முக்கிய ஐடி நகரமாக இருக்கும் பெங்களூரில் அவ்வப்போது சில விசித்திர சம்பவங்கள் நடக்கும். மக்கள் அதனை சோசியல் மீடியா தளங்களிலும் பகிர்வார்கள். அவர்களுடைய போஸ்ட் விரைவில் பிரபலமடையும். அப்படித்தான் இன்றும் ஒரு போஸ்ட் தீயாய்ப் பரவி வருகிறது. அதில் பெங்களூரில் பணிபுரியும் ஒரு ஊழியர் சொந்த ஊரிலேயே இருந்திருக்கலாம். லட்சங்களில் சம்பளம் வாங்கியும் பணம் இல்லாதது போலவே உணர்கிறேன் என்று கூறியிருந்தார்.
பெங்களூரில் பணிபுரியும் ஒரு கார்ப்பரேட் ஊழியர் சமீபத்தில் ஒரு ரெட்டிட் பதிவை பகிர்ந்திருந்தார். அதில் அவர், "நான் சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் பணிபுரிந்து வந்தேன். மாதம் ரூ.1.4 லட்சம் வரையில் சம்பளம் கிடைத்தது. இந்தச் சம்பளத் தொகையை கேட்கும்போது உங்களுக்கும் ஆச்சரியமாக தோன்றும். இருந்தும் மாத இறுதியில் பணமே இருக்காது. டயர் 1 நகரங்களில் வாழ்க்கைச் செலவுகள் அதிகமாக இருக்கிறது. ஆனால் என் சொந்த ஊரான உதைப்பூரில் இப்படிப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டதே இல்லை. இங்கு அமேசான் ஆர்டர்கள், அவ்வப்போது வசதிக்காக செய்யும் செலவுகள், திடீர் ஷாப்பிங் போன்ற பல செலவுகள் இருக்கிறது.
இதில் ரூ.1.4 லட்சம் வரை மாத வருமானம் பெற்றாலும், அவை எப்படி கரைந்து போகிறது என்பது கண்ணுக்கே தெரியாமல் போய்விடுகிறது. இதற்கிடையில் சிரமப்பட்டு சிறு தொகையை சேமித்து வைத்தாலும் மனதளவில் ஒன்றுமே இல்லாதது போல் சோர்வாகவே தோன்றும்.

பெங்களூரில் ரூ.1.4 லட்சம் சம்பளம் பெறும்போது தனக்கு எவ்வளவு செலவுகள் இருந்தது என்பதையும் கூறியிருந்தார். ஒரு பெட்ரூம் மட்டுமே கொண்ட வீட்டிற்கு மாதம் 30,000 ரூபாய் வாடகை, மளிகை பொருட்களுக்கு ரூ. 6,000, வீட்டில் வேலை செய்ய வரும் நபருக்கு மாதம் ரூ.3,000, வைஃபைக்கு மாதம் ரூ.3000, டெலிவரி அப்ளிகேஷன்களுக்கும் மாதம் ரூ.7000, வாடகை கார் மற்றும் வார இறுதி நாட்களில் செய்யப்படும் பொழுதுபோக்கு செலவிற்கு ரூ.13,000 ஆகும்.
இதனால் நான் என் சொந்த ஊருக்கு திரும்ப நினைத்தேன். உதைப்பூருக்கு சென்று ஆரம்பத்தில் ரூ.40,000 மட்டுமே சம்பாதித்தேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள்! உண்மையில் அங்கு இருக்கும் போது நான் பணக்காரனாக உணர்கிறேன்", என்று பதிவிட்டிருந்தார்.
இவருடைய பதிவு பகிரப்பட்டதிலிருந்து பலர் கமெண்ட் செய்ய தொடங்கினர். அதில் ஒரு பயனர், "நானும் டயர் 1 நகரத்தில் தான் பணிபுரிந்து வந்தேன். இப்போது அங்கு இருக்க பிடிக்காமல் என் சொந்த கிராமத்திற்கே வந்து விட்டேன். இனி இந்தியாவில் எந்த ஊருக்கும் நான் திரும்பி செல்ல போவதில்லை. என் ஊரில் கிடைக்கும் சம்பளமே போதும். அதை என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் செலவு செய்ய முடிவு செய்திருக்கிறேன்", என்று கமெண்ட் செய்திருந்தார்.
மற்றொரு பயனர்," 2023-ஆம் ஆண்டில் என் வேலையை ரிசைன் செய்தேன். இப்போது என் கிராமத்தில் இருக்கிறேன். கொல்கத்தாவில் நான் பணிபுரிந்த போது அங்கும் செலவுகள் அதிகமாகவே இருந்தது. எனவே சம்பளம் பற்றிய கவலையில்லாமல் வாழக்கூடிய ஒரே இடமாக எனக்கு தெரிந்தது என்னுடைய கிராமம்தான். அதனால் என் ஊருக்கே திரும்பி விட்டேன். என் வாழ்நாளில் நான் எடுத்த மிகச்சிறந்த முடிவுகளில் இதுவும் ஒன்று", என்று கமெண்ட் செய்திருந்தார்.
மற்றொரு நபரோ, "உங்கள் சொந்த கிராமத்தில் உங்களுக்கென சொந்த வீடு, உங்களைப் பார்த்துக் கொள்ள குடும்பம், இலவசமாக சமைத்து தர ஆட்கள் இருக்கின்றனர். நீங்கள் வெளியூரில் தங்கி வேலை பார்க்கும்போது இதெல்லாம் கிடைக்காது. எனவே நீங்கள் இந்த செலவுகளையும் கணக்கு போட்டு பார்க்க வேண்டும்", என்று சுட்டிக் காட்டியிருந்தார்.
இன்னொருவர், "ஒரு பெருநகரத்திலிருந்து சொந்த ஊருக்கே திரும்பும் போது நமக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். ஏன் தெரியுமா? சிறு கிராமமாக இருக்கும் பட்சத்தில் அங்கு சுற்றிப் பார்ப்பதற்கோ, செலவு செய்வதற்கோ அவ்வளவாக எதுவும் இருக்காது. இதனால் இயல்பாகவே நீங்கள் வீட்டில் இருக்க வேண்டிய சூழல் ஏற்படும். சிலர் வயல் வாய்க்கால் என இயற்கையோடு ஒன்றிவிடுவார்கள். ஆனால் பெரு நகரங்களில் பிறர் செய்யும் செலவை பார்த்து அவர்களுடன் இணைந்து அதிகமாக செலவு செய்யத் தொடங்கி விடுவோம். இதுவும் நம் பர்ஸ் காலியாவதற்கு ஒரு காரணம்", என்று கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications