் சிக்னல் கிடைக்கும். ஒரு மொபைல் டவரை பராமரிக்கும் மொத்த செலவில் சுமார் 40% மின்சாரத்திற்கும், டீசலுக்குமே செல்கிறது. அப்படியானால் பார்த்துக் கொள்ளுங்கள்! டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தால் இந்த டவர்களை இயக்குவதற்கான செலவுகளும் தாறுமாறாக அதிகரிக்கும்.
ஆக டெலிகாம் நிறுவனங்கள் சரிவர இயங்க வேண்டுமானால் அதற்கு ஒவ்வொரு பகுதியிலும் நிறுவப்பட்டுள்ள டவர்களை சரிவர இயக்க வேண்டும். நகர்ப்புறங்களில் ஓரளவு மின்சாரத்தை பயன்படுத்தி பராமரிக்கப்படும் டவர்கள், கிராமப்புறங்களிலும் மலைப்பகுதிகளிலும் டீசல் ஜெனரேட்டர்களையே பெரிதும் நம்பி இயங்கி வருகிறது. இது போன்ற சூழலில் தொடர்ந்து அதிகரிக்ககூடிய டீசல் கட்டணத்தால் டெலிகாம் நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக செலவு செய்வதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
தற்போது 3ஜி, 4ஜி எல்லாம் கடந்து 5ஜி நெட்வொர்க் கிடைக்கிறது. 4ஜி நெட்வொர்க்கை விட 5ஜி நெட்வொர்க் டவர்கள் இயங்க அதிக அளவிலான மின்சாரம் தேவைப்படும். ஏற்கனவே டெலிகாம் நிறுவனங்களுக்கு இடையில் நிலவும் போட்டியில் ஒவ்வொரு நிறுவனமும் தங்களுடைய நெட்வொர்க்கை வேகமாக பிற பகுதிகளில் விரிவுபடுத்த செயல்பட்டு வருகின்றன. 5ஜி நெட்வொர்க்கை நாடு முழுவதும் கொண்டு செல்வதற்காக பல விஷயங்களை செய்து வருகின்றன. இது ஒரு புறம் இருக்க தற்போது மின்சார கட்டணமும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. டெலிகாம் நிறுவனங்கள் எப்படி இனி வரும் காலத்தை சமாளிக்க போகிறது என்பதுதான் அடுத்து எழும் கேள்வியாக இருக்கிறது.
பல பிரச்சினைகளை டெலிகாம் நிறுவனங்கள் சந்தித்து வரும் வேளையில், விநியோகத் தட்டுப்பாட்டால் நெட்வொர்க் டவர்களுக்கு தேவைப்படும் உபகரணங்கள், பேட்டரிகள் மற்றும் பிற ஹார்டுவேர் பாகங்களின் விலையும் கணிசமாக உயரத் தொடங்கியுள்ளது.
இதை சமன் செய்யும் பொருட்டு டெலிகாம் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை இதுபோல் டெலிக்காம் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டண உயர்வை அறிவித்தால் டேட்டா பிளான், காலிங் பிளான் என அனைத்து ரீசார்ஜ் பிளான்களின் விலையும் உயரக்கூடும். எப்படி ஒரு பொருளின் விலை உயரும் போது, அது பிற துறைகள் மற்றும் பிற தொழில்களையும் பாதிக்கிறது என்பதற்கு இந்த ரீசார்ஜ் கட்டண உயர்வு ஒரு எடுத்துக்காட்டு.
இதைத்தான் பொருளாதாரத்தில் பாஸ் த்ரு எபெக்ட் என்று கூறுவார்கள். அதாவது ஒரு பொருளின் விலை ஏறும்போது அதை சார்ந்த துறை மற்றும் தொழில்களும் விலை உயர்வை அறிவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும். ஆனால் டெலிகாம் நிறுவனங்களிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரையில் வரவில்லை. ஒரு வேலை டீசல் கட்டணம் தொடர்ந்து அதிகரித்தால் ரீசார்ஜ் கட்டணமும் உயரும் வாய்ப்பு உள்ளது. ரீசார்ஜ் கட்டண உயர்வை எதிர்கொள்ள மக்கள் லாங் டெர்ம் பிளான்களை முன்கூட்டியே போட்டு வைப்பது நல்லது!


Click it and Unblock the Notifications